இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை 2014-02-08
புனித ஏரோணிமு எமிலியான்
முதல் வாசகம்
நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன்
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13
அந்நாள்களில் சாலமோன் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். �உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!� என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், �உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்,. இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?� என்று கேட்டார். சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், �நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
திருப்பாடல் 119: 9. 10. 11. 12. 13. 14
9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். -பல்லவி
11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதி முறைகளைக் கற்பித்தருளும். -பல்லவி
13 உம் வாயினின்று வரும் நீதித் தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34
அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவுகொண்டு,
இயேசு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற்கு 6:34)
இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் ஆடுமேய்த்தல் ஒரு முக்கிய தொழிலாக இருந்தது. இயேசு சொன்ன கதைகள் பலவற்றில் ஆடுகள் பற்றியும் அவற்றைக் கரிசனையோடு மேய்க்கின்ற ஆயர் பற்றியும் பல குறிப்புகள் உண்டு. இயேசு தம்மையே நல்ல ஆயருக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஆயரில்லா ஆடுகள் வழிதவறிப் போகின்ற ஆபத்து உண்டு; அவை ஓநாய் போன்ற விலங்குகளுக்கு இரையாகிவிடுகின்ற நிலையும் ஏற்படக் கூடும். ஆனால் ஆயரின் வழிநடத்தல் இருக்கும்போது ஆடுகள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆடுகளுக்குத் தேவையான உணவை அளிக்க ஆயர் அவற்றைப் பசும்புல் தரைக்கு இட்டுச் செல்வார். நீர் அருந்துவதற்காக நீரோடைகளுக்குக் கூட்டிச்செல்வார் (காண்க: திபா 23). இவ்வாறு மக்களுக்குத் தேவையான ஆன்ம உணவை வழங்க இயேசு வந்தார். ஆனால் அவர் கண்ட மக்களோ ''ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்'' (மாற் 6:34).
-- இயேசு நம் ஆயர் என நாம் ஏற்கிறோம். நமக்கு உணவும் பாதுகாப்பும் தருபவர் நம் ஆயர். ''இயேசு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற் 6:36) என்று மாற்கு கூறுவது இயேசு வழங்கிய இறையாட்சி பற்றிய போதனையே. கடவுளின் மதிப்பீடுகள் மனித வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும், கடவுளின் விருப்பத்தை மனிதர் செயல்படுத்த வேண்டும் என்றும் இயேசு நமக்குப் ''பலவற்றைக் கற்பிக்கிறார்''. ஆயரின் வழிநடத்தலை ஏற்காத ஆடுகள் ஆபத்துக்கு உள்ளாவதுபோல, நம் ஆயர் இயேசுவின் போதனையை நாம் ஏற்காத வேளைகளில் ஆபத்துக்கள் நம்மை அணுகிடக் கூடும். நல்ல ஆயர் நம்மீது காட்டுகின்ற அன்பு நம் இதயத்திலிருந்து எழுந்து பிறரை அரவணைக்கும் அன்பாக மாறிட வேண்டும். இதுவே நம் ஆயர் நமக்கு வழங்கும் போதனை.
மன்றாட்டு:
இறைவா, எங்கள்மீது நீர் காட்டுகின்ற பரிவுக்கு நன்றி!
|