முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 1வது வாரம் வெள்ளிக்கிழமை 2013-01-18
முதல் வாசகம்
நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவேமாட்டார்கள்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:1-5,11
1 ஆதலின், கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால், உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக்கூடாது என எண்ணுகிறேன். இது குறித்து நாம் கவனமாயிருப்போமாக.2 ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை: ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை.3 இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே. இதைக் குறித்தே, நான் சினமுற்று, ″ நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவேமாட்டார்கள்″ என்று ஆணையிட்டுக் கூறினேன் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன.4 ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம்நாள் பற்றி, கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.5 மேலும், மேற்சொன்ன சொற்றொடரில், அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள் என்றிருக்கிறது.11 ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
இறைவனின் செயல்களை மறவாதீர்கள்
திருப்பாடல்கள் 78:3-8
3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம். 4 அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்; வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம்.
5 யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்; இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்; இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார். 6 வரவிருக்கும் தலைமுறையினர் இவற்றை அறிந்திடவும், இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் - இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,
7 அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், 8 தங்கள் மூதாதையரைப்போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும் இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-12
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?9 முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,11 ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார்.12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" (மாற்கு 2:12)
இதைப்போல நாம் ஒருபோதும் காண முடியாது. ஏனென்றால் அங்கு நடந்தது ஒரு நிகழ்ச்சி அல்ல, பல. அன்றாட நிகழ்ச்சி அல்ல, அபூர்வமானது. முடக்குவாதம் குணமாகியுள்ளது. பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன. நல்லவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர. மறை நூல் வல்லுநரின் வெளி வேடம் வெளிச்சமிடப்பட்டுள்ளது.
நல்லவர்கள் நான்குபேர் எடுத்த முயற்சி, ஒருபோதும் காணாத அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது. இந்த நான்குபேரிடமிருந்த பண்புகள் நாட்டில் பெருகும் போதெல்லாம் நம்மிடையே ஒருபோதும் காணாத அதிசயங்களைக் காண முடியும்.
இயேசுவின் குணப்படுத்தும் ஆற்றல் மீது ஆழ்ந்த நம்பிக்கை, நோயுற்ற மனிதன் குணம் பெற வேண்டும் என்ற ஆசை, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அதற்காக ஒதுக்கும் தாராள மனது இவை எங்கெல்;லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் அற்புதங்களைக் காணமுடியும்.
நல்லவைகள் நடைபெறும்போது குறைகாண்பதற்கென்றே சில அறிவாளிகள் அங்கங்கே வருவார்கள். அவர்களை இயேசுவைப்போல அலட்சியம் செய்து, நற்செயல்கள் நடைபெற நல்லவர்கள் முன்வந்தால் நாள்தோறும் நம்மிடையே இதுபோன்றவைகளை கண்டு மகிழலாம். நல்லவர்களில் ஒருவராகுங்கள். இதைப்போல எப்போதும் காண்போம். வாழ்த்துக்கள்.
மன்றாட்டு:
இறைவா, இயேசுவை மனமுவந்த பின்பற்றிச் செல்ல எங்களுக்கு அருள்தாரும்.
|