திருவழிப்பாட்டு ஆண்டு C (12-05-2013)
திருப்பலி முன்னுரை
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்! எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே, சிறார்களே, இளைய உள்ளங்களே, சகோதர சகோதிரியரே!
இயேசுவின் விண்ணேற்பு ஞாயிறு வாழ்த்துக்கள்.
உயிர்த்த இயேசுவின் விண்ணேற்பு நாளில், நாம்! நம் மத்தியில், நாம் வாழும் சூழலில், நம்மை தாங்கியிருக்கும் திருச்சபையில்,
நம் பங்கேற்பையும், பொறுப்பையும், அழைப்பையும் புதுப்பித்துக்கொள்ள அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவர் தம்மில் நம்பிக்கை கொண்டவரையும், தம் பணியாளரையும் ஒருபோதும் ஆண்டவர் கைவிடுவதில்லை.
தம்மிலே நம்பிக்கை வைத்து வாழ்வோரை, ஆண்டவர்தம் பணியாளர்களை அனுப்பி அருள் நலன்களால் நிரப்புகின்றார்.
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.
நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்
என்னும் ஆற்றல் மிகு ஆசீரை நமக்களித்து நம்மை உறுதிப்படுத்துகின்றார்.
ஆகவே நாம் அனைவரும் என்றென்றும் நம்மோடு நிலைத்து நின்று வாழ்வுதரும் இறைவனது பேரன்பிற்காக நன்றி சொல்லுவோம்,
ஆண்டவரை முழுமனத்துடன் வணங்கி அவரை முழு உள்ளத்தோடு ஆராதித்து பெருமிகிழ்ச்சி கொள்ளுவோம்,
இறைவனை எப்பொழுதும் இறை பிரசன்னத்தைத் தேடி அவரைப் போற்றுவோம், இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
தீர்மானங்களுடன் திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்" என்று கூறினா
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1;1-11
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.
2 விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.
3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.
4 அவர்களோடு சேர்;ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள்.
5 யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்" என்று கூறினார்.
6 பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?" என்று கேட்டார்கள்.
7 அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்;ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல;
8 ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்;லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்.
9 இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவி;ட்டது.
10 அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி,
11 "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்
திருப்பாடல்கள் 47;1-2,5-8
1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி
2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே;
5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பல்லவி
6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்
. ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். பல்லவி
கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசகம் கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். தூய பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இரண்டாம் வாசகம் - 9;24-28 10;19-2324 அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்.
25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.
26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.
27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.
28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
19 சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.
20 ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.
21 மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.
22 ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக.
23 நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா 24: 46-53
46 அக்காலத்தில் யேசு தம் சீடர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47 'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
8 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்" என்றார்.
50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.
53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
“என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார்.
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்”“ என்னும் இயேசுவின் சொற்களை இன்று இதயத்தில் இருத்துவோம்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
அன்பே உருவான இறைவா,
தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றை உம் திருமகன்
இயேசு அறிவுறுத்தியது போல, சவால்கள் பெருகிவிட்ட இன்றைய இக்காலகட்டத்தில்
எம் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும்,
சீரிய வழிகாட்டுதல்லளையும், ஞானத்தையும், அறிவுரைகளையும் நீரே வழங்கி,
நற்செய்தியைத் தம் வாழ்வாலும், பணியாலும் அறிவிக்கும் ஆற்றலை அவாகளுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
விண்ணில் வாழ்பவராம் இறைவா,
இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும்,
விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
வாழ்வளிப்பவராம் இறைவா,
உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து,
எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல்,
உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை
எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பின் பிறப்பிடமே இறைவா,
எம் இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும், இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கொடுத்தது போன்ற
ஆற்றலையும், சக்தியையும் பெற்று தாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றவர்களாகவும்,
உமது நற்செய்தியின் தூதுவர்களாகவும் செயற்படும் சக்தியை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும்,
கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும்,
நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப
பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எங்கள் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் தந்தையே இறைவா!
வேலையின்றியும், வதிவிட அனுமதிக்காக வேதனையோடு காத்துக்கொண்டும்,
குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி
அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
"தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்".
“ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்” என்பதே இன்றைய விழாவின் மையப் பொருள். இன்றைய விழாவின் அழைப்பும் அதுவே.
ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்பு விழா நமது வாழ்வின் இலக்கை ஆய்வு செய்ய அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் விண்ணேற்பு நமக்கெல்லாம் ஒரு முன் மாதிரி. இயேசுவைப் போலவே நாமும் விண்ணேற்படைந்து, கடவுளின் வலப்புறம் அமரவேண்டும் என்பதே இறைவனின் திருவுளம். அதுவே நம் வாழ்வின் இலக்கு.
இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே. நமது கண்களோ விண்ணகம் நோக்கியே அமையவேண்டும். இவ்வுலக இன்பங்களில் நமது காலத்தைக் கடத்தாமல், விண் நோக்கி நமது கண்களும், இதயமும் எழும்பட்டும்.
இவ்வுலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சாராதவர்களாக, விண்ணகம் சார்ந்தவர்களாக நம் வாழ்வு அமையவேண்டும். நமது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நாம் விண்ணகம் நோக்கிப் பயணம் செய்பவர்கள் என்னும் எண்ணத்தைப் பிறருக்கு வழங்கவேண்டும்.
மன்றாட்டு:
விண்ணில் வாழும் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவைப் போல நாங்களும், விண்ணேற்படைந்து உமது வலப்புறம் அமரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குவோமாக. இவ்வுலகைச் சார்ந்தவர்களாக வாழாமல், விண்ணுக்குரியவர்களாக வாழ அருள்தாரும். ஆமென்.
|