யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்து பிறப்புக்காலம்
2014-01-04


முதல் வாசகம்

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார். கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 98: 1. 7-8. 9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, �இதோ! கடவுளின் செம்மறி!'' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, �என்ன தேடுகிறீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், �ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'' என்று கேட்டார்கள். `ரபி' என்னும் எபிரேயச் சொல்லுக்குப் `போதகர்' என்பது பொருள். அவர் அவர்களிடம், �வந்து பாருங்கள்'' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, �மெசியாவைக் கண்டோம்'' என்றார். `மெசியா' என்றால் `அருள்பொழிவு பெற்றவர்' என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, �நீ யோவானின் மகன் சீமோன். இனி `கேபா' எனப்படுவாய்'' என்றார். `கேபா' என்றால் `பாறை' என்பது பொருள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யோவானின் சீடர் இருவரும், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், 'வந்து பாருங்கள்' என்றார்'' (யோவான் 1:38-39)

திருமுழுக்கு யோவான் கடவுளின் மீட்புத் திட்டத்தில் சிறப்பான பங்கு வகித்தவர். வரவிருக்கின்ற மெசியாவை அவர் அறிவித்தார்; மெசியாவுக்கு முன்னோடியாக வந்தார். துன்புறும் மெசியாவாக இயேசு தம் பணி வாழ்வைத் தொடங்கியபோது யோவானின் சீடர்களும் இயேசுவைப் பற்றி அறிய விரும்பினார்கள். இயேசுவின் போதனை என்னவென்று அறிந்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விழைந்தார்கள். எனவே யோவானின் சீடர் இருவர் இயேசுவை அணுகி, அவர் எங்கே தங்கியிருக்கிறார் என்னும் கேள்வியை எழுப்புகிறார்கள். அதற்கு இயேசு வழங்கிய பதில் நமக்கும் பொருந்தும். இயேசு யோவானின் சீடர்களுக்கு மறுமொழியாக, ''வந்து பாருங்கள்'' என்று சுருக்கமாகக் கூறுகிறார். இந்த இரு சொற்களும் சுட்டுகின்ற பொருள் ஆழமானது. இயேசுவைப் பற்றி அறிய வேண்டும் என்றால் நாம் அவரிடம் செல்ல வேண்டும்; நம் சொந்தக் கண்கொண்டு அவரைப் பார்த்து நேரடி அறிவு பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, இயேசு ''வந்து பாருங்கள்'' என்று கூறியது இன்று வாழ்கின்ற நமக்கு அவர் விடுக்கின்ற அழைப்பு எனலாம். நாமும் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். அவர் யார் என்பதை நேரடியாகக் கண்டு, அனுபவித்து, அறிந்து, புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு இயேசு பற்றி நாம் பெறுகின்ற அறிவு வெறும் கருத்தளவிலான தகவல் மட்டும் அல்ல. இயேசு யார் என்பதை ஒரு கருத்தில் அடக்கிவிட இயலாது. அவர் யார் என்பதை நாம் அனுபவத்தின் வாயிலாக அறிந்தால்தான் அது உண்மையான அறிவாகும். ஏனென்றால் இயேசுவை அறிதல் என்பது அவரை நம் உள்ளத்தில் வரவேற்பதைக் குறிக்கும்; அவருடைய சிந்தனைகளை நம் சிந்தனைகளாக மாற்றிக்கொள்வதைக் குறிக்கும்; அவர் கடவுளையும் நம்மையும் உலகையும் எவ்வாறு பார்க்கிறாரோ அவ்வாறோ நாமும் பார்த்து, அவரோடு நம்மை இறுக்கமாகப் பிணைப்பதைக் குறிக்கும். இவ்வாறு இயேசுவோடு நாம் ஒன்றிணைந்தால் நம் வாழ்வில் கடவுளின் வாழ்வு துலங்கும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவை நாங்கள் அனுபவித்து அறிந்திட எங்களுக்கு அருள்தாரும்.