யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 30வது வாரம் சனிக்கிழமை
2013-11-02

இறந்த விசுவாசிகள் நினைவு நாள்


முதல் வாசகம்

என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்;;தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்;
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25:6-9

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்;;தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். "

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இருள் சூழ்ந்த பள்ளத் தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் தீமையானதெதெற்கும் அஞ்சேன்.
திருப்பாடல்கள்23:1-3, 4, 5, 6

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; -பல்லவி

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5;5-11

அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்11;25-30

25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார். இயேசு தரும் இளைப்பாறுதல் 28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு...'ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?' என்று கேட்டார்'' (லூக்கா 14:3)

ஓய்வு நாளில் இயேசு மக்களுக்கு குணமளித்தார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உள்ளது (காண்க: யோவான் 5:1-18; மாற்கு 1:21-28; மாற்கு 1:29-31; மாற்கு 3:1-6; யோவான் 9:1-16; லூக்கா 13:10-17; லூக்கா 14:1-6 போன்றவை). ஓய்வு நாளில் என்னென்ன வேலைகள் செய்யலாகாது என்பது பற்றி விரிவான சட்டங்கள் இருந்தன. அவற்றை இயேசு கடைப்பிடிக்கிறாரா இல்லையா என்று அவருடைய எதிரிகள் கூர்ந்து கவனித்துவந்தனர் (காண்க: லூக் 14:1). மக்களுக்கு குணமளிப்பது ஓய்வுநாளை மீறியதாகாது என்பது இயேசுவின் கொள்கை. ஓய்வுநாள் மனிதருக்கேயன்றி மனிதர் ஓய்வுநாளுக்கல்ல என்பது அவருடைய போதனை.

சில சமயங்களில் சட்டங்கள் எதற்காக எழுந்தன என்பதை மனிதர் மறந்துவிடுகின்றனர். சட்டங்கள் வகுக்கப்படும்போது அவை மனிதருக்கு நலம் பயக்கும் என்னும் எதிர்பார்ப்போடுதான் உருவாக்கப்படுகின்றன. கால இட சூழ்நிலைகள் மாறும்போது சட்டங்கள் தங்கள் பொருளை இழந்துவிடுவதுண்டு; அல்லது சட்டத்தின் உட்பொருளை மக்கள் மறந்துபோய்விடுகின்ற ஆபத்து உண்டு. இதை இயேசு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் செயல்பாடு சட்டத்தை அறவே எதிர்ப்பதாக அமைந்தது என்று சிலர் கூறுவர். இது முற்றிலும் உண்மை என்று கூற முடியாது. இயேசு யூத சமயத்தில் காணப்பட்ட பல சட்டங்களை ஏற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாக, திருச்சட்டத்தில் முதன்மையான கட்டளை எது என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது இயேசு இணைச்சட்ட நூலையும் லேவியர் நூலையும் மேற்கோள் காட்டி, ''கடவுளை அன்புசெய்வதும் அடுத்திருப்போரை அன்புசெய்வதும்'' முதன்மையாக கட்டளை என்றுரைத்தார் (காண்க: மத்தேயு 22:34-40). எனவே, இயேசு சட்டத்தில் பல வகைகளும் படிகளும் நிலைகளும் இருப்பதைக் காட்டுகிறார். எச்சட்டம் முதன்மையானது என நிர்ணயிப்பதில் வேறுபாடு எழக்கூடும். ஆனால் சட்டத்தின் உட்பொருளை மறந்துவிட்டால் சட்டமே ஒரு சர்வாதிகாரியாக மாறி மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிடும். இத்தகைய கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நம்மை விடுவிக்க வந்தார் இயேசு.

மன்றாட்டு:

இறைவா, மனிதருக்கு நலம் புரிவதையே நோக்கமாகக் கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.