யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-03-18

எருசலேம் நகர் புனித சிரில்


முதல் வாசகம்

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20

எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள். உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள். ``வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்'' என்கிறார் ஆண்டவர்; " உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 8-9. 16-17. 21,23

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன். 23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப்பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறாhர்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர் சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மறைநூல் அறிஞரும் பரிசேயரும்...செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்' என்றார்'' (மத்தேயு 23:2,3)

சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. சிலர் மிகுந்த பேச்சு வன்மையோடு உயரிய கருத்துக்களை எடுத்து விளக்குவதில் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூற எப்போதும் தயாராய் இருப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்வில் அந்த அறிவுரையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய முரண்பாடும் இடைவெளியும்தான் இருக்கும். இத்தகைய போக்கினை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார். இயேசுவை எதிர்த்த பரிசேயர் யூத சமயத்தில் சீர்திருத்தம் கொணர விரும்பியவர்கள்தாம். சமய ஒழுங்குகளைப் பொறுத்தமட்டில் பொதுநிலையினருக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என அவர்கள் பாடுபட்டதுண்டு. எனவே, தூய்மைச் சடங்கு சார்ந்த சட்டங்கள் குருக்களுக்கு மட்டுமல்ல, பொதுநிலையினருக்கும் பொருந்தும் என அவர்கள் கற்பித்தனர். ஓய்வு நாளை எல்லாரும் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவர்களது போதனை. எனவே, பரிசேயர் மக்கள்மீது பெரிய பளுவைச் சுமத்தினார்கள் என்பது உண்மையே. இயேசுவும் கூட மக்கள் நன்னடத்தை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என போதித்தார். ஆயினும் இயேசுவின் போதனை தாங்கமுடியாத ஒரு பளு அல்ல. ''என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 11:30).

மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் இயேசுவும் கருத்தாயிருந்தார். ஆனால், பரிசேயரைப் போல இயேசு சமயச் சடங்குகளுக்கு முதன்மையிடம் அளிக்கவில்லை. ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதிலும் இயேசு அக்கறை காட்டவில்லை. மாறாக, சமயச் சட்டங்களும் ஓய்வு நாள் பழங்கங்களும் மக்களுடைய நன்மையைக் கருத்தில் கொண்டே விளக்கப்பட வேண்டும் என்பதில் இயேசு உறுதியாயிருந்தார். சட்டத்தைக் கடைப்பிடிக்காத சாதாரண மக்களைப் பரிசேயர் ''பாவிகள்'' என்றழைத்து ஒதுக்கினார்கள். ஆனால் இயேசுவோ ''பாவிகளைத் தேடி வந்தார்'' (மத் 9:13). கடவுளின் அன்பை எல்லா மக்களோடும் பகிர்ந்திட விழைந்தார். அவர் அறிவித்த இறையாட்சியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் கிடையாது. கடவுள் ஒருவரே அனைவருக்கும் தந்தையாக இருப்பார். மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் முறையில் ஒருவர் ஒருவருக்குச் ''சகோதரர், சகோதரிகளாக'' இருப்பார்கள் (காண்க: மத் 23:8-9). இவ்வாறு சமத்துவம் நிலவுகின்ற சமுதாயத்தை உருவாக்க வந்த இயேசு பணிசெய்வதிலேயே முனைந்திருந்தார். அவருடைய பணி வாழ்வு நமக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாக உள்ளது. ''உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்'' என்று அறிவித்த இயேசுவின் சொற்கள் நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 23:11).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் சொல்லும் செயலும் முரண்பட்டிருக்காமல் இசைவுடன் அமைந்திட எங்களுக்கு அருள்தாரும்.