யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் புதன்கிழமை
2014-07-02




முதல் வாசகம்

நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 5: 14-15, 21-24

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார். தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்; நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார். ``உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும் போது நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 7. 8-9. 10-11. 12-13. 16-17

என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன். பல்லவி

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை. 11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. பல்லவி

12 எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை; ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே. 13 எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக் கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ? பல்லவி

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34

அக்காலத்தில் இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், ``இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?'' என்று கத்தினார்கள். அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், ``நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்'' என்று வேண்டின. அவர் அவற்றிடம், ``போங்கள்'' என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர்... அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன'' (மத்தேயு 8:28,30)

கலிலேயா ஏரியின் ''அக்கரை'' என மத்தேயு குறிப்பிடுவது பிற இனத்தார் வாழ்ந்த பகுதியாகும். இவர்கள் இஸ்ரயேல் இனத்தாரிடமிருந்து வேறுபட்டவர்கள். எனவே இரு குழுவினருக்கும் இடையே தொடர்புகள் இருக்கவில்லை. பிற இனத்தார் தூய்மையற்றவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் என்றும் கருதப்பட்டனர். மேலும், அப்பகுதியில் கல்லறைகள் இருந்தன எனவும் மத்தேயு கூறுகிறார். கல்லறை என்பதும் தீட்டு நிறைந்த இடமே. அங்கே தீய ஆவிகள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினார்கள். பன்றிகளும் தூய்மையற்ற மிருகங்களாகக் கருதப்பட்டன. எனவே, இயேசு சென்ற ''அக்கரை'' உண்மையிலேயே இஸ்ரயேலர் யாரும் செல்லக் கூடாத பகுதிதான். கல்லறைப் பகுதியிலிருந்து வந்த பேய்பிடித்த மனிதர் இருவரும் இயேசு யார் என அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி, ''இறைமகனே, இங்கு உமக்கு என்ன வேலை?'' எனக் கேட்கின்றார்கள் (மத் 8:29). மனிதர்கள் இயேசு யார் என அடையாளம் காண இயலாமல் இருக்கும்போது ஆவிகள் மட்டும் இயேசுவின் உண்மையான பண்பை (''இறைமகன்'') தெரிந்துகொள்வதாக நற்செய்தியில் பல குறிப்புகள் உண்டு.

ஆனால் இயேசு தீய ஆவிகளைத் தம் அதிகாரத்தால் துரத்திவிடுகிறார். அவை தூய்மையற்ற பன்றிக் கூட்டத்திற்குள் தங்களை அனுப்பும்படி கேட்க, இயேசு ''போங்கள்'' என்னும் ஒரே வார்த்தையால் அவற்றைத் துரத்திவிடுகிறார். இவ்வாறு தீய சக்திகளை இயேசு முறியடிக்கிறார். இயேசு தொடங்கிய கடவுளாட்சியை முறியடிக்க தீய சக்திகள் முயன்றாலும் அவை தோல்வியைத்தான் தழுவும். இயேசுவைக் ''கடவுளின் மகன்'' என ஏற்று நம்பிக்கையோடு வாழ்கின்ற மக்கள் தீய சக்திகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இறுதி வெற்றி நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கடவுளையும் அவர் அனுப்பிய தம் திருமகன் இயேசுவையும் நம்பிக்கையோடு ஏற்று வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். பேய்பிடித்தவர்களிடமிருந்து பேய்களை இயேசு துரத்திவிட்ட செய்தியைக் கேட்ட ''அக்கரை'' மக்கள் ''இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்'' (மத் 8:34). இஸ்ரயேல் மக்களுக்கு நற்செய்தி அறிவித்த இயேசு பிற இன மக்கள் வாழ்ந்த பகுதியில் அதிகமாகப் பணி செய்யவில்லை என மத்தேயு குறிப்பிடுகிறார். ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு ''எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க'' இயேசு தம் சீடரை அனுப்பினார் (காண்க: மத் 28:19). இயேசுவின் வல்லமையில் நாம் நம்பிக்கை கொண்டால் தீய சக்திகள் நமக்குத் தீங்கு இழைக்கமுடியாது.

மன்றாட்டு:

இறைவா, தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.