யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 4வது வாரம் புதன்கிழமை
2014-05-14

தூய மத்தேயாஸ் அப்போஸ்தலர்


முதல் வாசகம்

அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26

அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது; "அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான். திருப்பாடல்கள் நூலில், "அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!" என்றும் "அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!" என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்." அத்தகையோருள், இருவரை முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா. பின்பு அவர்கள் அனைவரும், "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குறிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்கு பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு காண்பியும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கிறார்
திருப்பாடல் 13: 1-2 3-4. 5-6 7-8

1 அல்லேலூயா! ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! -பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி. -பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்; -பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே-தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15;9-17

.9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். 10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். 11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். 12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. 13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். 15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். 16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். 17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்' என்றார்'' (யோவான் 15:9)

இயேசு வழங்கிய அன்புக் கட்டளையைச் சிலர் ஒரு சுமையாகப் பார்ப்பார்கள். ஆனால் அது நம்மீது சுமத்தப்பட்ட ஒரு பளு அல்ல. இயேசு தருகின்ற அன்புக் கட்டளை உண்மையிலேயே அவர் நமக்குத் தருகின்ற ஒரு ''கொடை''. இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற அன்பை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். அந்த அன்பை நன்றியோடு ஏற்று, நம் வாழ்வில் நாம் ஆழ உணரும்போது, கடவுள் தம் சாயலாக உருவாக்கிய மனிதரை அன்புசெய்வது போல நாமும் அன்பு செய்திட முன்வருவோம். இவ்வாறு கடவுளன்புக்கும் பிறரன்புக்கும் இடையே நிலவுகின்ற ஆழ்ந்த பிணைப்பை நாம் கண்டுகொள்வோம். பிறரை அன்புசெய்யும்போது நாம் கடவுளின் அன்புக்கு இவ்வுலகில் சான்று பகர்கின்றோம். கடவுள் நம்மை அன்பு செய்து, தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது போல நாமும் பிறர்மீது அன்பு கொண்டு அவர்களை நம் சகோதர, சகோதரிகளாக ஏற்க அழைக்கப்படுகிறோம்.

பிறரை அன்பு செய்ய நமக்குத் தரப்படுகின்ற கட்டளை ஒரு கொடை என்றால் அதை நாம் ஒருவர் ஒருவரோடு பகிர்ந்திட வேண்டும். இங்கே இயேசு நமக்கு ஒரு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் உள்ளார். இயேசு கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொண்டு நமக்காகத் தம்மையே பலியாக்கியதால் நாமும் ஒருவர் ஒருவரை அன்புசெய்ய வேண்டும். அதே நேரத்தில் இயேசுவின் அன்பைப் போல நம் அன்பு அமைய வேண்டும். அதாவது, பிறர் வாழ்வு பெற வேண்டும், நிலைவாழ்வில் பங்கேற்க வேண்டும் என்னும் நோக்கோடு நாம் பிறரை அன்புசெய்திட வேண்டும். இந்த அன்பு தன்னலத்தைத் தேடாது; பிறர் நலனில் அக்கறை கொண்டிருக்கும். இந்த அன்பு பொறுமையானது; தீங்கு நினையாது; நன்மை செய்யும்; தற்புகழ்ச்சி கொள்ளாது (காண்க: 1 கொரி 13).

மன்றாட்டு:

இறைவா, இயேசு எங்களை அன்புசெய்ததுபோல நாங்கும் பிறரை அன்போடு அரவணைக்க அருள்தாரும்.