
![]() அன்னை ஓர் அதிசயம் - அதிசய பனிமாதா திருத்தலம், கள்ளிகுளம்இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது தெற்கு கள்ளிகுளம் பனிமாதா திருத்தலம். இது இந்தியாவின் முன்னணி அன்னைமரியின் ஆலயங்களில் ஒன்றாக உள்ளது. கள்ளிகுளம் கிராமத்தில் ஒரு காலத்தில் கள்ளிச்செடிகளும் முட்புதர்களும் மண்டிக் கிடந்தன. கள்ளிகுளத்தில் ஏறத்தாழ 1700ஆம் ஆண்டுவாக்கில் மக்கள் முதன் முதலில் குடியேறினர். கள்ளிகுளம், வடக்குன்குளத்திற்கு ஏறக்குறைய 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு வடக்குன்குளம் பங்குத்தந்தையரே மேய்ப்புப்பணிகளைச் செய்து வந்தனர். கள்ளிகுளம் மக்கள் வடக்குன்குளம் பங்குத்தந்தையின் உதவியுடன் ஒரு சிறிய ஓலைக் குடிசையில் சிற்றாலயம் அமைத்து அதை அன்னைமரியாவுக்கென அர்ப்பணித்து செபித்து வந்தனர். 1838ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மார்ட்டின், மோசேட் என்ற இரு இயேசு சபை குருக்கள் கள்ளிகுளத்திற்கு வந்தனர். அவர்களின் கண்காணிப்பில் பழைய சிற்றாலயம் சீரமைக்கப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டது. கள்ளிகுளம் நீண்ட காலமாகத் தேரைக்குளம் என்றே அழைக்கப்பட்டது. ஆலயம் அமைந்திருந்த இடம் தேரைக் குளமேயாகும். காலப்போக்கில் கள்ளிகுளத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை பெருகியது. அதனால் புதியதோர் பெரிய ஆலயம் தேவை என்பதை மக்கள் உணர்ந்தனர்.1884ஆம் ஆண்டு கள்ளிகுளம் கிராம மக்களும், அங்கு மறைப்பணியாற்றிய இயேசுசபை அருள்பணியாளர்களும் அன்னை மரியின் புகழ்பாட ஓர் ஆலயம் அமைப்பதென முடிவெடுத்தனர். ஆலயம் கட்டுவதற்கான இடம், ஆலய அளவு ஆகியவை குறித்து அவர்களால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. அவர்கள் அன்னையை வேண்டினர். அது ஒரு கடும் கோடை காலம். ஒரு நாள் காலையில் கள்ளிகுளம் மக்கள் வியக்கத்தக்க ஒரு நிகழ்வைக் கண்டனர். அந்தக் கோடை காலத்திலும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் பனியாலான போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. அன்றுதான் மக்கள் அன்னையின் ஆசீரைக் கண்டுணர்ந்தனர். புதிய ஆலயம் அமைய வேண்டிய இடத்தையும் அதன் அளவையும் அன்னை மரியே பனி வடிவில் அற்புதமாகக் குறித்துக் காட்டினார் என்று சொல்வார்கள். 1884ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆலயத்திற்கு இயேசு சபை அருள்தந்தை கவுசானல் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அதன் வண்ணக் கோபுரம், தொலை தூரத்தில் நடமாடும் மக்களையும் அன்னையின் ஆசி பெற அழைப்பது போன்ற தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் சிற்பி, அருட்திரு.விக்டர் டெல்பெக் அடிகளார் ஆவார். சிலுவை வடிவத்தில் இவ்வாலயத்தை அமைக்க அவர் திட்டமிட்டார். மக்கள் தங்களின் சொந்த உழைப்பினால் இவ்வாலயத்தைக் கட்டியெழுப்பினர். 1885ஆம் ஆண்டு விண்ணெட்டும் உயர ஆலயத்தை அவ்விடத்தில் கட்டி அன்னையின் திருவுருவத்தை நிறுவி அவ்வாலயத்தை பனிமாதாவுக்கு அர்ப்பணித்தனர். இந்த ஆலயத்தின் மொத்த நீளம் 151 அடியாகும், மற்றும் அகலம் 56 அடியாகும். பெரிய கோபுரம் மட்டும் 160 அடி உயரமாகும். இதில் ஏறிச் செல்வதற்கு உட்புறமாக 143 அடுக்கு வளைவுப்படிகள் உள்ளன. தூத்துக்குடியை அலங்கரிக்கும் புனித பனிமய அன்னை பேராலயத்திற்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பனிமயத்தாயின் பெயரால் புகழ் பெற்று விளங்கும் திருத்தலம் கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயமாகும். 1939ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23ஆம் நாள் கள்ளிகுளம் வரலாற்றில் பொன்னான நாள். பாறைக்கிணறு குருசடி அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களுக்கு மாலை 6.30 மணியளவில், மலையில் அன்னைமரியா காட்சியளித்து அவ்வூரை ஆசீர்வதித்துள்ளார். அக்காட்சியின்போது அன்னையின் பொற்பாதம் பதிந்த இடத்தில் அழகியதோர் கெபி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தூத்துக்குடி முதல் ஆயர், மேதகு பிரான்சிஸ் திபுர்சியுஸ் ரோச் அவர்கள், 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் திருப்பொழிவு செய்து திறந்து வைத்தார். அப்போது அவர் கள்ளிகுளத்தைத் ‘தென்பாண்டி நாட்டின் லூர்துபதி’ என அழகு பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தார். அன்னையின் அற்புதக் காட்சியினால் கள்ளிகுளத்தின் சிறப்பு தென்னகமெங்கும் பரவியது. அது மரியின் திருத்தலமாக மாறியது. அன்னை காட்சி தந்த மலையானது பற்பல காலங்களில் பங்குத் தந்தையர்களால் அழகுபடுத்தப்பட்டது. மாதா கெபி வரை, முறையான படிகள் வெட்டப்பட்டன. இன்று மலையேறும் படிக்கட்டைத் தழுவிய வண்ணம் அழகிய செபமாலை மறையுண்மைகள் தலங்களையும் சிலுவைப் பாதைத் தலங்களையும் காணலாம். இன்றும் மக்கள் கூட்டம் மலை மாதாவைத் தரிசித்து பல வரங்களைப் பெற்று வருகின்றது. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையில் அன்னைமரியின் பக்தர்கள் கூட்டம் பனி மலையில் அலை மோதுகிறது. கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயமும், அன்னையின் காட்சி மலையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய அதிசயத் திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் சிறப்புறக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வாழ்க்கையில் மலைபோல் வருகின்ற துன்பங்களெல்லாம் அன்னையின் அருளால் பனிபோல் மறையும் என்பதை, பனிமாதாவை அணுகுவோர் அனைவரும் உணர்வர். பனிமாதாவிடம் நம் ஆசைகளையும் ஏக்கங்களையும் எடுத்துரைத்து அருள் பெறுவோம். அன்னை ஓர் அதிசயம் - மழை மலைத் தாயின் புனித அருள் தலம் காஞ்சி மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பசுமையான மலைக்குன்றில் அமைந்துள்ளது மழை மலைத் தாயின் புனித அருள் தலம். இத் திருமலை நல்லாயன் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. 1960க்கும் 70க்கும் இடையிலான காலத்தில் தமிழகத்தில் புயல், வறட்சி போன்ற இயற்கை அழிவுகள் நிகழ்ந்தன. 1966ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு புயல் சென்னையில் பெரும் சேதம் ஏற்படுத்தியது. ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தை புயல்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் 1967 முதல் 1969 வரை தமிழகத்தை கடும் வறட்சி பாதித்தது. அப்போது அருட்தந்தை புஷ்பம் அடிகளார் மரியன்னையின் திருஉருவத்தை ஒரு தேரில் வைத்து அச்சிறுபாக்கம் பங்கு ஆலயமான புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து 65 கி.மீ. தொலைவு வரை மழை வேண்டி ஜெபித்துக்கொண்டு பொதுமக்கள் புடைசூழ எடுத்துச் சென்றார். தேர் புறப்பட்ட 9ஆம் நாள் மறுபடியும் ஆலயத்தை வந்தடைந்தவுடன் மக்களின் மனம் குளிரும் வண்ணம் பெருமழை பெய்தது. இதைக் கண்ட மக்கள் திரளாகக் கூடி நின்று மழையைக் கொடுத்த "மழை மாதாவே" என்று குரலெழுப்பி மகிழ்ந்தனர். மலையில் வீற்றிருந்து மழையைத் தந்த அன்னைக்கு "மழை மலை மாதா" என்று பெயரிட்டு மக்கள் அன்றிலிருந்து வழிபட ஆரம்பித்தனர். செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் துணைப் பாதுகாவலியாக மழை மலை அன்னை கொண்டாடப்படுகிறார். [2025-01-11 00:09:54] இறையியலாளர் பணி. Felix Wilfred மறைவுக்கு ஆசிய திரு அவை இரங்கல்!ஆசியாவின் முன்னணி இறையியலாளர் 76 வயது நிரம்பிய அருள்பணியாளர் Felix Wilfred அவர்கள், ஜனவரி 7, இச்செவ்வாயன்று சென்னையில் பெருத்த மாரடைப்பால் இறைபதம் அடைந்தார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருள்பணியாளர் Wilfred ஒரு புகழ்பெற்ற இந்திய இறையியலாளர் ஆவார். இறையியல், சமூக நீதி மற்றும் ஏழைகள் மற்றும் பொதுநிலையினருக்காக வாதிடுவதில் திருஅவையின் பங்கு பற்றிய அவரது முற்போக்கான மற்றும் தீவிரமான கருத்துக்களுக்காக உலகளவில் அவர் அங்கீகரிக்கப்பட்டார். அவர ஒரு மகிழ்ச்சியான மற்றும் அணுகக்கூடிய இறையியலாளராக விளங்கியதுடன், ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் வழிகாட்டியுள்ளார். மேலும் அவர் அனைத்துலக இறையியல் மறுஆய்வுக் குழுவின் தலைவராகவும், மறைந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் கீழ் செயல்பட்டுவந்த வத்திக்கானின் அனைத்துலக இறையியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். அத்துடன் அவர் ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் பணிகள் அலுவலகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார் மற்றும் இந்திய இறையியல் கழகத்தை வழிநடத்தினார்.இறையியல் புலமை, மதங்களுக்கு இடையிலான உரையாடல், சமூக நீதி ஆகியவற்றில் அருள்பணியாளர் Wilfred அவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா உட்பட பல பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பித்தார், மேலும் டப்ளின் மூவொரு கடவுள் கல்லூரியில் (Trinity College, Dublin) இந்திய ஆய்வுகளின் தலைவராகப் பணியாற்றினார். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கல்விநிலைய முதல்வராகவும் இருந்தார். மேலும் சிறந்த கல்விப் பணியையும் கொண்டிருந்தார், அத்துறையில் அவர் சிறந்து விளங்கியதற்காக பல தங்கப் பதக்கங்களைப் பெற்றார். கோட்டார் மறைமாவட்டத்தின் அருள்பணியாளரான வில்பிரட் 1972-ஆம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 2014-ஆம் ஆண்டில் குழித்துறை மறைமாவட்டம் புதிதாக உதயமானபோது, அவர் அதன் அங்கமானார். அவரது கல்வி அறிவுத்திறன் ஆழமான ஆன்மிகத்துடன் இணைந்து, இறையியல் மற்றும் உலகளாவிய தென்னகத்தில் செல்வாக்குமிக்கப் படைப்புகளை உருவாக்கியது. அருள்பணியாளர் Wilfred அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், ஆசிய கிறிஸ்தவத்தின் ஆக்ஸ்போர்டு கையேடு மற்றும் மத அடையாளங்கள் மற்றும் உலகளாவிய தெற்கு ஆகியவை மிகவும் குறிப்பிடத்தகுந்தவை. இந்நூல்கள் அறிவார்ந்த வட்டாரங்களில் மிகவும் மதிப்புக்குரியதாகக் கருதப்பட்டன. அருள்பணியாளர் வில்பிரட் அவர்கள் ஒரு பல்மொழியாளராகவும் (A polyglot) விளங்கினார். அவர் ஆங்கிலம், அவரது தாய்மொழியான தமிழ், இத்தாலி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நன்கு பேசக்கூடியவராக இருந்தார். இலத்தீன், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் பணிபுரியும் புலமையும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளிலும் அவருக்கு அடிப்படை புலமை இருந்தது. அருள்பணியாளர் வில்பிரட் அவர்கள், 2024-ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற பிறகு திடீரென மரணமடைந்தது இறையியல் சமூகத்தைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் நீதி, சமய நல்லிணக்கம் மற்றும் கலாச்சார புரிதலை வளர்ப்பதில் அவரது மரபுரிகைப் பண்பு (legacy) எதிர்கால சந்ததியினருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக நினைவுகூரப்படும் என்பது திண்ணம். (UCAN) [2025-01-11 00:08:12] கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்க அழைப்புவிடுக்கும் கிறிஸ்துமஸ்எளிய மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து உலகத்தின் ஒளியாகத் தோன்றினார் என்றும், கிறிஸ்துவின் அன்பும் மகிழ்ச்சியும் எல்லைகளைத் தாண்டி, அவரது அடிச்சுவடுகளில் நடக்க நம் அனைவரையும் அழைக்கிறது என்றும் எடுத்துரைத்தார் அருள்பணி பாபு.வடக்கு கர்நாடகாவின் குல்பர்கா மறைமாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான ஆலண்டில் பல்சமயத்தாருடன் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்பட்ட கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்ச்சியின் கொண்டாட்டம் பற்றிய தனது கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுடன் பகிர்ந்துள்ளார் Aland பகுதியில் உள்ள Shanthivana ஆலய இயக்குநர். அனுபவமண்டபத்தைச் சார்ந்த ஸ்ரீ கோரணேஸ்வர சுவாமிஜி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி என்னும் நிகழ்வில் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் திருமதி பூஜா லோஹர் அவர்கள் கலந்துகொண்டார் என்றும், ஆலந்து பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது அமைதி, எதிர்நோக்கு ஒற்றுமை என்பதை வெளிப்படுத்தியது என்றும் கூறினார் அருள்பணி பாபு. ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைக் கூட கொண்டிராத இப்பகுதியில் கிறிஸ்து பிறப்புவிழாவானது 8 வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட மறைப்பணி நிலையத்தாரால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகின்றது என்றும், மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மகிழ்ச்சி மற்றும் அமைதியின் செய்தியை வழங்கி வருகின்றது என்றும் கூறினார் அருள்பணி பாபு. ஸ்ரீ கோரணேஸ்வர சுவாமிஜி அவர்கள் உரையாற்றுகையில், இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அமைதியைக் கொண்டுவரவே வந்தார், இந்த அமைதியை நமது சமூகங்களில் வாழ வைப்பது நமது பொறுப்பு என்றும், அவரைப்போலவே நாம் அனைவரும் ஒருவரையொருவர் மதிக்கவும், அனைத்து மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் வேண்டும் என்று ஊக்குவித்தார். முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் திருமதி பூஜா லோஹர் அவர்கள் பேசுகையில் ஒற்றுமை மிக அவசியம் என்றும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக, நல்லிணக்கத்தையும், பரஸ்பர மரியாதையையும் வளர்த்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தை இயேசுவுக்கு மரியாதை செலுத்தினர் என்றும், சமய நல்லிணக்க உணர்வை எடுத்துக்காட்டிய இந்நிகழ்வில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் குழந்தை இயேசுவை வணங்கி ஆசீர் பெற்றனர் என்றும் எடுத்துரைத்தார். காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீடித்த இந்த கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் கொண்டுவரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு சான்றாக இருந்தது என்றும், அமைதியின் இளவரசராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட பலதரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒன்று கூடியது மனதிற்கு மகிழ்வைத் தந்தது என்றும் கூறினார் அருள்பணி பாபு. [2024-12-31 08:07:04] குழந்தைகள் மீதான இந்திய அரசின் புதிய உத்தரவிற்கு கிறித்தவர்கள் எதிர்ப்பு!இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வரும் நிலையில், அந்த மாநிலத்தின் குழந்தைகள் உரிமைகள் துறையால் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்க குழந்தைகளுக்கு பெற்றோர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி பெறக் கோரிய பணிப்பதிவை அங்கு உள்ள கிறிஸ்தவரக்ள் கண்டித்து வருவதாக கூறியுள்ளது யூக்கான செய்தி நிறுவனம். இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஜபல்பூர் மறைமாவட்டத்தின் கல்வியாளர் அருள்பணியாளர் தங்கச்சன் ஜோஸ் அவர்கள், அந்த அதிகாரத்திற்குப் பின்னால் ஒரு மறைமுக நோக்கம் உள்ளது என்றும், இது அறிவியல் மற்றும் கல்வி மையங்களை இயக்கும் பள்ளிகள் மற்றும் அதில் கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை தடுக்க எடுக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.டிசம்பர் 12-ஆம் தேதி, மத்தியப் பிரதேச குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநிலம் முழுவதும் இந்த ஆணையை கிறிஸ்துமஸ் விழாவிற்கு மிக அருகிலே பிறப்பித்து அரசு எங்களை அச்சுறுத்த முற்படுகிறது என்றும், டிசம்பர் 18, இப்புதனன்று யூக்கான் செய்தி நிறுவனத்திடம் உரைத்துள்ளார் பணியாளர் ஜோஸ். எந்த இந்து திருவிழாவுக்கும் முன்னதாக இந்த வகையான கட்டளை பிறப்பிக்கப்படுவது எப்போதும் காணப்படுவதில்லை. ஆனால், இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஒரு பொதுவான கொள்கையாக இதைப் பிறப்பித்திருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் ஜோஸ். கிறிஸ்தவராக இருக்கின்ற பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இவ்வாறான கட்டளையை புறக்கணிக்கின்றனர், ஏனெனில் அவர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் பங்கேற்க மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் அருள்பணியாளர் ஜோஸ். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசு, 2023-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது என்றும், அனைத்துத் தனியார் பள்ளிகளும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு முன் பெற்றோரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியது என்றும் அனைத்துக் கிறிஸ்தவர் கூட்டமைப்பின் தலைவர் Jerry Paul அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய மற்றும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள் கிறிஸ்தவ பள்ளிகள், விடுதிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்ல அதிகாரிகள் மீது பல வழக்குகளை பதிவு செய்துள்ளன என்றும், ஓய்வு பெற்ற ஆயர் மற்றும் சில அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகள் மீது, மத மாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, பிற குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு. [2024-12-21 23:32:06] இந்தியாவின் மணிப்பூரில் மீண்டும் வன்முறை!வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் பூர்வகுடியின குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த ஓராண்டாக இடம்பெற்று வந்த வன்முறை ஓரளவு அமைதியடைந்திருந்த வேளை, மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், மேற்கு மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நவம்பர் 12, புதன்கிழமை நேற்று ஆயுதமேந்திய குழுவினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. மேலும் ஆயுதங்கள் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் நவம்பர் 12 அன்று, பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குக்கி இனத்தைச் சேர்ந்த பதினொரு பேர் கொல்லப்பட்டனர், இதில் இரண்டு காவல் படை அதிகாரிகளும் காயமடைந்தனர் என்றும் அச்செய்திக் குறிப்பு கூறுகின்றது. இதுகுறித்து இச்செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த மாநிலத் தலைநகரான இம்பாலின் பேராயர் லினஸ் நெலி, அவர்கள், இந்தத் தீர்வு தற்காலிகமானது என்றும் வன்முறை சாம்பலுக்குள் எரிகிறது’ என்றும் குறிபிட்டுள்ள அதேவேளை, பேச்சுவார்த்தையிலும், அமைதியை ஏற்படுத்துவதிலும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதே தீர்க்கமான நடவடிக்கையாக அமையும் என்றும் கூறியுள்ளார். கடந்த வாரம் பூர்வகுடிப் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் இருந்து மாவட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது என்றும், இதற்கு காரணம் மெய்தி இன குழு உறுப்பினர்கள் தான் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. மறுநாள், இதற்குப் பழிவாங்கும் நோக்கில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. கடந்த சில நாள்களாக, மலைகளின் புறநகர்ப் பகுதிகளிலும், இம்பால் பள்ளத்தாக்கிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன என்றும், இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் அமலாக்கத்தை அக்டோபர் 1 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு மாநில அரசு நீட்டித்துள்ளது என்றும் உரைக்கின்றது அச்செய்திக் குறிப்பு. [2024-11-14 23:11:00] உலக அளவில் 110 கோடி பேர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்உலக அளவில் வறுமையில் வாடும் மக்கள் அதிகம் உள்ள 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ASIA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.உலக அளவில் 110 கோடி மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும் கூறும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட ஆய்வறிக்கை, உலகின் 110 கோடி ஏழை மக்களில் ஏறத்தாழ பாதி பேர் அதாவது 48.1 விழுக்காட்டினர் மிகவும் வறுமையில் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 23 கோடியே 40 இலட்சம் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்றும், 9 கோடியே 30 இலட்சம் பேர் பாகிஸ்தானிலும், 8 கோடியே 60 இலட்சம் பேர் எத்தியோப்பாவிலும், 7 கோடியே 40 இலட்சம் பேர் நைஜீரியாவிலும், 6 கோடியே 60 இலட்சம் பேர் காங்கோவிலும் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் 27 கோடியே 20 இலட்சம் ஏழைமக்களில் குடும்பத்திற்கு ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவராய் வாழ்கின்றனர் என்றும், இந்த நிலை ஆப்பிரிக்காவின் சஹாராவையடுத்துள்ள நாடுகளில் உள்ள 25 கோடியே 60 இலட்சம் மக்களை விட அதிகம் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில், ஏறக்குறைய 83.7 விழுக்காட்டு ஏழைமக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்றும், ஒட்டுமொத்தமாக, நகர்ப்புற மக்கள்தொகையில் 6.6 விழுக்காட்டினருடன் ஒப்பிடும்போது, உலக கிராமப்புற மக்களில் 28 விழுக்காட்டு மக்கள் ஏழைகளாக உள்ளனர் என்றும் கூறுகிறது செய்தி நிறுவனம். இந்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன என்று கப்புச்சின் துறவியர் அவைச் செயலரும், நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய ஆயர் பேரவையின் மேனாள் நிர்வாகச் செயலருமான அருள்பணி நித்திய சகாயம் தெரிவித்தார். மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாம் புறக்கணித்து விட்டோம் என்றும் நாட்டின் பல வளங்கள் பெரும் நிறுவனங்களுக்கு மாற்றப்படுகின்றன என்றும், இந்த நிகழ்வுக்கு எதிராக குரல் எழுப்ப நாம் தவறிவிட்டோம் என்றும் எடுத்துரைத்த அருள்பணி நித்யா அவர்கள், திருஅவை எப்போதும் ஏழைகளின் திருஅவையாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திய வார்த்தைகளையும் நினைவு கூர்ந்தார். இந்த வறுமை நிலை இந்திய திருஅவைக்கு ஒரு சவால் என்று கூறிய அருள்பணி நித்யா அவர்கள், இந்திய திருஅவையின் எல்லா நிறுவனங்களிலும், ஏழைகளுக்கான கொள்கை எங்கே? என்ற கேள்வியையும் எழுப்பினார். மேலும், ஒடுக்குமுறை, சாதி அமைப்பு, பிரிவினைகள், பாகுபாடுகள், உரிமைகள், சடங்குகள் தொடர்பான ஒரு சமூக ஒருங்கியக்கம் தேவை என்றும், சமத்துவமின்மை, சமூகத்தில் பெண்களின் நிலை, கல்வியறிவின்மை, வேலையின்மை, தேக்கமடைந்த கிராமப்புற ஊதியங்கள் என அனைத்தையும் பற்றி நாம் அக்கறைக் கொள்வதில்லை என்றும் கவலை தெரிவித்தார் அருள்பணி நித்யா. மக்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு ஒரு பொருளாதார-சமூக ஒருங்கியக்கம் தேவை என்றும் வலியுறுத்தினார் அருள்பணி நித்யா. [2024-10-23 00:57:04] மத உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைக்கு இந்திய அரசு எதிர்ப்புஇந்தியாவில் மத உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்துலக மத விடுதலைக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது இந்திய அரசு.மத தீவிரவாத குழுக்களால் தனிமனிதர்கள் தாக்கப்படுதல், கொல்லப்படுதல் என்பவை இந்தியாவில் தொடர்வதாகவும், மதத்தலைவர்கள் கைது செய்யப்படுவதும் வழிபாட்டுத்தலங்கள் அழிவுக்குள்ளாக்கப்படுவதும் இடம்பெறுவதாகவும் கூறும் அமெரிக்க அவையின் அறிக்கை பாரபட்சமுடையது மற்றும் வன்ம நோக்கமுடையது என குற்றம் சாட்டினார் இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் Randhir Jaiswal. 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உரைக்கும் USCIRF எனப்படும் அனைத்துலக மதவிடுதலை குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அவை, மதம் தொடர்புடைய மோதல்களை தடுப்பதற்கு தற்போதைய அரசு தவறியுள்ளதை குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தங்கள் மத நம்பிக்கைக்காக ஒவ்வொரு நாளும் இரண்டு கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 10 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிரான 447 வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வவை தெரிவிக்கிறது. மணிப்பூரில் 16 மாதங்களாக இடம்பெறும் பிரிவினைவாத மோதல்களில் 230க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதையும், ஏறக்குறைய அறுபதாயிரம் பேர் குடிபெயர்ந்துள்ளதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 835 வழக்குகள் 2020ஆம் ஆண்டிலிருந்து பதிவுச் செய்யப்பட்டுள்ளன. [2024-10-07 10:55:42] வங்கதேசம் மற்றும் இந்தியாவில் பெருவெள்ள பாதிப்பு!அண்மையில் வங்கதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்த்தால் 18-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இப்பெருவெள்ளத்தால் இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், நாட்டின் தாழ்வான பகுதிகளில் நீர் வற்றத் தொடங்கிய நிலையில் 30,000-க்கும் அதிகமானோர் இன்னும் அவசரகால முகாம்களில் உதவி வேண்டியுள்ளனர் என்றும் அச்செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசிற்கு இவ்வெள்ள பாதிப்பானது ஒரு சவாலாக இருக்கிறது என்றும், இராணுவம், விமானம் மற்றும் கடற்படை உட்பட மீட்புக் குழுக்கள் அனைத்தும் இப்பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது. மேலும் அரசு உதவிகள் தவிர, சாதாரண மக்கள் குழுக்களாக இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்து வருகின்றனர் என்றும், 17 கோடி மக்களைக் கொண்டுள்ள வங்கதேசம், கடந்த பத்தாண்டுகளில் பலமுறை வெள்ள பாதிப்பைச் சந்தித்து வருகிறது என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறுகிறது. இந்தியாவில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 31 பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க மறைமாவட்டமானது அரசுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆற்றி வருகிறது என்றும் அச்செய்திக் குறிப்புக் குறிப்பிடுகின்றது. ஆகஸ்ட் 20, செவ்வாய் அன்று ஒரே நாளில் 288.8 மிமீ மழை பதிவான நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் வகையில், பல பரந்த பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தது என்றும், ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன், 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் 450 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. (UCAN) [2024-09-10 12:09:56] இந்திய சிறுபான்மை விவகார அமைச்சருடன் கிறிஸ்தவர்கள் சந்திப்புஇந்தியாவின் 11 மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க பயன்படுத்தப்பட்டு அமலில் இருக்கும் மதமாற்றத்தடைச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என இந்திய சிறுபான்மை விவகார அமைச்சருக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் இந்திய கிறிஸ்தவ பிரதிநிதிகள்.மதமாற்றத் தடைச்சட்டத்தை அமலில் வைத்திருக்கும் 11 மாநிலங்களை இந்திய ஒன்றிய அரசு வலியுறுத்தி அதனை திரும்பப்பெற வைக்கவேண்டும் என இந்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் Kiren Rijiju அவர்களிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத்த 8 பேர் அடங்கிய இந்திய கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழு, சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான ஆயுதமாக இந்த தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக அவரிடம் எடுத்துரைத்தது. அமைச்சரிடம் வழங்கப்பட்ட விண்ணப்பத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், கொலைகள், பொய்வழக்குகள், சமூக ரீதியாக ஒதுக்கிவைக்கப்படல், கல்லறைகள் இடமறுப்பு போன்ற விவரங்களையும் குறிப்பிட்டுள்ளது இந்த கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழு. 2023ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் 727 இடம்பெற்றதாகவும், இந்த ஆண்டு ஆறு மாதங்களில் மட்டும் 361 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.ஜே.பி. கட்சி ஆட்சி செய்யும் சட்டீஸ்கார் மாநிலம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 96 வன்முறை சம்பவங்களுடனும், உத்தரபிரதேசம் 92 சம்பவங்களுடனும் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் 2.3 விழுக்கட்டினரே கிறிஸ்தவர். [2024-07-23 23:28:31] தஞ்சாவூர் மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி. சகாயராஜ் தம்புராஜ்தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயராக அருள்பணி சகாயராஜ் தம்புராஜ் அவர்களை ஜூலை 13 சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.அருள்பணி த. சகாயராஜ் அவர்கள் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் 1969ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் நாள் பிறந்தார். சென்னை பூவிருந்தவல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்ற இவர் 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், முதுகலைப்பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். தத்துவஇயலில் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் தற்போது திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். புதிய ஆயர் ஆற்றியுள்ள பணிகள் திருச்சி புனித அன்னை மரியா பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தை (1996-1997), மரியநாதபுரம் பங்குத்தந்தை (1997-2004), மறைமாவட்ட குருக்கள் செனட்டின் செயலர் (2001-2007), மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குநர் மற்றும் மறைமாவட்ட ஆணையங்களின் ஒருங்கிணைப்பாளர் (2007-2012), மணப்பாறை பங்குத்தந்தை (2012), அன்னை மரியா பேராலயத்தின் அதிபர் மற்றும் பங்குத்தந்தை, சென்னை, திருச்சிராப்பள்ளி குருத்துவக் கல்லூரிகளில் (External Professor) பேராசிரியர் (2017-2023), திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் (2023) என பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர். [2024-07-14 23:39:20] |