யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2014-05-12

புனிதர்கள் பங்கிராஸ் நெரேயு அக்கலேயு


முதல் வாசகம்

வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18

அந்நாள்களில் பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள். பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். ``நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?'' என்று குறை கூறினர். பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். ``நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன். `பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு' என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன். அதற்கு நான், `வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லையே' என்றேன். இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, `தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே' என்று அக்குரல் ஒலித்தது. இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர். தூய ஆவியார் என்னிடம், `தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்' என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம். அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார். நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது. அப்போது, `யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்' என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?'' என்றார். இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது
திருப்பாடல் 42: 1-2; 43: 3. 4

1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? பல்லவி

43:3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில் இயேசு கூறியது: ``நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றிஇழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப் படியே நான் இப்படிச் செய்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்' என்றார்'' (யோவான் 10:11)

இஸ்ரயேல் மக்களை அன்போடும் பரிவோடும் வழிநடத்திய கடவுள் தம்மை அவர்களுக்கு ஒரு நல்ல ஆயராக வெளிப்படுத்தினார். மக்களும் கடவுள் தங்களைப் பராமரிக்கின்ற நல்ல ஆயர் என்பதை அனுபவித்து உணர்ந்தார்கள். ஆயராக இருந்து தம் மக்களை வழிநடத்திய கடவுள் அவர்களுக்கு உணவு அளித்தார்; அவர்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்தார்; அவர்களை ஒரு மக்களினமாக உருவாக்கினார். இவ்வாறு கடவுளின் அன்பினைத் துய்த்துணர்ந்த மக்கள் கடவுள் தங்களோடு உடனிருந்து தங்கள் இன்பதுன்பங்களில் பங்கேற்றதை அனுபவத்தில் உணர்ந்தார்கள். நல்ல ஆயராகத் தம் மக்களை வழிநடத்திய கடவுள் அம்மக்களுக்காகத் தம் உயிரையும் கொடுப்பார் என்பதை இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார். இயேசுவின் வாழ்வில் துலங்கிய அன்பு பல விதங்களில் வெளிப்பட்டது. இயேசு மக்களுக்குக் கடவுளின் சட்டத்தைக் கற்பித்தார்; அவர் மக்களின் பிணிகளைப் போக்கி அவர்களுக்கு நலமளித்தார்; முறிந்த மனித உறவுகளை அவர் சீர்ப்படுத்தினார். இவ்வாறு மக்களுக்காக வாழ்ந்த இயேசு அவர்களுக்காக இறக்கவும் தயங்கவில்லை.

ஆடுகளை மேய்க்கின்ற ஆயர் அந்த ஆடுகளுக்காகத் தம் உயிரைப் பலியாக்குவது ஓர் அதிசயமான செய்தியாகத்தான் நமக்குத் தென்படும். ஆனால் இயேசுவோ தம் உயிரை நமக்காகக் கல்வாரியில் பலியாக்குகிறார். நம்மேல் கொண்ட எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக அமைகிறது அவருடைய சிலுவைச் சாவு. இயேசு என்னும் நல்ல ஆயர் மற்ற ஆயர்களைப் போல் அல்லாமல் தம் உயிரையே தம் ஆடுகளுக்காகக் கையளிக்கத் தயங்காதவர். இத்தகைய பேரன்பு கொண்ட ஆயர் நம் மீட்பராகிய இயேசு. இந்த இயேசுவையே நாம் நம் மீட்பராகவும் நமக்கு விடுதலை அளிக்கும் வீரராகவும் ஏற்றுள்ளோம். இதுவே நாம் இயேசுவின்மீதும் அவரை நம்மிடையே அனுப்பிய தந்தையாம் கடவுள்மீதும் கொள்கின்ற நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால் நாம் இயேசுவின் அன்பை ஒவ்வொரு நாளும் ஆழமாக உணர்ந்து அனுபவிக்கும் பேறு பெறுவோம். நமக்காகத் தம்மைக் கையளிக்கின்ற இயேசு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார். அதே நேரத்தில் அவரே நமக்குப் புது வாழ்வு அளித்து அந்த வாழ்வில் நாம் இடையறாது நிலைத்து நிற்கின்ற அருளையும் நமக்கு அளிக்கிறார். இவ்வாறு நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற ''நல்ல ஆயர்'' நம்மோடு இருப்பதால் நமக்குக் குறையேதும் இல்லை (காண்க: திபா 23). அவரே நம்மை பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்வார்; நம் தாகத்தைத் தணிப்பார்; நம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்து நமக்குப் புத்துயிர் அளிப்பார். அவர் அளிக்கின்ற உயிர் நம்மைக் கடவுளோடு நிலைவாழ்வில் இணைக்கும் சக்தி கொண்டது. எனவே நம் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும்; நம் உள்ளம் உவகை கொண்டு களித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை அன்போடு வழிநடத்துகின்ற உம்மை நம்பி வாழந்திட எங்களுக்கு அருள்தாரும்.