யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் திங்கட்கிழமை
2014-09-01




முதல் வாசகம்

இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திருப்பாடல் 119: 97-98. 99-100. 101-102

7 ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன். 98 என் எதிரிகளை விட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது. பல்லவி

99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளவனாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்; 100 முதியோர்களை விட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். பல்லவி

101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். 102 உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30

அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப் பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ``இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், ``நீங்கள் என்னிடம், `மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, `கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது'' என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்றார்'' (லூக்கா 4:24)

இயேசு வாழ்ந்து பணிபுரிந்த பாலஸ்தீன நாட்டின் வட பகுதி கலிலேயா. அங்கே இயேசு யூதர்களின் தொழுகைக் கூடங்களில் கற்பித்தார். பின் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்து வந்து, அங்கே தொழுகைக் கூடத்தில் மக்களுக்குப் போதித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் எசாயா இறைவாக்கினர் எழுதிய ''ஆண்டவரின் ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க அவர் என்னை அனுப்பியுள்ளார்'' (காண்க: எசா 61:1-2) என்னும் பகுதியை அவர் மக்கள்முன் வாசித்து, அதில் கூறப்பட்டவை தமக்குப் பொருந்தும் என அவர்களுக்குக் காட்டுகிறார். அதைக் கேட்ட மக்கள் சிலர் வியப்புறுகின்றார்; அவருடைய அறிவுத் திறன் கண்டு அவரைப் பாராட்டுகின்றனர் (காண்க: லூக் 4:22). வேறு சிலரோ இயேசுவை எதிர்க்கின்றனர். தம் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதர் இவ்வளவு திறமையாகப் பேசுவது எப்படி என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இயேசு அவர்களது நம்பிக்கையின்மையைச் சுட்டிக் காட்டுகிறார். பண்டைக் காலத்தில் எலியா, எலிசா என்னும் இறைவாக்கினர்கள் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தார்கள்; நோயாளருக்குக் குணம் நல்கினார்கள் (காண்க: 1 அர 17; 2 அர 4). இயேசுவும் அவ்வாறே புதுமைகள் நிகழ்த்துவார். ஆனால் இறைவாக்கினர் வழியாகக் கடவுளே பேசினார் என்பதைப் பல மக்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அதுபோலவே இயேசுவும் எதிர்ப்பைச் சந்திப்பார்.

இயேசுவின் சொற்களைக் கேட்டதும் தொழுகைக் கூடத்தில் இருந்தவர்கள் சீற்றங் கொண்டு அவரை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயற்சி செய்கின்றனர். நாசரேத்து மலை உச்சியில் உள்ள நகரம். அதன் தெற்குப் பகுதியில் பாறை உயர்வுகள் உண்டு. அங்கே இயேசுவைக் கொண்டு சென்று அவரைக் கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து நடந்து போய்விடுகிறார் (லூக் 6:28-30). இயேசுவின் போதனையை ஏற்பவர்களும் மறுப்பவர்களும் இன்றைய உலகிலும் உண்டு. சிலர் இயேசுவை ஒரு பெரிய போதகராக மட்டுமே காண்பார்கள். ஆனால் கடவுளின் செய்தியை நமக்கு அறிவித்து நம்மைக் கடவுளிடம் இட்டுச் செல்ல இயேசு வந்தார் என நாம் நம்புகிறோம். கடவுளிடமிருந்து வந்த இயேசு கடவுளின் மகனாகத் தம்மை அடையாளம் காட்டுகிறார். அவர் வழியாக நாம் இறை வாழ்வில் பங்கேற்கிறோம். அதற்கு ஒரே நிபந்தனை நாம் இயேசுவை முழுமையாக நம்பி ஏற்க வேண்டும்; அவருடைய போதனையை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, திறந்த உள்ளத்தோடு உம்மை அணுகி வர எங்களுக்கு அருள்தாரும்.