முதலாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 1வது வாரம் செவ்வாய்க்கிழமை 2013-02-19
முதல் வாசகம்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 55:10-11
10 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை.11 அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்
திருப்பாடல்கள் 34:3-6, 15-18
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.
15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:7-15
7 மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: ' விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!10 உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!11 இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். 'ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.' 14 மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
நீங்கள் இவ்வாறு செபிக்க வேண்டாம் ” !
இயேசு ஒரு நல்லாசிரியர். எனவேதான், எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற இரண்டையும் தன் சீடர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் எவ்வாறு செபிக்க வேண்டும், எவ்வாறு செபிக்கக் கூடாது என செபத்தின் இரு கோணங்களையும் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக, பிற இனத்தாரைப் போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போகவேண்டாம் என எச்சரிக்கிறார். நம்மில் செப ஆர்வலர்கள் பலர் இருக்கிறோம். செப ஆர்வலர்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கிறது. அதேவேளையில், தவறான செப ஆர்வமும் பெருகுகின்றது. எனவே, இயேசுவின் இந்த எச்சரிக்கை சீரிய முறையில் எடுக்கப்பட வேண்டும். அதிக நேரம் செபிப்பதோ, அதிக சொற்களைக் கொண்டு செபிப்பதோ, இறைவனுக்கு ஏற்புடைய செபமாகிவிடும் என்று நாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சொற்களின் பின்னேயுள்ள மனநிலையும், செபத்தைத் தொடர்ந்து வரும் வாழ்வும் நேர்மையானதாக இருக்க வேண்டும். அதுபோலவே, செபத்திற்காக அதிக நேரம் செலவிடுவது மட்டுமே அதனை ஏற்புடையதாக மாற்றிவிடாது. முரண்பாடற்ற வாழ்வும், செப மனநிலையும் அவசியம் என்று பரிசேயர்களை மேற்கோள் காட்டி எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. அதனை ஏற்று, நமது செபத்தை, மனநிலையை ஆய்வு செய்வோம்.
மன்றாட்டு:
செப வீரரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எவ்வாறு செபிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுத் தருவதற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் செபங்கள் தந்தை இறைவனுக்கு ஏற்புடைமையாகுமாறு எங்கள் மனதைத் துhய்மைப்படுத்தியருளும். நாங்கள் செபிப்பதற்கேற்றவாறு வாழ அருள் தாரும். ஆமென்.
|