யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 7வது வாரம் திங்கட்கிழமை
2014-06-02

புனிதர்கள் மருசலீன் பீட்டர்




முதல் வாசகம்

நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8

அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை நோக்கி, ``நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே'' என்றார்கள். ``அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?'' எனப் பவுல் கேட்க, அவர்கள், ``நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்'' என்றார்கள். அப்பொழுது பவுல், ``யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்'' என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப் பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்
திருப்பாடல் 68: 1-6

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4யஉ கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவிடம், ``இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்'' என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நான் தனியாய் இருப்பதில்லை.

இதய நோய்க்கு சிகிட்சை பெற்று மருத்துவமனையிலிருந்து திருப்பலிக்காக பங்கு ஆலயத்திற்கு வந்ததும் மக்கள் பலர் கேட்டனர், "ஃபாதர் தனியாகவா வந்தீர்கள்" என்று. 'இல்லை, இயேசு என்னும் இன்னொருவரும் என்னோடு வந்தார்' என்றேன். பங்கில் ஒரு பெண். "ஃபாதர், நோயுற்று நடக்க முடியாத என் கணவர், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரவு வந்திறங்குகிறார். எனக்கு திருநெல்வேலியே தெரியாது. இரவில் ரயில் நிலையம் எப்படி போவேன். உற்றார் உறவினர் உதவியைக் கேட்டேன். கிடைக்கவில்லை. தனியே போக பயமாக இருக்கறது" என்றாள். "போ, துணிந்து போ. நீ தனியாக போகவில்லை;. இயேசு உனக்கு முன் உன்னோடு வருவார்" என்றேன். புறப்பட்டுச் சென்றாள். திரும்பி வந்து சொன்னாள், "ஃபாதர், நீங்க சொன்னதுபோல, திருநெல்வேலி ரயில் நிலையம் சென்றேன், ரயில் வரும் இடத்தில் ஒரு இடத்தில் நின்றேன். நான் நின்ற இடத்தில், என் முன்னால் என் கணவர் நடக்க முடியாமல் இறங்கினார். என்ன ஆச்சரியம்! என் அருகில் இரயில் நிலையப் பணியாளருள் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு என் அருகில் நின்றார். அதில் என்; கணவரை அமர்த்தி மிக எளிதில் வெளியே வந்து வீடு வந்து சேர்ந்தேன். உண்மையிலே நான் தனியாக இல்லை. என்னோடு என் இயேசு இருக்கிறார்" என்றாள்.

எத்தனை சந்தர்ப்பங்களில் 'ஐயோ, நான் தனியே இருக்கிறேனே; எனக்கு யாருமே இல்லையே' என்று மனமுடைந்து, நம்பிக்கை இழந்து கடவுளை நோக்கி முறையிட்டிருக்கிறோம். நாம் தனியேஇல்லை. உலகை, துன்பத்தை, மரணத்தை வென்ற இறைவன் இயேசு நம்மோடு இருக்கிறார். மகனே! மகளே! நீ தனியாக இல்லை. நான் உன்னோடு இருக்கும் உன் தெய்வம். என் பெயர் இம்மானுவேல்.இம்மானுவேல் என்றால் கடவுள்நம்மோடு. நான் உன்னை விட்டு விலகுவதில்லை. உன்னைக் கை விடுவதுமில்லை. உன் இயேசு உன்னை தனியே விட மாட்டார்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும்.