யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா எண்கிழமையில் செவ்வாய்க்கிழமை
2014-04-22


முதல் வாசகம்

மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.'' அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, ``சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், ``நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது'' என்றார். மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, ``நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
திருப்பாடல் 33: 4-5. 18-19. 20. 22

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில் மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், ``அம்மா, ஏன் அழுகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை'' என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், ``ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ``ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார். இயேசு அவரிடம், ``மரியா'' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ``ரபூனி'' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள். இயேசு அவரிடம், ``என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்'' என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, ``நான்ஆண்டவரைக் கண்டேன்'' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மகதலா மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார்'' (யோவான் 20:15)

மரியா மகதலா யார்? இக்கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டில் மகதலா மரியா மனம் திரும்பிய ஒரு பாவியாகச் சித்தரிக்கப்பட்டார். முதலில் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இயேசுவைச் சந்தித்ததிலிருந்து அவர் மனம் மாறி, கடின தபசு மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தம் பாவத்திற்காகத் தவம் செய்ததாகவும் வரலாறுகள் எழுந்தன. ''ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியா'' இயேசுவின் சீடராக மாறினார் என லூக்கா நற்செய்தியில் வருகின்ற குறிப்பின் அடிப்படையில் (காண்க: லூக் 8:1-3), மரியா பெரிய பாவியாக இருந்தவர் என முடிவுசெய்தனர் சிலர். ஆனால் நோய்களுக்குக் காரணம் தீய ஆவிகளே என்னும் நம்பிக்கை நிலவிய அக்காலத்தில் மரியாவை இயேசு ஒரு நோயிலிருந்து குணப்படுத்தியிருப்பார் என முடிவுசெய்தலே சரி. பெத்தானியாவில் இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசிய மரியா கதையும் (யோவா 12:1-8), சீமோன் என்பவரில் இல்லத்தில் இயேசுவின் தலைமேல் எண்ணைய் பூசிய பெண் கதையும் (மாற் 14:3-9), அப்பெண் ''பாவியாக'' இருந்தார் என்ற குறிப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரே கதையாக மாற்றம் பெற்றன. இவ்வாறு மகதலா மரியா பற்றிய கதை எழுந்தது.

ஆனால் மகதலா மரியாவின் உண்மை வரலாறு இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைந்து பிணைந்ததாகும். கிறிஸ்தவ சமய நம்பிக்கைக்கு மையமாக இருப்பது இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையாகும். மகதலா மரியாதான் உயிர்த்தெழுந்த இயேசுவை முதல்முறையாகக் கண்டவர். அவரிடம் இயேசு ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். அதாவது மரியா சென்று, இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, அவர் உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவிக்க வேண்டும் (காண்க: யோவா 20:17-18). உண்மையிலேயே ''திருத்தூதர்களுக்குத் தூது அறிவிக்க அனுப்பப்பட்டவர்'' மரியா ஆனார். நான்கு நற்செய்தி நூல்களிலும் இச்செய்தி குறிக்கப்பட்டிருப்பதை நாம் கருதலாம் (காண்க: யோவா 20:1-18; மாற் 16:9-11; மத் 28:1-7; லூக் 24:1-12). இயேசு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக நம்மிடையே தங்கியிருக்கிறார் என்னும் உண்மையை உலகெங்கும் பறைசாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மிடையே உறைகிறார் எனவும், உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவி நம்மை வழிநடத்துகிறார் எனவும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்; அந்த நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். இப்பொறுப்பை ஆற்றுவதில் மகதலா மரியா நமக்குச் சிறந்த முன் உதாரணம் ஆகிறார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உறைந்து எங்களை வழிநடத்துகின்ற இயேசுவின் ஆவியை நாங்கள் அனுபவித்து வாழ அருள்தாரும்