வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)




படுகொலை செய்யப்பட்ட அருட்த்தந்தை கருணாரட்ணம் அடிகளார் இறப்பின் 15ம் ஆண்டு நினைவு
Video link : https://www.youtube.com/watch?v=JomROI0EtmA&list=LL5xO-Bkgd8wr7yv3rDzfa9Q&index=2

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது விசேட வழிபாடுகள் நடைபெறது.
இதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்காகவும் மன்றாடப்பட்டது.அதனை தொடர்ந்து கிளிபாதர் அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.நிகழ்வில் கொழும்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். [2023-04-22 11:18:10]


எம் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைகொள்ள முடியாது – பேராயர்

எமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் உருவாக்கிகொள்ள முடியாது போன இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியத்தையும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை மோசடி அரசியல்வாதிகளால் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரிடமும் வலியுறுத்தினார்.
மக்களின் ஜனநாயக உரிமைகள், மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நசுக்கி, ஏகாதிபத்தியமாக நடந்துகொண்டு, மக்கள் இறைமையான்மையை உதைத்து தள்ளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்ற எம் நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைக்கொள்ள முடியாது.
பணப்பரிசு கிடைத்தால் மாத்திரமே சந்தோஷப்பட்டு பட்டாசுகளை கொழுத்துவார்கள். கடன் பெற்றுக்கொண்டதற்காக பட்டாசுகளை கொழுத்துவது எந்த நாட்டில் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குல்கள் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான நான்காவது ஆண்டு நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், ” கொழும்பு கொச்சிக்கடை திருத்தலம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் ‍தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்துவதற்காக வந்திருந்தவர்கள் மற்றும் அங்கு தொழில் புரிந்தவர்கள் என 272 பேர் பலியாகியதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலரும் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு பலியானவர்கள் தங்களது தாய், தந்தை, உடன் பிறப்புகள் மற்றும் உறவினர்களை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்படியும், காயமடைந்தவர்கள் விரைவாக சுகமடைய வேண்டும்படியும் நான் கடவுளிடம் மன்றாடுகின்றேன். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் அசம்பாவித சம்பவத்தின் ஊடாக இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை அடைந்துள்ளனர். எம்நாட்டு மக்கள் மத்தியில் தனித்துவமான சிறந்த சிந்தனையொன்று தோற்றம் பெற்றுள்ளது. இதன் பலனாக அரசியல் தேவைகளுக்காக நாட்டில் இன முறுகல்களையும், குரோதங்க‍ளையும் உருவாக்கி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கின்ற அரசியல்வாதிகள் எண்ணங்களும், செயல்பாடுகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குல்கள் நடத்தப்படப்போவதாக இந்திய புலனாய்வுத்துறையினரால் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு நான்கு சந்தர்ப்பங்களில் முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும், அதனை தடுக்காமல் இருப்பதற்கு எந்தவித முயற்சிகளும் எடுக்காதது ஏன்?
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் முழுமையான அறிக்கையை இதுவரையில் பொது மக்களின் பார்வைக்கு வழங்காது உள்ளனர். அவ்வாறு அதனை வெளியிடாமல் இருப்பது, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் ஆகும். குறைந்த பட்சம் அதிலுள்ள பரிந்துரைகளை கூட செயல்படுத்தாது உள்ளனர்.
கட்டுவப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டவரின் மனைவியும் சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவரான சாரா ஜெஸ்மின் எனும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரின் டி.என்.ஏ. பரிசோதனையை மூன்றாவது தடவையாக பரிசோதிக்குமாறு உத்தரவிட்டது யார்? அவர்தான் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தொடர்புபட்டவர் என தெரிய வருகிறது ” என்றார். [2023-04-22 11:16:18]


நீதிக்காகப் போராடுவதே உயிர்த்தெழுதலின் அடையாளம்

கிறிஸ்தவம் என்பது பிரச்சனைகளின் மத்தியிலும் சிரிக்கத் தெரிந்த மக்களின் நம்பிக்கை. இதுவே உயிர்த்தெழுதல். அதைத்தான் இயேசு சிலுவையில் காட்டினார் என்றும், வாழ்க்கையின் எதிர்மறையான அணுகுமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தினார் என்றும் கூறினார் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
ஏப்ரல் 9, இஞ்ஞாயிறன்று, தான் தலைமையேற்று நிகழ்த்திய உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் போராட்டமானது உயிர்த்தெழுந்த ஆண்டவர் கடந்து சென்ற புதிய வாழ்வுக்கான சாட்சியமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் சிலர் மாற்றத்தை விரும்பாத நிலையில், பாராளுமன்றத்தின் முன் நமது இளைஞர்கள் தங்களின் மனவலிமையை பறைசாற்றியுள்ளனர் என்றும், இதுதான் உண்மையான உயிர்த்தெழுதல் என்றும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாம் தீமையுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார்.
“தற்போதைய அரசும் பல்வேறு சட்டங்கள் வழியாக மக்கள் போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம், ஆனால் நாம் அவர்களுக்கு அஞ்சமாட்டோம் என்று உரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் எதுவாக இருந்தாலும், இந்த நாட்டில் நாம் விரும்பும் மாற்றத்தை அடைய இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்" என்றும் கூறினார்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள், மூன்று தங்கும் விடுதிகள் சேதமடைந்ததுடன் 250 பேர் உயிரிழந்தனர் என்பதும் 500 பேர் படுகாயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ASIAN) [2023-04-12 21:19:00]


ஐ.நா.வின் தலைமையில் அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்த நியாயம் கிட்டவேண்டும் என தலத்திருஅவை இன்னும் போராடி வருவதாக அறிவித்தார் அருள்பணி ஜூலியன் பேட்ரிக் பெரைரா.
வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எவ்வித உண்மையும் வெளிவராத நிலையில், ஐ.நா.வின் தலைமையில் அனைத்துலக விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்பதற்கு தலத்திருஅவை முயன்றுவருவதாக கூறினார் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் சட்டக்குழுவின் செயலர் அருள்பணி பேட்ரிக் பெரைரா.
இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக உண்மைகளை வெளிக்கொணர்வதும், நீதியை நிலைநாட்டுவதும் தேசத்திற்கு செய்யும் கடமையாகும் என்ற அருள்பணி, பெரைரா, இரண்டு கத்தோலிக்க கோவில்கள், ஒரு எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கோவில், மூன்று சொகுசு தங்கும் விடுதிகள் போன்றவை குண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு 261பேர் கொல்லப்பட்டது குறித்த உண்மைகள் இன்னும் மூடி மறைக்கப்பட்டு வருவதாகத் தோன்றுகின்றன என எடுத்துரைத்தார். கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும் இக்குண்டுவெடிப்புகள் குறித்த அரசின் விசாரணைகளை கேள்வியெழுப்பியதுடன், அனைத்துலக விசாரணைக்கும் அழைப்புவிடுத்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்புடையவைகளை மூடிமறைக்க முயல்வது, முக்கிய விசாரணை அதிகாரிகளை மாற்றியுள்ளது, பெருமெண்ணிகையில், அதாவது 23,000 குற்றச்சாட்டுகளை புகுத்தி அவைகளை விசாரிக்க என காலம் கடத்துவது போன்ற யுக்திகள் கையாளப்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டினார் அருள்பணி பெரைரா.
ஒரு பயங்கரவாதக் கும்பலின் 25 பேர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதும் ஒருவித கண்துடைப்பு முயற்சியே எனவும் அறிவித்தார் அருள்பணி பெரைரா. குற்றம் இழைத்தவர்களை மன்னிக்க கத்தோலிக்கர் தயாராக இருக்கின்றனர், ஆனால் யாரை மன்னிப்பது என்பதை அறிய விரும்புகிறார்கள் என மேலும் கூறிய அருள்பணி பெரைரா அவர்கள், அண்மையில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 52வது கூட்டத்தொடரில், அனைத்துலக விசாரணைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். [2023-04-10 22:13:42]


நீதித்துறையின் மேன்மையைப் பாதுகாக்க இலங்கை ஆயர்கள் கோரிக்கை

நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அந்நாட்டின் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அரசியலமைப்பை நிலைநாட்டுமாறு இலங்கை அரசை தாங்கள் கடுமையாக வலியுறுத்துவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் எந்தத் தேவையற்ற நடவடிக்கையையும் தொடர வேண்டாம் என்றும் ஏப்ரல் 03, இத்திங்களன்று, வெளியிட்ட அதன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.
உள்ளாட்சித் தேர்தலுக்கு நிதி ஒதுக்குமாறு அரசிடம் கோரிய நீதிபதிகளுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட வேண்டாம் எனவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர் ஆயர்கள். இலங்கை அரசின் இச்செயல் உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தீவிரமான மற்றும் தேவையற்ற அத்துமீறலாகும் என்றும் எச்சரித்துள்ளனர் ஆயர்கள்.
பாராளுமன்றத்தின் நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற அத்துமீறலை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என 2 கோடியே 20 இலட்சம் மக்களைக் கொண்ட இலங்கை நாட்டுக்குத் தலைமை தாங்கும் இடைக்கால அரசுத் தலைவரான இரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். (UCAN) [2023-04-06 22:00:52]


யாழ்.சைவச் சிறுவர் இல்லம் தாக்குதலைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி சேதமாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்புபோராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சைவ சிறுவர் இல்லத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நபர் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்களை உடல்ரீதியாக துன்புறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து இல்ல நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் விடுதியில் இருந்து வெளியேறாது தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்தமையால், கடந்த திங்கட்கிழமை விடுதி நிர்வாகத்தினர் நீதிமன்றை நாடியதை அடுத்து முகாமையாளர் உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என நீதிமன்று கட்டளையிட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை மாலை சில மாணவர்கள் இல்ல விடுதியின் சில பகுதிகளையும், இல்ல அலுவலகத்தினையும் அடித்து நொறுக்கி பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி இருந்தனர்.
தம்மால் பணி நீக்கம் செய்யப்பட்ட முகாமையாளரின் தூண்டுதலில் தான் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என இல்ல நிர்வாகம் குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை சிறுவர் இல்லத்தின் முன்பாக பழைய மாணவர்கள் , ஊரவர்கள் சிலர் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
[2023-03-29 23:11:45]


யாழ்.கச்சதீவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கடற்படையினர்

யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து கடற்படையினா் மணலை அகழ்ந்து கடற்படை படகுகள் மூலம் நெடுந்தீவுக்கு கொண்டுவருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்..
கச்சதீவு மண் திட்டுக்களில் அகழப்படும் மணல் நெடுந்தீவிற்கு கொண்டு வரப்படுவதை தாம் நேரடியாக கண்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனா்.
நெடுந்தீவில் கடற்படையினர் அதிகளவில் நிலைகொண்டுள்ளமையால் அவர்களின் கடற்படை முகாம் கட்டுமானப் பணிக்காகவே கச்சதீவில் இருந்து மணல் அகழ்ந்து எடுத்துவரப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். [2023-03-29 23:08:53]


இலங்கைக்கு அனைத்துலக நாணய நிதியம் (IMF) உதவி!

கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், அதன் நிதிநிலைமையை மீட்பதற்கு அதிகமான சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படுவதால், மேலும் பொருளாதார பிரச்சனைகள் வருமென மார்ச் 22, இப்புதனன்று, அதன் அரசுத் தலைவர் இரணில் விக்ரம சிங்கே எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு, சீனா, கடன் நிவாரண உத்தரவாதங்களை வழங்கியதைத் தொடர்ந்து, அனைத்துலக நாணய நிதியம் (IMF), மார்ச் 20, இத்திங்களன்று தான் வழங்கவிருக்கும் கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் இரணில்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்துலக நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவிக்கு விண்ணப்பித்ததுடன், இது தொடர்பாக அந்நிதியத்துடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க (2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) IMF ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், 2027-ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக இக்கடன் திரும்ப செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ள வேளை, இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இரணில், "பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதையை எதிர் நோக்கி நாம் முன்னேறி வரும் நிலையில், அனைத்துலக நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய பேருதவிக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
அதேவேளையில், நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டுவர இந்த நிதி பெரும் உதவியாக இருக்கும் என்று அனைத்துலக நாணய நிதியமும் கூறியுள்ளதுடன், கடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், சிக்கலில் உள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனங்கள் உட்பட, பணப்பட்டுவாடா செய்யும் அரசு நிறுவனங்களை விற்க வேண்டும் என்றும், அது விண்ணப்பித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து, பெரும்தட்டுப்பாடும் நிலவியது. அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது. இதனால் வெடித்த மக்கள் போராட்டத்தின் விளைவாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து இராஜபக்சே குடும்பத்தினர் இராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்ற இரணில் விக்ரமசிங்கே, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. (UCAN) [2023-03-23 21:44:32]


இலங்கையில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இன்று இரண்டு சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. "திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த - பலடுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது" என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் திருகோணமலை, திம்பிரிவெவ, கோமரன்கடவல பிரதேசத்தில் இன்று (19.3.2023) அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று மாலை 06.46 மணியளவில் கிரிந்த - பலடுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இரண்டு நிலநடுக்கங்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அவை இந்நாட்டின் நில அதிர்வு நிலையங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்ததாவது,
“இதுவரை காலமாக ஏற்பட்ட நிலநடுக்கங்களின் ரிக்டர் அளவுகோலைப் பார்த்தால், கடந்த 30-40 ஆண்டுகளில் 4 க்கும் குறைவான நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன. எனவே பெரிய நிலநடுக்கங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் 2, 2.5, 3, 3.5 போன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் நடக்கலாம்." நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கங்களுக்கு மேலதிகமாக, பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன மற்றும் ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து இந்த நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன என தெரிவித்துள்ளார்.
மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் மேலும், இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் இயங்கி வரும் 4 நில அதிர்வு அளவீடுகளும் இந்த நிலநடுக்கத்தை பதிவு செய்திருந்தாலும், பொதுமக்கள் எங்களிடம் எந்தவிதமான முறைப்பாடும் செய்யவில்லை. இந்த நிலநடுக்கங்கள் பற்றிய ஆய்வில் நாம் குறிப்பிடக்கூடிய காரணிதான் நேற்று நாள் பூராகவும் இலங்கை அமைந்துள்ள இந்திய-அவுஸ்திரேலிய தட்டு மற்றும் மேலே உள்ள ஆசிய தட்டுக்கு இடையே 4-5 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த நிலநடுக்கங்களின் அதிர்வே இலங்கை எல்லையில் உணரப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். [2023-03-19 21:49:47]


இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மகிழ்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட அரசாங்கம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் செயற்கையாக மேற்கொள்ளப்பட்டாலும் ரூபாயின் பெறுமதியானது டொலரின் தேவை மற்றும் விநியோகத்தினால் தீர்மானிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில், இன்று காலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் உலக வங்கியிடமிருந்து கடன் உதவித் தொகையும், ஆசிய வளர்ச்சி நிதியின் கடன் உதவித் தொகையும் பெற்ற பிறகு, பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இது நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, மற்றும் பொருட்களின் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார். [2023-03-19 22:48:36]