முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 2வது வாரம் புதன்கிழமை 2013-01-23
முதல் வாசகம்
மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7:1-3,15-17
1 இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்: உன்னத கடவுளின் குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார்.2 ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள்.3 இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை: தலைமுறை வரலாறு இல்லை: இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை: முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: குருவாக என்றும் நிலைத்திருப்பவர்.15 மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது.16 இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார்.17 இவரைப் பற்றி, மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
திருப்பாடல்கள் 110:1,2,3-4
1 ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். 4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-6
1 அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.2 சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.3 இயேசு கை சூம்பிவரை நோக்கி, ' எழுந்து, நடுவே நில்லும் ' என்றார்.4 பின்பு அவர்களிடம், ' ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? ' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.5 அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ' கையை நீட்டும் ' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.6 உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
"நன்மை செய்வதா, தீமை செய்வதா?" (மாற்கு 3:4)
இதற்கு ஒரு பட்டிமன்றம் தேவையா? உறுதியாக நன்மை செய்வதுதான் என்று ஒருவாய்ப்பட எல்லோரும் சொல்வோம். ஆனால் இங்கு இவர்களுக்கு ஒரு பெரிய பட்டிமன்றம், கருத்தரங்கு, விழிப்புணர்வு முகாம் தேவைப்படுகிறதே. வாயைத் திறந்து "நன்மை செய்வதே" என்று சொல்ல வாய் வரவில்லையே. பேசாமல் மௌனம் அல்லவா சாதிக்கின்றனர். இயேசுவி;ன் கேள்விக்குப் பதில் வரவில்லையே. "ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்." (மாற் 3:4)
இயேசு இவர்களிடமிருந்து பதிலையோ சம்மதத்தையோ பாராட்டையோ எதிர்பார்க்கவில்லை. நன்மை செய்வதில் பின்வாங்கவும் இல்லை. கை சூம்பியவரை நோக்கி, கையை நீட்டும் என்றுச் சொல்லி நலமளிக்கிறார்.நல்லதைச் செய்ய யாருடைய சம்மதத்தையும் பாராட்டுதலையும் பெற வேண்டிய அவசயம் இல்லை என்பதையும், யாருடைய நிர்பந்தத்திற்கும் பணிய வேண்டியதில்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறார்.
அந்த பரிசேயர்களைப்போல நாம் மௌனம் சாதிக்கும் நேரங்கள் எவை? அதற்கு காரணம் என்ன? நாம் விரும்பாத ஒருவருக்கு அந்த நல்லது நடப்பதாலா!. அந்த பணக்காரனுக்கு எதிராக, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக என்னால் குரல் கொடுத்தால் எனக்கு இழப்பு என்பதாலா? நமக்கு ஏன் வம்பு என்ற பயமா?! நல்லவை எங்கு,யாருக்கு, எப்போது நடந்தாலும் குரல் கொடுப்போம். வாழ்த்துக்கள்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனின் பள்ளியில் பயின்ற பாடத்தைப் பிறரோடு பகிர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
|