யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்து பிறப்புக்காலம்
2014-01-07

புனித பெனாப்போத்து


முதல் வாசகம்

அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல்72: 1-2. 3-4. 7-8

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4யb எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

அக்காலத்தில் இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, �இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்'' என்றனர். அவர் அவர்களிடம், �நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்று பதிலளித்தார். அவர்கள், �நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?'' என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், �உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்'' என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, �ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன'' என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் (இயேசு) அவர்கள் மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற்கு 6:34)

இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம் பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய பணி அவர் உரைக்கின்ற சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார். அதாவது, ''மனம் மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' (மத் 4:7) என்னும் அறிவிப்பு இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக் குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் விண் இயேசு மக்கள்மீது பரிவும் இரக்கமும் காட்டியதை நற்செய்தி பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஆயர் தம் ஆடுகளைக் கரிசனையோடு கவனித்து, பாதுகாத்து வழிநடத்துபவர். அவருடைய ஆடுகள் மீது அவருக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. நற்செய்தி நூல்கள் இயேசுவை நல்ல ஆயராகச் சித்தரிக்கின்றன. ஆயராகிய இயேசு தம் சீடராகிய ஆடுகளின் மீது காட்டுகின்ற பரிவுக்கு எல்லை இல்லை. ஆடுகளை மேய்ப்பவர்கள் தங்கள் மந்தைமீது காட்டுகின்ற அன்புக்கும் இயேசு தம் மக்கள்மீது காட்டுகின்ற அன்புக்கும் வேறுபாடு உண்டு. இயேசுவின் அன்பு உண்மையிலேயே மனிதப் பண்பின் உச்ச வெளிப்பாடு. கடவுளின் அன்பு மனிதரை அரவணைத்து, பாசக் கயிற்றால் பிணைத்து இணைத்துக் கொள்ளும் பண்புடையது. இத்தகைய அன்பையே இயேசு நம்மீது காட்டுகிறார். உலக அளவிலான எந்த அன்பும் கடவுளன்புக்கு நிகராகாது. ஆக, இயேசு நம்மீது காட்டுகின்ற பரிவு செயலாகப்; பரிணமிக்கின்றது.

மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு அவர்களுக்குப் ''பலவற்றைக் கற்பித்தார்'' (மாற் 6:34). இயேசுவின் முக்கிய போதனை இறையாட்சி பற்றியது என்பது தெளிவு. எனவே இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிக் கற்பிப்பது அவர் மக்கள்மீது கொண்டுள்ள பரிவின் வெளிப்பாடு என்பது தெளிவு. அன்பினால் தூண்டப்பட்ட இயேசு மக்களுக்குக் கடவுளின் அன்பை அறிவித்ததில் வியப்பில்லை. நாமும் பரிவு என்னும் பண்புடையவர்களாக மாற வேண்டும். எங்கே அன்பும் பரிவும் உள்ளதோ அங்கே பிறர் மட்டில் அக்கறை வெளிப்படும். அந்த அக்கறையின் தூண்டுதலால் நாம் பிறரோடு இறையாட்சி பற்றிய மகிழ்ச்சிதரும் செய்தியைப் பகிர்ந்திட வேண்டும். இதை இயேசு நமக்கு முன்னுதாரணமாகக் காட்டியுள்ளார்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பரிவுள்ள மனிதராக வாழ்ந்திட அருள்தாரும்.