யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் சனிக்கிழமை
2014-08-23

புனித ரோசா




முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7

அந்நாள்களில் மனிதர் ஒருவர் கோவிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ `இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி' கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல் போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று. நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன். ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது. பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று. அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அவர் உரைத்தது: ``மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நம் நாட்டில் ஆண்டவரது மாட்சி குடிகொள்ளும்.
திருப்பாடல் 85: 8-9. 10-11. 12-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மறைநூல் அறிஞரும் பரிசேயரும்...செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்' என்றார்'' (மத்தேயு 23:2,3)

சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. சிலர் மிகுந்த பேச்சு வன்மையோடு உயரிய கருத்துக்களை எடுத்து விளக்குவதில் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூற எப்போதும் தயாராய் இருப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்வில் அந்த அறிவுரையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய முரண்பாடும் இடைவெளியும்தான் இருக்கும். இத்தகைய போக்கினை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார். இயேசுவை எதிர்த்த பரிசேயர் யூத சமயத்தில் சீர்திருத்தம் கொணர விரும்பியவர்கள்தாம். சமய ஒழுங்குகளைப் பொறுத்தமட்டில் பொதுநிலையினருக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என அவர்கள் பாடுபட்டதுண்டு. எனவே, தூய்மைச் சடங்கு சார்ந்த சட்டங்கள் குருக்களுக்கு மட்டுமல்ல, பொதுநிலையினருக்கும் பொருந்தும் என அவர்கள் கற்பித்தனர். ஓய்வு நாளை எல்லாரும் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவர்களது போதனை. எனவே, பரிசேயர் மக்கள்மீது பெரிய பளுவைச் சுமத்தினார்கள் என்பது உண்மையே. இயேசுவும் கூட மக்கள் நன்னடத்தை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என போதித்தார். ஆயினும் இயேசுவின் போதனை தாங்கமுடியாத ஒரு பளு அல்ல. ''என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 11:30).

மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் இயேசுவும் கருத்தாயிருந்தார். ஆனால், பரிசேயரைப் போல இயேசு சமயச் சடங்குகளுக்கு முதன்மையிடம் அளிக்கவில்லை. ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதிலும் இயேசு அக்கறை காட்டவில்லை. மாறாக, சமயச் சட்டங்களும் ஓய்வு நாள் பழங்கங்களும் மக்களுடைய நன்மையைக் கருத்தில் கொண்டே விளக்கப்பட வேண்டும் என்பதில் இயேசு உறுதியாயிருந்தார். சட்டத்தைக் கடைப்பிடிக்காத சாதாரண மக்களைப் பரிசேயர் ''பாவிகள்'' என்றழைத்து ஒதுக்கினார்கள். ஆனால் இயேசுவோ ''பாவிகளைத் தேடி வந்தார்'' (மத் 9:13). கடவுளின் அன்பை எல்லா மக்களோடும் பகிர்ந்திட விழைந்தார். அவர் அறிவித்த இறையாட்சியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் கிடையாது. கடவுள் ஒருவரே அனைவருக்கும் தந்தையாக இருப்பார். மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் முறையில் ஒருவர் ஒருவருக்குச் ''சகோதரர், சகோதரிகளாக'' இருப்பார்கள் (காண்க: மத் 23:8-9). இவ்வாறு சமத்துவம் நிலவுகின்ற சமுதாயத்தை உருவாக்க வந்த இயேசு பணிசெய்வதிலேயே முனைந்திருந்தார். அவருடைய பணி வாழ்வு நமக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாக உள்ளது. ''உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்'' என்று அறிவித்த இயேசுவின் சொற்கள் நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 23:11).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் சொல்லும் செயலும் முரண்பட்டிருக்காமல் இசைவுடன் அமைந்திட எங்களுக்கு அருள்தாரும்.