யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2014-01-30


முதல் வாசகம்

என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29

அந்நாள்களில் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: �என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே! என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்! ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் �படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்� என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும். ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! �நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்� என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத் தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத் துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!�

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தாவீதின் அரியணையை ஆண்டவர் அவருக்கு அளிப்பார்.
திருப்பாடல் 132: 1-2. 3-5. 11. 12. 13-14

1 ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தருளும். 2 அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும். பல்லவி

3 ``ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஓர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில், 4 என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்; 5 என் கண்களைத் தூங்கவிடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்'' என்று அவர் சொன்னாரே. பல்லவி

11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: "உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். பல்லவி

12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்". பல்லவி

13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். 14 இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில் இயேசு மக்களிடம், ``விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார். மேலும் அவர், ``நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (மாற்கு 4:25)

கடவுளாட்சி என்றால் என்னவென்று விளக்கிச் சொல்வதற்காக இயேசு பல உவமைகளைப் பயன்படுத்தினார். இவ்வாறு இயேசு கூறிய உவமைகள் அன்றாட வாழ்க்கைச் சூழமைவைப் பிரதிபலித்தன. அவர் கூறிய உவமைகளில் பல விவசாயப் பின்னணியில் அமைந்தன. எடுத்துக்காட்டாக, விதைப்பவர் உவமையைக் கூறலாம். விதைக்கும்போது எல்லா விதைகளும் நல்ல நிலத்தில் விழாமல் சில வழியோரத்திலும், சில பாறைப் பகுதிகளிலும், சில முட்செடிகள் நடுவிலும் விழுந்ததால் பயனற்றுப் போயின. ஆனால் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஏராளமாகப் பலன் நல்கின; முப்பது, அறுபது, நூறு மடங்குவரை அறுவடை கிடைத்தது. இங்கே வருகின்ற ''விதை'' கடவுளின் வார்த்தையைக் குறிக்கிறது என்றும், அவ்வார்த்தையைக் கேட்டு, அதை உள்ளத்தில் ஏற்று, அதன் ஒளியில் தம் பிறருக்கு நன்மை செய்தால் நமக்கும் பிறர் நன்மை செய்வர் என்னும் தத்துவம் பெரும்பாலும் உண்மையாக இருக்கலாம். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் இதைப் பொய்யாக்கிவிடுகிறார்கள். ஏனென்றால், நன்மை செய்கின்ற மனிதருக்கும் தீமையைக் கைம்மாறாக அளிக்கும் அவல நிலை நம் சமுதாயத்தில் தொடர்ந்து நிலவுகிறது. இயேசு அளித்த போதனையில் இரு கருத்துக்கள் உள்ளன: முதலில், நாம் பிறருக்கு எப்போதுமே நன்மை செய்ய வேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார். நம் வாழ்வு விளக்கைப் போல ஒளிவீச வேண்டும்; யாவருக்கும் தெரியும் விதத்தில் விளங்க வேண்டும் (காண்க: மாற் 3:21). இவ்வாறு பிறருக்கு ஒளியாக அமைகின்ற வாழ்க்கையை அணைத்துப்போட நினைப்பவர்கள் உண்டு. இயேசுவுக்கு இதுதான் நிகழ்ந்தது. உலகுக்கு ஒளியாக வந்த அவரை இருள் ஏற்றுக்கொள்ளவில்லை (காண்க: யோவா 1:9-10). நன்மை செய்வோருக்குத் தீமையே பரிசாகக் கிடைப்பதும் உண்டு. இரண்டாவதாக, பிறருக்கு நாம் தீங்கு செய்தால் அதன் உடனடி விளைவு நம்மைப் பாதிக்காததுபோலத் தோன்றினாலும் கடவுளின் தீர்ப்பு ஒருநாள் நம்மை வந்தடையும்.

எனவே, எப்போதும் எவ்விடத்திலும் நன்மை செய்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். நன்மை செய்வோர் கடவுளின் பணியைத் தொடர்கின்றனர். மாறாக, தீங்கு செய்வோர் கடவுளின் செயலுக்குத் தடைபோட முனைகிறார்கள். அத்தடைகளைத் தாண்டி தீமையிலிருந்தும் நன்மை விளைவிக்கும் திறனும் கடவுளுக்கு உண்டு. நாம் அளக்கும் அளவை கடவுளின் அளவையாக இருக்க வேண்டும். அப்போது நம் வழியாகக் கடவுளின் செயல் உலகில் வல்லமையோடு தோன்றும்.

மன்றாட்டு:

இறைவா, நன்மை செய்யும் ஆற்றலை எங்களுக்கு அளிப்பவர் நீரே என உணர்ந்து வாழ அருள்தாரும்.