யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 12வது வாரம் திங்கள்கிழமை
2013-06-24

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு


முதல் வாசகம்

கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள் போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!
திருப்பாடல்கள் 139;1-3,13-15

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். பல்லவி

3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! பல்லவி

14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26

அந்நாள்களில் பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து `ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், `மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், `நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார். சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ``வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், ``உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, ``குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ``இக்குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ``இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்...செக்கரியா எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று எழுதினார்'' (லூக்கா 1:57,63)

செக்கரியா, எலிசபெத்து என்னும் தம்பதியர் ''வயது முதிர்ந்தவர்கள்'' (லூக் 1:18). ஆனால் அவர்களுக்கு மகப் பேறு இல்லை. இருவருமே குரு குல வரிசையில் வந்தவர்கள். செக்கரியா திருக்கோவிலில் குருத்துவப் பணி ஆற்றி, தூபம் காட்டுகிற வேளையில் அவருக்குக் கடவுளிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. வயது முதிர்ந்த அத்தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதே அச்செய்தி. அதை கபிரியேல் வானதூதர் செக்கரியாவுக்கு அறிவிக்கிறார். செக்கரியாவுக்கோ பெரும் அதிர்ச்சி. கடவுளிடமிருந்து வந்த செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. அப்போது வானதூதர் ''நான் கூறிய வார்த்தைகள் நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்'' (காண்க: லூக் 1:20) என்கிறார். பேறு காலம் வந்ததும் எலிசபெத்து ஓர் ஆண்மகவை ஈன்றெடுக்கிறார். இவ்வரலாறு விவிலியத்தில் வருகின்ற பிற அதிசயப் பிறப்பு வரலாறுகளை ஒத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, வயதில் முதிர்ந்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்ததைக் குறிப்பிடலாம் (தொநூ 18:1-15). அதுபோல, மனோவாகு என்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் சிம்சோன் பிறந்ததும் (1 நீத 13:2-25), எல்கானா என்பவருக்கும் அவருடைய மனைவி அன்னாவுக்கும் சாமுவேல் பிறந்ததும் (1 சாமு 1-23) முதிர்ந்த வயதில் நிகழ்ந்தவையே. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்னும் உண்மையை இந்த நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. யோவான் பிறந்த செய்தி அவருடைய பெற்றோருக்கும் உற்றார் உறவினர்க்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்ந்தது (லூக் 1:58).

பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. யூத வழக்கப்படி, குழந்தைக்கு இடப்படுகின்ற பெயர் அக்குழந்தையின் குடும்பப் பின்னணியோடு அல்லது அக்குழந்தையின் சிறப்பியல்புகளோடு ஏதாவது ஒருவிதத்தில் தொடர்புடைய ஒரு கருத்தைத் தெரிவிப்பது உண்டு. குழந்தைக்கு அதன் பாட்டனார் பெயரை இடுவது வழக்கம் (காண்க: லூக் 1:61). மேலும், இடப்படுகின்ற பெயர் அப்பெயருடையவரின் ஆளுமையை வரையறுப்பதாகவும் கருதப்பட்டது. யோவான் என்னும் பெயர் ''ஆண்டவர் பெரிதும் இரக்கம் காட்டினார்'' எனப் பொருள்படும் (காண்க: லூக் 1:58). எனவேதான் இப்பெயரைத் தமிழில் ''அருளப்பன்'' என்று பெயர்த்தார்கள். இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடு எனலாம். ''இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என நாம் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பின்போதும் வியந்து கூறலாம் (காண்க: லூக் 1:66). ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் சாயலாகவே இவ்வுலகில் வருகிறது. அச்சாயல் நாள்தோறும் தெளிவாகத் துலங்கிட வேண்டும் என்றால் நாம் கடவுளிடம் துலங்குகின்ற அன்பு, இரக்கம் என்னும் பண்புகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது நாமும் கடவுளின் அருள் பெற்றவர்களாக வாழ்வோம், பிறரும் அந்த அருளை அனுபவிக்க வழியாவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள் பெருக்கால் எங்களை நிறைவுசெய்யும் நற்செயலுக்கு நன்றி!