யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)



திருவழிப்பாட்டு ஆண்டு C (17-03-2013)

இயேசு, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' 
என்று அவர்களிடம் கூறினார்/> இயேசு, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' 
என்று அவர்களிடம் கூறினார்/> இயேசு, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' 
என்று அவர்களிடம் கூறினார்/> இயேசு, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' 
என்று அவர்களிடம் கூறினார்/> இயேசு, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' 
என்று அவர்களிடம் கூறினார்/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம், தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு தினத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்க ஒன்று கூடியுள்ளோம்.

நேற்று தீர்ப்பிடும் உரிமை மனிதருக்கு அல்ல, இறைவனுக்கு மட்டுமே உண்டு என்று பார்த்தோம். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இன்றும் நாம் தீர்ப்பிடுவது பற்றிச் சிந்திக்கிறோம். இயேசு இறைவனின் இன்னொரு முகத்தை, பரிவின் பார்வையைக் காட்டுகிறார். “நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம்” என்று விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் இயேசு சொல்வதன் மூலம், இறைவனும் நம்மைத் தீர்ப்பிடாமல், மன்னிக்க முன்வருவதைக் காட்டுகிறார்.

இறைவனுக்கு இரண்டு பண்புகள் இருக்கின்றன: நீதி, அன்பு. இறை நீதியின்படி நாம் தண்டனைக்குரியவர்களாக இருந்தாலும், இறை இரக்கத்தின்படி நாம் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறோம். காரணம், நமது பாவங்கள், குற்றங்கள் அனைத்தையும் இயேசு தாமே முன்வந்து, சுமந்துகொண்டார். சிலுவையிலே அறைந்துவிட்டார். நம் பாவக் கடன்களையெல்லாம் ஒழித்துவிட்டார். நமது கடன்பத்திரத்தை அழித்துவிட்டார்.

எனவே, நாம் இனி பாவம் செய்யாமல் வாழ்வோம். பிறரையும் தீர்ப்பிடாமல் வாழ்வோம். இறைவனில் உண்மையான விசுவாசம் கொண்டு, அவர் காட்டும் வழியைப் பின்பற்றி வாழ வரம் கேட்டுச் செபிப்போம். இத்தகைய உணர்வுகளோடு திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 43:16-21

.16 கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும்,17 தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே.18 முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்: முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்:19 இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்: இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்: பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்.20 காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்: குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்: ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்: பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன்.21 எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.
திருப்பாடல்கள் 126:1-6

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார் என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். 4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். 6 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள்.

இரண்டாம் வாசகம்

இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:8-14

.8 உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.9 கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது: நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.10 கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.11 அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.12 நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.13 அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு,14 பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8:1-11

1 (இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் ; ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: என்கிறார் ஆண்டவர்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்த, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் திறமையான திருப்பணிக்கும், ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் அவரது அயராத உழைப்புக்கும் நன்றி சொல்லி, அவர் தொடர்ந்தும் பிரார்த்தனையிலும், தியானத்திலும் தனது வாழ்நாளைச் செலவிடவும், திருஅவைக்கு புதிய திருத்தந்தையைத் தந்தருளவும், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் தம்மை வந்தடையும் எல்லாவித சோதனைகளையும் வென்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய வலிமையும், சக்தியும், மனப்பக்குவமும் பெற்று செயற்படுவதற்கு, ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கமும் மன்னிப்பும் வழங்கும் இறைவா,

உமது பேரன்பால் எங்களைத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்றுக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். உமது மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட நாங்கள் இனி பாவம் செய்யாமல் வாழ அருள்தந்து எம்மை ஏற்றுக்கொள்ள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர் என்ற உமது திருமகனும், எங்கள் ஆண்டவருமான இயேசுவின் வார்த்தையைப் பின்பற்றி நாங்கள் மற்றவரைத் தீர்ப்பிடாதிருக்கவும், பாவத்திற்கு காரணமான செயல்களை அடியோடு வெறுத்து ஒதுக்கவும் எமக்கு நல்மனத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' என்று அவர்களிடம் கூறினார்'' (யோவான் 8:7)

யோவான் நற்செய்தியில் ''விபசாரத்தில் பிடிபட்ட பெண்'' பற்றிய கதை வருகிறது. இது தொடக்கத்தில் லூக்கா நற்செய்தியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், பின்னர் யோவான் நற்செய்தியில் இடம் பெற்றது என்றும் அறிஞர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்நிகழ்ச்சியிலிருந்து இயேசுவின் இரக்க குணத்தை நாம் அறிகிறோம். கடவுள் பாவத்தை வெறுக்கிறார், ஆனால் பாவியை அவர் அன்புசெய்கிறார். இந்த உண்மையை நமக்கு இயேசு உணர்த்துகிறார். அது மட்டுமல்ல, மனிதரில் யாருமே தம்மில் பாவம் இல்லை என்று கூற முடியாது. கடவுளிடமிருந்து அகன்று சென்று, அவரைக் கைவிட்டுவிடுகின்ற நேரங்கள் நம் வாழ்வில் உண்டு. எனவே, பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன்னால் நாம் நம்மையே தீர்ப்பிட வேண்டும். அதாவது, கடவுளின் பார்வையில் நாம் எவ்வாறு தோற்றமளிக்கிறோம் என்பதை நாம் கருத வேண்டும். -- தூய்மையே உருவான கடவுளின் முன்னிலையில் நாம் அனைவருமே குறை உள்ளவர்கள்தாம். ஆகவே, பிறர்மீது குற்றம் சாட்ட முனைவோர் முதலில் தங்கள் குற்றங்களை ஏற்க வேண்டும். இத்தகைய மனநிலை நம்மிடம் இருந்தால் நாம் கடவுளின் மன்னிப்பைப் பெறுவோம். கடவுள் தருகின்ற மன்னிப்பை நன்றியோடு ஏற்கின்ற மனிதர் பிற மனிதரையும் மன்னிப்பதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால் மன்னிப்பு அனுபவத்தை நாம் பெற வேண்டும் என்றால் நமக்கு மன்னிப்புத் தேவை என்பதை முதலில் நாம் ஏற்க வேண்டும். இயேசுவின் எதிரிகளிடம் இம்மன நிலை இல்லை. கடவுளிடமிருந்து மன்னிப்பை இறைஞ்சுவோம்; பிறரை மன்னிக்க முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் பாவங்களை நீர் மன்னித்து எங்களை ஏற்பதால் நாங்களும் பிறரை மன்னிக்க அருள்தாரும்.