யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)
திருவழிப்பாட்டு ஆண்டு A (16-03-2014)திருப்பலி முன்னுரை
இயேசுக் கிறிஸ்துவின் பாஸ்காவிழாவிற்கு அணியமாகும் வகையில் தவக்காலப் பக்தி முயற்சிகளில் பங்கேற்று
இன்று சிறப்பாக தவக்கால இரண்டாம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் பெரியோர்களே!
வருங்காலத் திரு அவையின் கருவாகிய இளையோர்களே!
சிறுவர் சிறுமிகளே உங்கள் அனைவருக்கும் தவக்காலம் தரும் புதிய பாஸ்காப் பெருவாழ்வு கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறேன். முதல் வாசகம்உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்''தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4 அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!திருப்பாடல் 33: 4-5. 18-19. 20,22
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி
இரண்டாம் வாசகம்அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10 அன்பிற்குரியவரே, கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வசனம்ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''நற்செய்தி வாசகம்+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ``எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ``மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது'' என அவர்களுக்குக் கட்டளையிட்டார். - இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்: பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும். அன்புத் தந்தையே இறைவா!உமது திருச்சபைக்கு நீர் அளித்திருக்கின்ற இந்தத் தவக்காலத்திற்காக உம்மை நன்றியுடன் புகழ்கின்றோம். திருச்சபையின் விண்ணகம் நோக்கிய திருப்பயணத்தில் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவு நிலையினர் அனைவரும் தங்களின் சொல்லிலும் செயலிலும் உமது புனித்தத்தைப் பிரதிபலித்து வாழ்ந்திடவும், அனைவருக்கும் மேன்மையான வழிகாட்டுதல் தந்திடவும் அருள்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்ற தந்தையே!உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிசாய்த்து, அவரது வழியில் நடந்திடவும், குடிப்பழக்கம், போதைப்பொருள் நுகர்வு, சிற்றின்ப நாட்டங்கள் இவை மனித மாண்பைச் சிதைக்கின்றன என்பதை உணர்ந்து இளைஞர்கள் நற்செய்தியின் வழி வாழ்ந்து மாண்புற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.அன்புத் தந்தையே இறைவா!நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.விடுதலையின் தெய்வமே இறைவா!உம்முடைய அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முயற்சிக்கும் மனிதர்கள், பொருட்கள், ஆசைகள், சந்தர்ப்பங்கள் போன்ற கொடிய சோதனைகளிலிருந்து நாங்கள் விடுதலை பெற்று உமக்கும், உமது வார்த்தைக்கும் மாத்திரமே செவிசாய்த்து, உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய அருளை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.ஞானத்தின் ஊற்றே இறைவா!இத்தவ நாட்களிலே எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, பகைமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.ஞானத்தின் ஊற்றே இறைவா!தொலைத் தொடர்பு ஊடகங்கள், தவறான விளம்பரங்கள், பண்பாட்டுச் சிதைவுகள் இவற்றின் மத்தியில் எங்கள் இளைஞர்கள், இளம் பெண்கள் பாவச் சோதனைகளுக்கு உடன்படாமல் உமது வார்த்தையின் வழிநடந்து வெற்றி வாழ்வைக் கண்டிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |
இன்றைய சிந்தனை
''ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும்
ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2) மன்றாட்டு:இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும். |