யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் வியாழக்கிழமை
2014-08-28

புனித அகுஸ்தீன்




முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.
திருப்பாடல் 145: 2-3. 4-5. 6-7

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. -பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். -பல்லவி

6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். 7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம் கூறியது: ``விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்' என்றார்'' (மத்தேயு 24:45)

கடவுள் நமக்குப் பல பொறுப்புக்களைத் தந்துள்ளார். குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளை வளர்த்து நல்ல மனிதர்களாக அவர்களை உருவாக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளனர். திருச்சபையில் தலைவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை நல்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பைப் பெற்றுள்ளனர். அதுபோலவே பரந்த உலக சமூகத்திலும் அரசியல், கல்வி, மருத்துவம், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் தலைவர்களாய் இருப்போர் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். இவர்கள் எல்லாரும் தங்கள் பொறுப்பைச் செயல்படுத்துவதில் தன்னலம் துறந்து பிறர் நலம் நாட வேண்டும் என்பது தெளிவு. இயேசு இத்தகைய பொறுப்பை ஒரு கதை வழி விளக்குகின்றார். ''நம்பிக்கைக்குரிய பணியாளர்'' என்னும் அக்கதையில் ஆழமான பல கருத்துக்கள் உள்ளன (மத் 24:45-51). தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வு இக்கதையில் துலங்குகிறது என்பர் அறிஞர். ''வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாற'' அமர்த்தப்படுகிறார் ஒரு பணியாளர்; அவர் ''நம்பிக்கைக்கு உரியவர், அறிவாளி'' (காண்க: மத் மத் 24:45). தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையாள்களுக்குத் தேவையான உணவு அளித்து, அவர்களைப் பாதுகாத்துப் பேணும் செயலை அவர் பொறுப்போடு ஆற்ற வேண்டும். தொடக்க காலத் திருச்சபையில் யூத-கிறிஸ்தவர்களும் பிற இனக் கிறிஸ்தவர்களும் இருந்தனர். யூதர்கள் பிற இனத்தாரோடு சேர்ந்து உணவருந்துவதைத் தவிர்த்தனர். ஆனால் எல்லா மனிதரும் கடவுள்முன் சமமே என்னும் இயேசுவின் போதனையைக் கிறிஸ்தவர்கள் துணிச்சலோடு நடைமுறைப்படுத்தவில்லை. இயேசுவின் சீடர்களில் முதல்வராக விளங்கிய பேதுரு கூட இதில் நல்ல முன்னுதாரணமாகச் செயல்படவில்லை என பவுல் அவரைக் கடிந்துகொண்டார் (காண்க: கலா 2:11-14). மேலும், சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும்போது ''உயர்ந்தோர்'' ''தாழ்ந்தவர்களோடு'' (''தாழ்த்தப்பட்டர்களோடு'') கூடி இருந்து உணவருந்த மறுத்தனர். ஆனால் இயேசுவோ மனிதரிடையே ஏற்றத் தாழ்வுகள் கற்பிப்பதைக் கடிகின்றார். இது இயேசு கூறிய ''திருமண விருந்து உவமை''யிலிருந்து தெளிவாகிறது. அங்கே ''அழைக்கப்பட்ட'' விருந்தினரோடு தெருக்களிலிருந்து கூட்டிவரப்பட்ட ஏழைகளும் சம நிலையில் அமர்த்தப்பட்டு விருந்தில் பங்கேற்கின்றனர். ஆக, தொடக்க காலத் திருச்சபை சமத்துவ உணர்வை வளர்த்தது.

எல்லாருக்கும் ''வேளாவேளை உணவு பரிமாறுவது'' (மத் 24:45) இன்னொரு பொருளிலும் புரிந்துகொள்ளப்படலாம். அதாவது, கடவுளாட்சி பற்றி இயேசு நமக்கு வழங்கிய போதனை உண்மையான ''உணவு''. அந்த உணவு எல்லா மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். அந்த உணவை அனைவருக்கும் வழங்குகின்ற பொறுப்பு நமக்கு உண்டு (காண்க: 1 கொரி 3:2; யோவா 6:25-33). கடவுள் மனித குலத்திற்குப் பகிர்ந்தளிக்க நம்மிடம் ஒப்படைத்த உணவையும் பிற வளங்களையும் அவர்களோடு பகிர்ந்துகொள்ளாமல் நாம் பாழடித்தால் நாம் தண்டனைக்கு உள்ளாவோம் (காண்க: மத் 24:48-51). நம்பிக்கைக்கு உரிய பணியாளர்களாகச் செயல்படவும், அறிவோடு நடக்கவும் கடவுள் நம்மை அழைக்கின்றார். அவரிடமிருந்து பெற்ற இம்மாபெரும் பொறுப்பை நாம் நன்முறையில் நிறைவேற்றினால் அவரே நமக்குக் கைம்மாறு வழங்குவார். அதுவும் கடவுளின் கொடையே (மத் 24:45-47).

மன்றாட்டு:

இறைவா, நம்பிக்கைக்கு உரிய பணியார்களாக நாங்கள் செயல்பட அருள்தாரும்.