திருவழிப்பாட்டு ஆண்டு C (22-09-2013)

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், 
தலைவர் அவரைப் பாராட்டினார்/> நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், 
தலைவர் அவரைப் பாராட்டினார்/> நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், 
தலைவர் அவரைப் பாராட்டினார்/>


திருப்பலி முன்னுரை

திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் என் இனிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி ஆண்டவரின் அருள்பெற அணிதிரளும் உங்கள் அனைவருக்காகவும் பணிவுடன் இறைவனை வேண்டி நிற்கின்றேன். ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் வாரத்திலிருக்கும் நாம், இன்றைய திருப்பலி வழிபாட்டிலிருந்து ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு.

இன்றைய நாளில், நீதியோடும், உண்மையோடும் செயற்படுவதும், விவேகத்தோடு கூடிய விசுவாசமும், அனைவருக்காகவும் பரிந்து பேசி செபிக்கின்ற நல்லுள்ளமும், இறைவனுக்கு இடைவிடாது நன்றி செலுத்துவதும், நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும், என்னும் உண்மை நமக்கு ஆழமாக உணர்த்தப்படுகின்றது. எனவே நாம் அனைவரும் நீதியோடும், உண்மையோடும் செயற்படவும், விவேகத்தோடு கூடிய விசுவாச வாழ்வு வாழவும், நல்லுள்ளத்தோடு அனைவருக்காகவும் பரிந்து பேசி செபிக்கவும், இறைவனுக்கு இடைவிடாது நன்றி செலுத்தவும் வேண்டிய மனப்பக்குவத்தை நமக்குத் தந்தருள வேண்டுமென்று தாழ்மையோடு மன்றாடி வரம் கேட்டு செபிப்போம்.



முதல் வாசகம்

`வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்:
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-7

`வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: `நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்' என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?'' ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: ``அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்
திருப்பாடல்கள் 113: 1-2. 4-6. 7-8

1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி

4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. 5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8

அன்பிற்குரியவர்களே, அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல. எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-13

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை' என்றார். அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உலகின் ஒளியாம் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்

உலகின் மக்கள் தங்கள் வணிகத்தை, புகழை, வெற்றிகளைப் பெருக்கிக் கொள்ள முன்மதியொடும், படைப்பாற்றலோடும் செயல்படுவதுபோல, நாங்கள் உமது சாட்சிகளாக வாழ அதிக முன்மதியோடும், படைப்புத் திறனோடும் செயல்பட எங்களுக்குத் தூய ஆவி என்னும் கொடையைத் எப்போதும் தந்து வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் ஆண்டவரே

கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எமக்கெனச் செய்து முடிக்கும் ஆண்டவரே!

இப் மண்ணிலே புலம்பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும், உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முற்படும் எல்லாவித தீய சக்திகளையும் இனங்கண்டு அவற்றை முறியடித்து, உமக்கேற்றவர்களாக வாழ எமக்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,

நாங்கள் பொறுப்புணர்வோடும் முன்மதியோடும் செயல்பட அருள் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தாம் செல்வராயிருந்தும் தம்முடைய ஏழ்மையினால் நாங்கள் செல்வராகுமாறு எங்களுக்காக ஏழையான கிறிஸ்துவை எமக்களித்த தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் தாழ்ச்சி என்னும் நற்பண்பை எம்மில் வளர்த்துக் கொள்ளவும், நாம் அனைவரும் நீதியோடும், உண்மையோடும் செயற்படவும், விவேகத்தோடு கூடிய விசுவாசவாழ்வு வாழவும், நல்லுள்ளத்தோடு அனைவருக்காகவும் பரிந்து பேசி செபிக்கவும், உமக்கு இடைவிடாது நன்றி செலுத்தவும் வேண்டிய மனப்பக்குவத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகில் பல்வேறு நிலைகளிலும் பணியாற்றும் அனைத்துத் தலைவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்கள் இறைப்பற்றும், கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழவும் அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்'' (லூக்கா 16:8)

''முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்'' என்னும் தலைப்பில் வழங்கப்படுகின்ற இயேசுவின் உவமையில் திடீர் திருப்பங்கள் உண்டு. உவமையில் வருகின்ற முக்கிய கதாபாத்திரங்கள் ''தலைவர்'' என்பவரும் ''வீட்டுப் பொறுப்பாளர்'' என்பவரும் ஆவர். தலைவர் ஒரு பெரிய நிலக்கிழாராக இருந்திருக்க வேண்டும். அவர் நேரடியாகத் தம் சொத்தைப் பராமரிக்காமல் அதன் பொறுப்பை 'வீட்டுப் பொறுப்பாரிடம் ஒப்படைக்கிறார். பணப் பரிமாற்றத்தையும், வரவு செலவுகளையும் ஒழுங்காகப் பதிவுசெய்து, உரிய காலத்தில் நிலக்கிழாரிடம் கணக்கு ஒப்படைக்கின்ற பொறுப்பு வீட்டுப் பொறுப்பாளரைச் சாரும். ஆனால் தலைவரின் உடைமைகளை அந்த வீட்டுப் பொறுப்பாளர் ''பாழாக்கிவிட்டார்'' (லூக் 16:1). அவர் என்ன தவறு செய்தார் என்பது உவமையில் தரப்படவில்லை. ஆனால் நிலக்கிழாருக்கு அந்த வீட்டுப் பொறுப்பாளரிடம் அதிருப்தி ஏற்பட்டது. தன் வேலை பறிபோய்விடும் என்று அஞ்சுகிறார் வீட்டுப் பொறுப்பாளர். உடனே தன் வருங்காலம் பாழாகிவிடக் கூடாதே என்று கருதிய அவர் ''முன்மதியோடு'' செயல்படுகிறார். மண்வெட்டிப் பிழைக்க அவருக்கு உடல் திறமை இல்லை; பிறரிடம் கையேந்தி நிற்க அவருக்கு வெட்கம். எனவே தலைவருக்குக் கடன் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஆள்களை அணுகி, அவர்களுடைய கடனைக் குறைப்பதாகக் கூறுகிறார் வீட்டுப் பொறுப்பாளர். இது உண்மையிலேயே ஏமாற்று வேலைதான். ஆனாலும் ''நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்'' என்று கூறி இயேசு உவமையை முடிக்கின்றார் (லூக் 16:8).

நேர்மையற்ற மனிதனின் நடத்தையைப் பாராட்டுவது சரியா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்த உவமையில் இயேசு ''நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர்'' செய்தது சரி என்று கூறவில்லை. மாறாக, அவர் ''முன்தியோடு செயல்பட்டார்'' என்று தலைவரால் பாரட்டப்பட்டதை இயேசு குறிப்பிடுகிறார். இயேசுவைப் பின்செல்வோரும் ''முன்மதியோடு'' நடக்க வேண்டும். இவ்வுலக செல்வத்தைக் கையாளுவதில் கவனமாகச் செயல்படுவது எப்படி என்று தெரிந்துள்ள மனிதர்கள் விண்ணக செல்வத்தை நாம் பெற வேண்டும் என்பதில் எவ்வளவு கருத்தோடு செயல்பட வேண்டும் என்பதை இயேசு இங்கே வலியுறுத்துகிறார் (காண்க: லூக் 16:9). ''முன்மதி'' என்பது கால இட சூழ்நிலைகளை நன்கு அறிந்து, உணர்ந்து, நாம் செய்கின்ற செயல்களின் பொருளையும் அவற்றின் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுகின்ற முறையைக் குறிக்கும். முன்மதி கொண்ட மனிதர் கடவுளின் விருப்பம் யாதென அறிந்து அதற்கேற்பச் செயல்படுவார்கள். கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பொறுப்பினைக் கரிசனையோடு நிறைவேற்றுவார்கள். அதுவே கடவுள் வழங்கும் நிலையான மகிழ்ச்சியில் நாம் பங்கேற்க வழியாகவும் அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை அறிந்து நாங்கள் முன்மதியோடு செயல்பட அருள்தாரும்.