திருவழிப்பாட்டு ஆண்டு C (15-09-2013)

என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் 
கண்டுபிடித்து விட்டேன்/> என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் 
கண்டுபிடித்து விட்டேன்/> என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் 
கண்டுபிடித்து விட்டேன்/> என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் 
கண்டுபிடித்து விட்டேன்/> என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் 
கண்டுபிடித்து விட்டேன்/> என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் 
கண்டுபிடித்து விட்டேன்/> என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் 
கண்டுபிடித்து விட்டேன்/>


திருப்பலி முன்னுரை

இறை அன்பால் வழிநடத்தப்படும் என் அன்பின் சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்கிறேன். ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் வார ஞாயிறு வழிபாட்டில் உங்களோடு ஒன்றாக இணைவதில் மகிழ்ச்சியோடு இறைவனை புகழ்கின்றேன்.

நமக்கு நன்கு அறிமுகமான இந்த உவமை வழியாக இன்று நம் வாழ்வை, மனநிலையை சற்று ஆய்வு செய்ய அழைக்கிறது இறைவார்த்தை. காணாமல் போன ஆடு, காணாமல் போன நாணயம் என்னும் இரண்டு அருமையான உவமைகளை இன்று வாசிக்கிறோம். காணாமற்போன ஆடு பற்றி உவமையும், காணாமற்போன திராக்மா உவமையும் பல வகைகளில் மிகவும் ஒத்திருக்கின்றன. இரண்டுமே ''மகிழ்ச்சி'' பற்றிய உவமைகள். காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயர் ''நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்''. அதுபோலவே, காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்த பெண்ணும் தம் ''தோழியரையும், அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்''. இதுதான் இன்றைய நற்செய்தி!

நமது வானகத் தந்தை நம்மை அன்பு செய்வதில், மன்னிப்பதில், மீண்டும் அரவணைத்து ஏற்றுக்கொள்வதில் ஊதாரியாக இருக்கிறார். அவர் நமது குற்றங்களைப் பட்டியலிட்டுக், கணக்கு வைத்துக்கொள்வதில்லை. மாறாக, எத்தனை முறையும் மன்னிக்கத் தயாராக இருக்கிறார். திருப்பாடல் 103 சொல்வதுபோல, "தந்தை தம் பிள்ளைகள் மேல் இரக்கம் காட்டுவதுபோல், அவர் நம்மீது இரங்குகிறார்". எனவே, நாம் அக்களிப்போம், அகமகிழ்வோம். நன்றி கூறுவோம். இந்த நாளில் இறைவனின் பேரன்பை உணர்ந்து, நன்றி சொல்வோமா! வணங்காக் கழுத்தினராய் வாழ்வதற்காக மன்னிப்பு கோருவோமா? நம்மைத் தேடி வரும் ஆயனின் குரல் கேட்டு மனந்திரும்புவோமா! வரம் கேட்டுச் செபிப்போம்.

அல்லது

இறை அன்பால் வழிநடத்தப்படும் என் அன்பின் சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்கிறேன். ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் வார ஞாயிறு வழிபாட்டில் உங்களோடு ஒன்றாக இணைவதில் மகிழ்ச்சியோடு இறைவனை புகழ்கின்றேன். நாம் பலமுறை கேட்ட, வாசித்திருக்கிற ஊதாரி மைந்தனின் உவமையை இன்று மீண்டும் ஒருமுறை வாசிக்கிறோம், தியானிக்கிறோம்.

ஊதாரி மகன் எந்த அளவுக்குத் தன் சொத்துக்களை அழிப்பதில் ஊதாரியாக இருந்தானோ, அந்த அளவுக்கு அன்பு காட்டுவதிலும், இரக்கம் அளிப்பதிலும் ஊதாரியாக இருந்தார் தந்தை. அத்தகைய வானகத் தந்தையை இறைவனாகப் பெற்றிருக்கும் நாம் பேறுபெற்றவர்கள். இறைவனைப் போற்றுவோம்.

இன்று பொறாமை கொண்டு, விருந்தில் கலந்துகொள்ளாமல் வெளியே நின்ற மூத்த மகனைப் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்.

இளைய மகன் "கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" என்று ஒத்துக்கொள்கிறான். ஆனால், மூத்த மகனோ வெளிப்படையாக எந்தப் பாவமும் செய்யவில்லை. மாறாக, தந்தையின் பரிவைக் கண்டு "சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாது" வெளியே நிற்கிறார். தந்தை வந்து உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டும் உள்ளே செல்லவில்லை. மாறாக, தந்தையின் மன்னிப்பில் குறைகாண்கிறார், குற்றம் சாட்டுகிறார். இந்த மூத்த மகன் தண்டிக்கப்பட்டதாகவோ, தந்தையால் கடிந்துகொள்ளப்பட்டதாகவோ உவமை சொல்லவில்லை. இருப்பினும், பொறாமை, சினம், தந்தைக்கு அவமதிப்பு, தம்பியின் மனமாற்றத்தில் மகிழாமை, தந்தையையே குறைகாணும் மனநிலை ... எனப் பல்வகைப் பாவங்கள் இவர் செய்துள்ளார் என்பது வெளிப்படை.

நாமும் சில வேளைகளில் பொறாமை கொள்கிறோம், இறைவனின் இரக்கத்தில் எரிச்சல் கொள்கிறோம், மனமாற்றம் அடைவோரைக் கண்டு கேலி செய்யும்போது, இறைவனையே அவமதிக்கிறோம், பிறரின் மனமாற்றத்தில் மகிழாமல் இருக்கும்போது, இறைவனையே குறைகாணுகிறோம். இத்தகைய மனநிலைகளுக்காக இறைவனிடம் வருந்தி மன்னிப்பு கோருவோமா! வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32:7-11,13-14

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்னெ ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக் கொள்கிறார்கள்'' என்றார். மேலும் ஆண்டவர் மோசேயிடம், ``இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார். அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர் முன் மன்றாடி, ``ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
திருப்பாடல்கள் 51: 1-2. 10-11. 15,17

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. -பல்லவி

இரண்டாம் வாசகம்

பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-17

அன்பிற்குரியவரே, எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது. `பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'. - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார். அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அவ்வாறே கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; .'' மேலும் இயேசு கூறியது: ``ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்னிப்பின் நாயகனே இறைவா,

மனமாற்றம் என்னும் இனிய கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் பாவி என்று ஏற்று, உம்மிடம் திரும்பி வருகின்றபொழுது, வானகத் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாவதற்காக உம்மைப் போற்றுகிறேன். அந்த மன்னிப்பின், மனமாற்றத்தின் அனுபவத்தை எங்களுக்கு எப்போதும் தந்து வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் ஆண்டவரே

கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எமக்கெனச் செய்து முடிக்கும் ஆண்டவரே!

இப் மண்ணிலே புலம்பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும், உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முற்படும் எல்லாவித தீய சக்திகளையும் இனங்கண்டு அவற்றை முறியடித்து, உமக்கேற்றவர்களாக வாழ எமக்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்னிப்பையும், இரக்கத்தையும் தாராளமாகப் பொழியும் அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்கள்மீது காட்டும் பேரன்பை பிறர்மீதும் பொழியும்போது, நாங்கள் அகமகிழவும், உம்மைப் பெருமைப்படுத்தவுமம் நல்ல மனதை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தேடி வரும் தெய்வமே இறைவா,

உம்மை விட்டுப் பிரிந்து வாழும் எங்களை ஆயனாகத் தேடி வருபவரே, எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பே உருவான ஆண்டவரே,

உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய மனநிலையை மாற்றி, தந்தையின் பரிவின் மனநிலையையும், மகனின் ஒப்புரவின் மனநிலையைத் தாரும். பிறரைத் தீர்ப்பிடாமல் வாழும் வரத்தையும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'பெண் ஒருவரிடம் இருந்த பத்து திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணைய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பார்' என்றார்'' (லூக்கா 15:8-9)

காணாமற்போன ஆடு பற்றி உவமையும் (லூக் 15:4-7) காணாமற்போன திராக்மா உவமையும் (லூக் 15:8-10) பல வகைகளில் மிகவும் ஒத்திருக்கின்றன. இரண்டுமே ''மகிழ்ச்சி'' பற்றிய உவமைகள். காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயர் ''நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்'' (லூக் 15:6). அதுபோலவே, காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்த பெண்ணும் தம் ''தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்'' (லூக் 15:9). அக்கால பாலஸ்தீன நாட்டில் சாதாரண வீடுகளின் உள்ளே அவ்வளவு வெளிச்சம் இருப்பதில்லை. எனவேதான் தன்னிடமிருந்த திராக்மா (ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்) தவறிப் போனதும் அது வீட்டுக்குள்ளேதான் எங்கேயோ விழுந்திருக்க வேண்டும் என அப்பெண் சரியாக முடிவுசெய்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நாணயத்தை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என அவர் உறுதியாயிருந்ததால் முதலில் ''எண்ணெய் விளக்கை ஏற்றுகிறார்''; பின் வீட்டைப் பெருக்குகிறார்; கவனமாக அந்த நாணயத்தைத் தேடுகிறார் (லூக் 15:8). அவருடைய முயற்சி வீண்போகவில்லை. தான் தொலைத்துவிட்ட நாணயத்தை அவர் மீண்டும் கண்டுபிடிக்கிறார்.

தவறிப் போன பொருள் கிடைத்துவிட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. ஆனால் இப்பெண் அந்த மகிழ்ச்சியைத் தன் உள்ளத்தில் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கவில்லை. தான் அடைந்த மகிழ்ச்சியை அவர் பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். எனவே, தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அணுகிச் சென்று அவர்களிடம் நடந்ததையெல்லாம் எடுத்துச் சொல்கிறார். தான் அடைந்த மகிழ்ச்சியில் அவர்களும் பங்கேற்பதைக் கண்டு அவருடைய மகிழ்ச்சி நிச்சயமாக பன்மடங்காகப் பெருகியிருக்கும். இயேசு இந்த உவமையை ஏன் கூறினார்? பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசு பாவிகளை வரவேற்பது பற்றியும் அவர்களோடு உணவருந்துவது பற்றியும் ''முணுமுணுத்தனர்'' (லூக் 15:2). அந்த முணுமுணுப்பு சரியல்ல என்று காட்டவே இயேசு இந்த உவமையைக் கூறினார். கடவுள் தம்மை விட்டுப் பிரிந்துசென்ற பாவிகளைத் தேடிச் செல்கிறார். அவர்களைக் கண்டுபிடித்துத் தம்மோடு சேர்த்துக்கொள்ளும் வரை அவர் ஓய்ந்திருப்பதில்லை. உவமையில் வருகின்ற பெண் கடவுளுக்கு உருவகம். தவறிப்போன திராக்மா கடவுளை விட்டுப் பிரிந்துவிட்ட பாவிக்கு உருவகம். பாவிகள் கடவுளிடம் திரும்பும்போது கடவுள் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றார். இந்த உண்மையை இயேசு அழகான ஓர் உவமை வழியாக நமக்கு உணர்த்துகிறார். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் நாம் அவரை விட்டு ஒருநாளும் பிரிந்துவிடலாகாது என்பதில் கருத்தாயிருக்கின்றார். அவருடைய எல்லையற்ற அன்பை நாம் உணர்ந்து அவரோடு எந்நாளும் அன்புறவில் இணைந்திருந்தால் அவர் நிறைவான மகிழ்ச்சி கொள்வார். அந்த மகிழ்ச்சியில் நமக்கும் பங்குண்டு.

மன்றாட்டு:

இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்கு அளித்தருளும்.