யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)
திருவழிப்பாட்டு ஆண்டு A (29-06-2014)திருப்பலி முன்னுரை - 1
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! மெசியாவும், வாழும் கடவுளின் மகனுமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
இன்று நாம் புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கினறோம்.
புனித பேதுரு, புனித பவுல் இருவருமே இரு துருவங்களாக,
அதே வேளையில் திருச்சபையின் சரிநிகர் வணக்கம் பெறும் இரு தூண்களாகத் திகழ்வதை உணர்ந்து, வியந்து இறைவனைப் போற்றுவோம்.
முதல் வாசகம்ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11 அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, ``உடனே எழுந்திடும்'' என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், ``இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், ``உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்'' என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார். பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, ``ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்'' என்றார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.திருப்பாடல் 34: 1-2. 3-4. 5-6. 7-8
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
இரண்டாம் வாசகம்இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையேதிருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18 அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலிஅல்லேலூயா, அல்லேலூயா!உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளாஅல்லேலூயாநற்செய்தி வாசகம்+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார். - இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும். “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா” என்று மொழிந்த கடவுளின் மகனான இயேசுவே,எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, கிறிஸ்துவின் திருவுடலாகிய நற்கருணை குறித்துக்காட்டும் அன்பு, ஒற்றுமை, அன்பிய சமூக வாழ்வு ஆகியவற்றை அர்த்தமுள்ள விதத்திலே வாழுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.வாழும் கடவுளின் மகனான இயேசுவே,நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை ஆண்டவராகவும், இறைமகனாகவும் அறிக்கையிடும் பேறுபெற்றவர்களாக எங்களையும் மாற்றினீரே. உமக்கு நன்றி. எங்கள் விசுவாச அறிக்கை செயல் வடிவில் மாற்றம் பெற அருள்தாரும். இந்த நாள் முழுதும் எனது ஒவ்வொரு செயலாலும் உம்மை என் ஆண்டவராக அறிக்கை இட்டு வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மனநலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.நீதியை நிலைநாட்டும் இறைவா,உம்மடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் உமது திருமகனாம் இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும் மதிப்பையும் உணர்ந்து வாழவும் இறைவார்த்தையாலும் நற்கருணையாலும் ஊட்டம் பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.ஆண்டவராகிய இயேசுவே,உம்மைப் போற்றுகிறோம். இருவேறு துருவங்களாய் இருந்த பேதுருவையும், பவுலையும் உமது திருத்தூதர்களாக அழைத்து, பெருமைப்படுத்தினீரே, உமக்கு நன்றி. அவர்களைப் போல நாங்களும் உமது பெருமைமிகு சாட்சிகளாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.நலிந்தோரைக் கண்ணோக்குகின்ற தந்தையே!உலகில் பல்வேறு சவால்களுக்குள்ளும், துன்பங்களுக்குள்ளும் அகப்பட்டு கண்ணீரோடும், கவலையோடும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் அமைதியோடும், மகிழ்வோடும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |
இன்றைய சிந்தனை
''இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'
என்று உரைத்தார்'' (மத்தேயு 16:15-16)
மன்றாட்டு:இறைவா, உம் அன்பை எந்நாளும் துய்த்து வாழ்ந்திட அருள்தாரும். |