யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 6வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-05-27

புனித அகுஸ்தீன்


முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34

அந்நாள்களில் அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப் போட்டார்கள். சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கியபின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, ``நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்'' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்
திருப்பாடல்145: 10-11. 12-13. 21

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடையவேண்டும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். `நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'தந்தையிடமிருந்து நான் அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்... அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்'' (யோவான் 15:26-27)

இயேசு இறந்ததும் சீடர்கள் நம்பிக்கை இழந்துபோயினர். இவ்வளவு காலம் தங்களோடு பேசிப் பழகி நடமாடிய தங்கள் தலைவர் தங்களைத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டாரே என அவர்கள் கலங்கினர். அப்போது இயேசு அவர்களுக்குத் தோன்றி தாம் உயிர்வாழ்வதாக எடுத்துரைத்து அவர்களைத் தேற்றினார். இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்தம் சீடர்களுக்குப் புத்துயிர் வழங்கியது; புதிய தெம்பை ஊட்டியது. இயேசு தம்மை விட்டுப் பிரிந்தாலும் தம்மோடு ஒரு புதிய முறையில் தங்கியிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஏனென்றால் இயேசு அவர்களுக்குத் தூய ஆவியை வாக்களித்தார்.

தூய ஆவி தந்தையிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் புறப்பட்டு வருபவர். அவர் இயேசுவின் சீடர்களுக்குத் துணையாக வருகிறார். அவரே நமக்கு உண்மையை வெளிப்படுத்துகிறார். ''நானே உண்மை'' என இயேசு அறிவித்திருந்தார். கடவுளைப் பற்றியும் கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பு பற்றியும் அமைந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்துவது தூய ஆவியின் வழியாகவே. இவ்வாறு உண்மையை நமக்குத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்ற ஆவி இயேசுவைக் குறித்து ''சான்று பகர்வார்''. அதாவது, தூய ஆவியின் செயல் வழியாக இயேசு நம்மிடையே தங்கி நம்மை வழிநடத்துவதை நாம் உணர்ந்துகொள்வோம். இயேசுவைப் பற்றி அறிவு பெறுகின்ற நாம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். எனவே, தந்தையிடமிருந்து நம்மைத் தேடி வந்த இயேசு, தந்தையிடம் சென்றதோடு நின்றுவிடாமல் நம்மோடு என்றும் தங்கியிருந்து நமக்குக்; கடவுளைப் பற்றிய உண்மையைத் தொடர்ந்து அறிவிக்க தூய ஆவியை அளித்துள்ளதால் நாமும் சான்று பகர்வதற்கான தகுதியையும் பொறுப்பையும் பெறுகின்றோம். கடவுளின் அன்புக்கு நாம் சாட்சிகளாக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புக்குச் சான்று பகர்ந்து இவ்வுலகில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.