முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை 2013-01-25
முதல் வாசகம்
நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22:3-16
3 நான் ஒரு யூதன்: சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்: ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்: கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்: நீங்கள் அனைவரும் இன்று கடவுள் மீது ஆர்வம் கொண்டுள்ளது போன்று நானும் கொண்டிருந்தேன்.4 கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைந்தேன்: சாகும் வரை அவர்களைத் துன்புறுத்தினேன்.5 தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.6 நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழந்து வீசியது.7 நான் தரையில் விழுந்தேன். அப்போது, சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்ற குரலைக் கேட்டேன்.8 அப்போது நான், ஆண்டவரே நீர் யார்? என்று கேட்டேன். அவர், நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே என்றார்.9 என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்: ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.10 ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்? என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும் என்றார்.11 அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.12 அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்: அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்.13 அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும் என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.14 அப்போது அவர், நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார்.15 ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும்.16 இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப் பெற்றுத் திருமுழுக்குப் பெறும் என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்
திருப்பாடல்கள் 117:1,2
1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!
2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:15-18
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
" .. உலகெங்கும்.. ..நற்செய்தி" மாற்கு 16:15)
உலகெங்கும் படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது இயேசுவின் தீராத ஆசை. தன் பொதுப்பணியைத் தொடங்கும்போது, லூக்கா 4:18-19 வசனங்களில், நற்செய்தியை அறிவிப்பதை தன் பணிவாழ்வின் இலக்காகக் கொண்டிருந்ததை அறிகிறோம். அவ்வாரே, தாம் உயிர்த்த பின், விண்ணகம் செல்லும் முன், தன் அதே பணி தொடர வேண்டும் என்பதற்காக, தம் சீடர்களுக்கு, உலகெங்கும் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுவதை தம் கட்டளையாகக் கொடுக்கிறார்.
நம் இறைவன் இயேசுவின் இந் நற்செய்தி ஒரு இனத்துக்கோ, இடத்துக்கோ, காலத்துக்கோ, கலாச்சாரத்துக்கோ மட்டும் உறியதல்ல. உலகெங்கும் உள்ள படைப்பு அனைத்திற்கும் வழங்கப்பட்ட செய்தி. இந்த நற்செய்தியை அறிவிக்க வேண்டியது சீடர் ஒவ்வொருவரின் கடமை. ஆயரும் குருக்களும் துறவியரும் மட்டுமே அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள் என நினைப்பது தவறு.
நற்செய்தியைக் கேட்டோர் இயேசுவையும் தந்தை இறைவனையும் தூய ஆவியையும் விசுவசித்துத் திருமுழுக்குப் பெற வேண்டும். இத் திருமுழுக்கைத் தம் வாழ்வாக்க வேண்டும்.இயேசுவின் இந்த நற்செய்தியை அறிவிப்போரையும் அதனால் பயன்பெறுவோரையும் இறைவன் தம் வல்லமையால் நிரப்புவார். எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நற்செய்தியை அறிவிப்போம். வாழ்வோம். வாழ வைப்போம். வாழ்த்துக்கள்.
மன்றாட்டு:
இறைவா, உம் சிந்தனையால் நாங்கள் ஆட்கொள்ளப்பட அருள்தாரும்.
|