யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் வியாழக்கிழமை
2014-02-20


முதல் வாசகம்

ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-9

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக்கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, ``தயவுசெய்து இங்கே அமருங்கள்'' என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, ``அங்கே போய் நில்'' என்றோ அல்லது ``என் கால்பக்கம் தரையில் உட்கார்'' என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா? ``உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. மாறாக, நீங்கள் ஆள் பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகள் என அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல் 34: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா'' என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்'' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், ``என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்று கடிந்துகொண்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்'' (மாற்கு 8:34)

கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாகவே மனிதர்கள் ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வியை எழுப்பி வந்துள்ளனர். அக்கேள்விக்குப் பதில் என்ன? இயேசுவே மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மாற் 8:27-29). இக்கேள்விக்கு மக்கள் அளித்த பதில் ''இயேசு ஓர் இறைவாக்கினர்'' என்பதாகும் (மாற் 8:28). ஆனால் இயேசுவின் சீடர்களுள் முதன்மையிடம் வகித்த பேதுரு இயேசு பற்றிய உண்மையைக் கண்டுகொள்கின்றார். இயேசுவைப் பார்த்து, ''நீர் மெசியா'' (மாற் 8:29) என்று உற்சாகத்தோடு கூறுகிறார் பேதுரு. இயேசு கேட்ட கேள்விக்குச் சரியான பதில் அளித்துவிட்ட திருப்தி பேதுருவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இயேசுவும் பேதுரு தம்மை அடையாளம் கண்டுகொண்டதைப் பற்றி மகிழ்ந்திருப்பார். ஆனால் ''மெசியா'' என்றால் யார் என்பது பற்றிய விளக்கத்தை இயேசு அளிக்கிறார். சீடர்களும் அவர்கள் காலத்து யூதர்களும் மெசியா பற்றி எண்ணியதற்கும் இயேசு தருகின்ற விளக்கத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. சீடர்கள் கருத்துப்படி மெசியா என்பவர் மிகுந்த வல்லமையோடு வந்து, மக்களுக்கு எதிரிகளாக இருப்பவர்களை முறியடித்து, இஸ்ரயேல் நாட்டைச் சுதந்திர நாடாக ஏற்படுத்தி ஆட்சி செய்வார். ஆனால் இயேசுவுக்கு அக்கருத்து ஏற்புடையதாக இல்லை. இயேசு மெசியா என்பது உண்மையே. ஆனால் அவர் ''துன்புறும் மெசியா''; உலகப் பார்வையில் மகிமையும் மாட்சியும் கொண்டவராய் ஆட்சி செய்கின்ற அரசியல் தலைவர் அல்ல அவர். மாறாக, எல்லாராலும் இகழப்பட்டு, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறக்கப் போகின்ற மெசியா அவர்.

இப்பின்னணியில்தான் இயேசு தம் சீடர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என விளக்குகிறார். அவர்களும் இயேசுவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அவர்கள் ''தன்னலம் துறக்க வேண்டும்''; ''தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும்'' (காண்க: மாற் 8:34). பிறருக்காகத் துன்பங்களை ஏற்கும் மன நிலை நம்மில் தோன்றுவது எப்போது? நாம் உண்மையிலேயே பிறரை அன்புசெய்யும் போது அவர்களுக்காகத் தியாகம் செய்ய முன்வருகிறோம். ஆக, அன்பு தான் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மன நிலையை நம்மில் உருவாக்குகிறது. இயேசு நம்மை அன்புசெய்து நமக்காகத் துன்புற்றார். நாமும் அவர் மீது அன்புடையவர்களாக இருந்தால் துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்போம். ஏனென்றால் நம் துன்பத்தின் வழியாக நன்மை பிறக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் துன்பங்களைக் கிறிஸ்துவின் துன்பங்களோடு இணைக்கும் போது நாங்கள் வாழ்வடைகிறோம் என உணர்ந்தறிய அருள்தாரும்.