யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2014-04-28


முதல் வாசகம்

அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31

அந்நாள்களில் விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்: ``ஆண்டவரே, `விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே'. எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாகத் தூய ஆவி மூலம் `வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்' என்று உரைத்தீர். அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உம் தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். இப்போது கூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும். '' இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 2: 1-3. 4-6. 7-9

1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? 2 ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; 3 `அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள். பல்லவி

4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார். 5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்; 6 `என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். பல்லவி

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-8

அக்காலத்தில் பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, ``ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதி யாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார். நிக்கதேம் அவரை நோக்கி, ``வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?'' என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, ``ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு நிக்கதேமைப் பார்த்து, 'காற்று எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்' என்றார்'' (யோவான் 3:8)

இரவு நேரத்தில் இயேசுவைத் தேடிவந்த மனிதர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்; பரிசேயர். இயேசுவைப் பற்றியும் அவர் புரிந்த அருஞ்செயல்கள் பற்றியும் கேள்விப்பட்ட நிக்கதேம் ''இரவில்'' வந்தார் என யோவான் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது (யோவா 3:2). ''இரவு'' என்பது யோவான் நற்செய்தியில் ''நம்பிக்கையின்மை''யைக் குறிப்பதுண்டு; கடவுளிடமிருந்து அகன்றிருக்கின்ற நிலையையும் சுட்டுவதுண்டு. நிக்கதேம் இயேசுவின் போதனையாலும் சாதனையாலும் கவரப்பட்டார். அவருடைய உள்ளத்தில் நம்பிக்கை தளிர்விடத் தொடங்கியிருந்தது என்றாலும் அது நிறைவான நம்பிக்கையாக இன்னும் தழைக்காமலே இருந்தது. அந்நிலையில் நிக்கதேம் இயேசுவிடம் சில கேள்விகள் கேட்டு அதற்கான பதிலைத் தெரிந்துகொள்கிறார். ''மறுபடியும் பிறந்தாலன்றி இறையாட்சியைக் காண இயலாது'' (யோவா 3:3) என இயேசு கூறிதை நிக்கதேம் புரிந்துகொள்ளத் திணறினார். அப்போது இயேசு கடவுளின் செயலை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது என நிக்கதேமுக்குக் கற்பிக்கிறார். நம்மைச் சூழ்ந்திருக்கின்ற காற்று மண்டலத்தில் வீசுகின்ற காற்றை நாம் கண்களால் காணாவிட்டாலும் அது நம் உடலைத் தழுவும்போது நன்றாகவே உணர்கிறோம். காற்றைச் சுவாசிப்பதை நிறுத்திவிட்டால் நம் உயிரே நம்மை விட்டுப் பிரிந்துபோகும். எனவேதான் இறத்தலை ''இறுதிமூச்சு விடுதல்'' என்கிறோம்.

இயேசு காற்று பற்றியும் தூய ஆவி பற்றியும் ஒரே ''மூச்சில்'' ஏன் பேசுகிறார் என நமக்கு வியப்பாக இருக்கலாம். எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் ''காற்று'' என்பதும் ''ஆவி'' என்பதும் ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன (எபிரேயம்: சரயர் கிரேக்கம்: pநெரஅய). ''உயிர் மூச்சு'' என்னும் பொருளும் அதில் அடங்கும். தமிழிலும் இத்தொடர்பு உள்ளதை நாம் காணலாம். எனவே, ''காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது'' என்பது நமக்குப் புரியாத புதிராக உள்ளதுபோல, தூய ஆவி நமக்குப் ''புதுப்பிறப்பு'' அளிக்கிறார் என்பதும் நம் குறுகிய அறிவுக்கு அப்பாற்பட்டது என இயேசு சிலேடையாகக் கூறுவதை இவண் நாம் படித்து மகிழலாம். ஆவியே நம் ''உயிராக'' உள்ளார்; நம் சுவாசமாகவும் நம்மை உயிர்ப்பிக்கின்ற காற்றாகவும் செயல்படுகிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம்மால் உயிர்பெறும் நாங்கள் உமக்காகவே உயிர் வாழ்ந்திட எங்களுக்கு ஆவியின் ஆற்றலைத் தந்தருளும்.