யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் புதன்கிழமை
2014-02-05

புனித ஆகத்தா


முதல் வாசகம்

பாவம் செய்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2,9-17

அந்நாள்களில் தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, �மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்� என்றார். யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம் பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர். வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார். �நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்� என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார். தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: �நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: �நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான் செய்வேன்� �. காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: �உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்�. �நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழ வேண்டாம்� என்று தாவீது கூறினார். ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, �போதும்! உன் கையைக் கீழே போடு� என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார். மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, �பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!� என்று கூறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
திருப்பாடல் 32: 1-2. 5. 6. 7

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ``இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களிடம், 'சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்' என்றார்'' (மாற்கு 6:4)

இயேசு தம் சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் ஊர்மக்கள் அவரைக் கண்டு, ''இவர் நம்மைப் போல் ஒருவர்தானே. இவரிடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது'' என எண்ணுகிறார்கள். மண்ணின் மைந்தரிடம் துலங்கிய மாண்புமிகு பண்புகளைக் காணத் தவறிவிடுகிறார்கள் சொந்த ஊர் மக்கள். ஆனால் வேறு ஊர்களைச் சார்ந்த மக்களோ இயேசுவிடம் ஓர் அதிசய சக்தி துலங்குவதை அடையாளம் காண்கிறார்கள். இந்த முரண்பாட்டை மாற்கு தெளிவாக விளக்குகிறார். இயேசு ''புதிய போதனை'' வழங்கினார் (மாற் 1:27). நோய்வாய்ப்பட்டிருந்த மனிதருக்குக் குணம் நல்கினார் (மாற் 1:21-28; 322-30). தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களைத் தொட்டுக் குணமாக்கி, தீட்டு என்பது மனித கற்பனையே என உணர்த்தினார் (மாற் 1:40-45; 51-43). நோயும் சாவும் மனிதரை அடிமைப்படுத்த இயலாது எனக் காட்டும் விதத்தில் மக்களுக்கு உயிரளித்து, அவர்களைக் ''கைதூக்கிவிட்டார்'' (மாற் 1:29-31; 5:21-43). பாவிகள் என முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்தால் விலக்கிவைக்கப்பட்ட மக்களை அன்போடு வரவேற்றார் (மாற் 2:13-17). பாவ மன்னிப்பு வழங்கினார் (மாற் 3:22-30). மக்களை அடிமைகளாக்கிய சமய ஒழுங்குகளைத் தகர்த்தெறிந்தார் (மாற் 2:18-28). மனிதரின் நலனுக்கு முதன்மை அளித்தார் (மாற் 3:1-5). குடும்பம் என்னும் சொல்லுக்குப் புதுப்பொருள் வழங்கினார் (மாற் 3:31-35). கதைகள் வழியாகக் கடவுளாட்சி பற்றிய பேருண்மைகளை மக்களுக்குக் கற்பித்தார் (மாற் 4:1-34). மனிதரைச் சிறுமைப்படுத்திய தீய சக்திகளை அடக்கினார் (மாற் 1:25; 4:39; 5:8).

இவ்வாறு அதிசய செயல்கள் புரிந்த பிறகும் இயேசுவை அவருடைய ஊர்மக்கள் மதிக்கத் தவறிவிட்டார்கள். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என முடிவுசெய்துவிட்டார்கள். இவர் என்ன சாதித்துவிட்டார் எனக் கேட்ட அவர்கள் ஒருவேளை மண்ணும் விண்ணும் அதிர்கின்ற விதத்தில் இயேசு அற்புதங்கள் நிகழ்த்தவில்லை என நினைத்தார்களோ! ஞானமே உருவாக வந்த இயேசுவைப் பார்த்து, ''இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்று கேட்ட தம் ஊர்மக்களுக்கு இயேசு தகுந்த பதில் அளிக்கிறார்: ''சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' (மாற் 6:4). இதிலிருந்து நாம் அறிவது என்ன? கடவுளிடமும் அவரால் அனுப்பப்பட்டு நமக்காகத் தம்மையே கையளித்த இயேசுவிடமும் நாம் நம்பிக்கை கொள்வதற்கு அதிசயங்களும் அற்புதங்களும் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. இயேசு ஆற்றிய புதுமைகளை எத்தனையோ மக்கள் கண் முன்னே கண்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் உடனே இயேசுவை நம்பிவிடவில்லை. கடவுளிடத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும் என்றால் நாம் நம்மில், நம்மோடு வாழ்ந்து செயலாற்றுகின்ற கடவுளின் குரலைக் கேட்க நம் இதயச் செவிகளைத் திறக்கவேண்டும்; நம் அகக்கண்களை அகல விரிக்கவேண்டும். அப்போதுதான் கடவுள் மட்டில் நாம் நம்பிக்கை கொள்ள இயலும்.

மன்றாட்டு:

இறைவா, ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்வில் நீர் நிகழ்த்துகின்ற அற்புதங்களை நாங்கள் கண்டுணர்ந்து உள்ளார்ந்த விதத்தில் உம்மை நம்பிட அருள்தாரும்.