யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா எண்கிழமையில் சனிக்கிழமை
2014-04-26


முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். ``நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்'' என்று கூறினார்கள். அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ``இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது'' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ``உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது'' என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.
திருப்பாடல் 118: 1,14-15. 16,18. 19-21

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்றுரைத்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்' என்றார்'' (மாற்கு 16:15-16)

மாற்கு நற்செய்தி 16:8 என்னும் சொற்றொடரோடு முடிகிறது என்றும், அதற்குப் பின் வருகிற 16:9-20 பகுதி ஒரு பிற்சேர்க்கை என்றும் அறிஞர் கூறுவர். சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு மீண்டும் உயிர்வாழ்கின்றார் என்னும் அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்ட பெண்கள் ''கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்'' என்றும், ''நடுக்கமுற்று மெய்ம்மறந்தவர்களாய் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை'' என்றும் மாற்கு நற்செய்தி முடிவடைவது சிறிது விசித்திரமாகப் படலாம். ஆயினும் அந்நிகழ்ச்சி நமக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது, இயேசுவின் உயிர்த்தெழுதல் இயேசுவின் சீடர்களைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தம் ஆசிரியராக இருந்த இயேசு இறந்தபிறகு எல்லாமே முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இழந்து தளர்ந்துபோயிருந்த சீடர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிகழ்ச்சி இயேசுவின் உயிர்த்தெழுதல். இவ்வாறு அதிர்ச்சியுற்ற பிறகும் இயேசுவைப் பின்சென்றோர் அவர் உயிர்பெற்றெழுந்தார் என நம்புவதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் அவர்களுக்குத் தோன்றி தாம் உயிர்வாழ்வதாக அவர்களுக்கு உணர்த்தியதுதான். அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' (மாற் 16:15).

மாற்கு தம் நூலின் தொடக்கத்தில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எழுத்தில் பதிப்பதாகக் கூறியிருந்தார் (காண்க: மாற் 1:1). இப்போது தம் நூலின் இறுதியிலும் நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்படவேண்டிய தேவையை எடுத்துக்காட்டுகிறார். யூதர்களுக்கு மட்டுமன்றி, உலக மக்கள் அனைவருக்குமே இந்நற்செய்தி அறிவிக்கப்படும். எல்லா மக்களும் இயேசுவைப் பற்றி அறிந்து, அவரில் நம்பிக்கை கொண்டு மீட்புப் பெற வேண்டும் என்பதே நற்செய்தியறிவிப்பின் நோக்கமாக இருக்கும். இன்று வாழ்கின்ற நாம் நற்செய்தியின் தூதுவர்களாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம். நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை வாழ்வில் கடைப்பிடிப்பதோடு அச்செய்தியைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதும் நம் பொறுப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் செய்தியை அனைவருக்கும் அறிவிக்க எங்களுக்கு அருள்தாரும்.