யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை
2013-02-09


முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13:15-17,20-21

15 ஆகவே, அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப்பலியைச் செலுத்துவோமாக, அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்.16 நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்: அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப்பற்றிக் கணக்கு கொடுக்கவேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.20 என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே.21 அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல்கள் 23:1-6

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:30-34

30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.31 அவர் அவர்களிடம், ' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு திருத்தூதர்களிடம், 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்றார்'' (மாற்கு 6:31)

இயேசு நற்செய்தி அறிவிக்கும் பணியைத் திருத்தூதர்களிடம் ஒப்படைத்திருந்தார். அவர்கள் பயணம் சென்று நற்செய்தி அறித்துவிட்டுத் திரும்பி வருகிறார்கள். இக்காட்சியை மாற்கு வடிவமைத்திருக்கும் பின்னணி கருதத்தக்கது. அதாவது, எகிப்திலிருந்து விடுதலையடைந்து வந்த இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில்தான் ஒருங்கிணைந்த மக்கள் குழுவாக, மோசேயின் தலைமையில் உருவானார்கள்; கடவுள் மோசே வழியாக வழங்கிய திருச்சட்டம் அவர்களை ஒன்றுசேர்த்தது. அதுபோலவே இயேசுவும் தம் சீடர்களைப் பாலைநிலத்தில் ஒன்றுசேர்த்து, அவர்களுக்குத் தம் போதனையை வழங்கி, அவர்களை ஒரு நிலையான குழுவாக ஏற்படுத்துகிறார். பாலைநிலத்தில் இயேசு பெருந்திரளான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கிறார் (மாற் 6:34-44). இந்த நிகழ்ச்சி முற்காலத்தில் கடவுள் தம் மக்களுக்குப் பாலைநிலத்தில் மன்னா என்னும் அதிசய உணவை அளித்து, அவர்களுடைய பசியைப் போக்கியதை நினைவுபடுத்துகிறது. -- பாலைநிலத்தில் கடவுள் தம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் போதனையும் உணவும் அளித்த நிகழ்வுகள் தொடக்க காலத் திருச்சபையிலும் பிற்பட்ட வரலாற்றிலும் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. இன்றும் நாம் ''பாலைநிலத்தில்'' கடவுளைச் சந்திக்க முடியும். அன்றாட வாழ்க்கையின் கவலைகளைச் சிறிது மறந்துவிட்டு, கடவுளின் பிரசன்னத்தை நம் வாழ்வில் ஆழ உணர்ந்துகொள்வதற்குப் ''பாலைநில'' அனுபவம் துணையாக அமையும். ஒவ்வொரு நாளும் கடவுளோடு உரையாட சிறிது நேரம் ஒதுக்குவது ''பாலைநில'' அனுபவம். ஆண்டுக்கு ஒருமுறை ஒருசில நாள்கள் அமைதியில் இறைவனைக் கண்டு அவரோடு உறவாட நாம் முன்வருவதும் ''பாலைநில'' அனுபவமே.

மன்றாட்டு:

இறைவா, உம்மோடு உறவாட எங்களுக்கு நன்மனத்தைத் தந்தருளும். .