வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)




இலங்கை மலையகத் தமிழர்களின் உரிமைக்கானப் போராட்டம்!

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் அணுகுமுறை அவமானத்துக்குரிய ஒன்றாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி Deepa Fernando
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களின் ஒரு சிறிய குழுவால் முன்னெடுக்கப்பட்ட 15 நாள் நடைபயண ஆர்ப்பாட்ட அணிவகுப்பின்போது ASIAN செய்திக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்சகோதரியும் சமூகச் செயல்பாட்டாளருமான Fernando.
எந்தவொரு ஆட்சியாளரும் இம்மக்களின் கூக்குரலுக்குச் செவிசாய்க்காத நிலையில், கடந்த 200 ஆண்டுகளாகத் துயருற்று வரும் இத்தோட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக, மலையகத் தமிழர்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் நிலையில் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் அருள்சகோதரி Fernando.
மேலும் தேசியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தும் இந்தச் சமூகங்கள் ஏன் இலங்கையின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கவலையுடன் கூடிய கேள்வி ஒன்றையும்ய எழுப்பியுள்ளார் அருள்சகோதரி Fernando.
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற விருதுவாக்கின் கீழ் ஒன்றிணைந்த பங்கேற்பாளர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் முன்வைத்துள்ள இந்தப் 11 கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறும் அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அந்நாட்டிற்கான காரித்தாஸ் அமைப்பும் இணைந்துகொண்டது. மலையகத் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட 11 கோரிக்கைகளில், இலங்கையில் உள்ள மற்ற சமூகங்களுக்கு இணையாக அவர்களும் முழு குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று. (ASIAN ) [2023-08-20 00:24:40]


தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம்

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்துள்ளார்.
ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. [2023-07-18 00:20:04]


மன்னாரில் மணிப்பூரில் இடம் பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்.

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாகாணத்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக இடம் பெறும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகவும் உலக நாடுகள், இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது மன்னாரில் இன்றைய தினம் (17.07.2023) திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
மன்னார் நகர் சுற்றுவட்ட பகுதியில் மன்னார் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் சிறுபான்மை இன மக்களை துன்புறுத்தும் தீவிரவாத அமைப்புக்களை உடனே தடை செய், உடைக்கப்பட்ட எரிக்கப்பட்ட வீடுகள், ஆலயங்களை உடனே புனரமைப்பு செய்து கொடு, சர்வதேசமே இந்திய கிறிஸ்தவர்களை உடனே கவனி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி விசாரணை உடனே செய் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் பதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும்.
அதே நேரம் இந்திய மத்திய அரசு இந்த கலவரத்திற்கு காரணமான தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். [2023-07-18 00:08:20]


உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சியில் பாரிய வேலைத்திட்டம்

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 17 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதி உதவியுடன் கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள 17 குளங்கள் புனரமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டு 14 குளங்களின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய ஏனைய மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை நிலையங்களின் கீழுள்ள பல்லாய்க் குளம் சின்னக்குளம் வீரமோட்டைக் குளம் மின்னில் குளம் ஈநொச்சி மோட்டைக்குளம் இத்தாவில் குளம் சின்ன இத்தாவில் குளம் திக்குவில் குளம் குஞ்சுக்குளம் மன்னியா குளம் செம்மண்குன்றுக்குளம் தெக்கேரிக்குளம் ஓயாமாரிக்குளம் கோரமோட்டைக்குளம் ஆகிய குளங்கள் புனரமைப்பு பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏனைய மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 29 கிராம அலுவர் பிரிவுகளில் 4811 நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நீர் இணைப்பு குழாய்கள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 95 கிராம சேவையாளர் பிரிவுகளில் 29 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு முழுமையாகவும் பகுதியளவிலும் குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு விஸ்தரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 46ஆயிரத்து 741 குடும்பங்களுக்கான நீர் வழங்கல் செயற்திட்டத்தில் 14 வீதமான மக்களுக்கே இதுவரை குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டில் இது முழுமைப்படுத்தப்படும் என்றும் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. [2023-07-09 00:30:10]


இலண்டனில் இருந்து யாழ். வந்திருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழ். - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நேற்று (07.07.2023) பிற்பகல் கடலுக்குச் குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இலண்டனில் இருந்து உறவினரின் மரணச் சடங்குக்கு வந்திருந்த குருபரன் ஆரூஸ் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். [2023-07-09 00:24:05]


இலங்கையில் நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களுக்கு விண்ணப்பம்

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கும் விதமாக இலங்கையின் இடைக்கால அரசு நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித்.
18 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்று நாட்டின் வருங்காலத்தை முடிவுசெய்வதற்கு உதவும் வகையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கொழும்பு பேராயர் இரஞ்சித் அவர்கள், நீதி என்பது அநீதியாகவும், ஆட்சி என்பது சர்வாதிகாரமாகவும், சட்டம் என்பது கட்டுப்பாடற்ற நிலையை நோக்கியும் சென்றுகொண்டிருப்பதாகக் கவலையை வெளியிட்டார்.
நிதி நிலை சரியில்லை என்றக் காரணத்தைக் காட்டி தேர்தலைத் தள்ளிப்போட்ட அரசு தற்போது, IMF என்னும் அனைத்துலக நிதி நிறுவனத்திடமிருந்து பெரிய அளைவில் கடனுதவியைப் பெற்றும், மக்களின் 340 அவைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பது குறித்து கவலையை வெளியிட்டார் கர்தினால். விவசாயத்திற்கு, மீன்வளத்துறைக்கு, கல்விக்கு எவ்வளவு ஒதுக்கியுள்ளது அரசு என்ற கேள்வியை முன்வைத்த கர்தினால், வெளிநாட்டுப் பொருட்களை பெரிய அளவில் இறக்குமதிச் செய்வதில் கவனம் செலுத்தும் அரசு, வெளிநாட்டைச் சார்ந்தே இலங்கை வாழ வேண்டிய ஒரு நிலைக்கு நாட்டைத் தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாண்டு மார்ச் 9ஆம் தேதி இடம்பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நகராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல், ஏப்ரல் 25க்குத் தள்ளிப்போடப்பட்ட நிலையில், மீண்டுமொருமுறை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, காலவரையறையின்றி தேர்தலைத் தள்ளிப்போட்டுள்ளது தேசியத் தேர்தல் துறை. நிதிப்பற்றாக் குறையால் தவித்துவந்த இலங்கை நாட்டிற்கு உலக நிதி நிறுவனமான IMF மார்ச் மாதத்தில் 290 கோடி டாலர் கடனுதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. [2023-06-11 22:32:56]


படுகொலை செய்யப்பட்ட அருட்த்தந்தை கருணாரட்ணம் அடிகளார் இறப்பின் 15ம் ஆண்டு நினைவு
Video link : https://www.youtube.com/watch?v=JomROI0EtmA&list=LL5xO-Bkgd8wr7yv3rDzfa9Q&index=2

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது விசேட வழிபாடுகள் நடைபெறது.
இதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்காகவும் மன்றாடப்பட்டது.அதனை தொடர்ந்து கிளிபாதர் அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.நிகழ்வில் கொழும்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். [2023-04-22 11:18:10]


எம் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைகொள்ள முடியாது – பேராயர்

எமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் உருவாக்கிகொள்ள முடியாது போன இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியத்தையும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை மோசடி அரசியல்வாதிகளால் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரிடமும் வலியுறுத்தினார்.
மக்களின் ஜனநாயக உரிமைகள், மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நசுக்கி, ஏகாதிபத்தியமாக நடந்துகொண்டு, மக்கள் இறைமையான்மையை உதைத்து தள்ளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்ற எம் நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைக்கொள்ள முடியாது.
பணப்பரிசு கிடைத்தால் மாத்திரமே சந்தோஷப்பட்டு பட்டாசுகளை கொழுத்துவார்கள். கடன் பெற்றுக்கொண்டதற்காக பட்டாசுகளை கொழுத்துவது எந்த நாட்டில் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குல்கள் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான நான்காவது ஆண்டு நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், ” கொழும்பு கொச்சிக்கடை திருத்தலம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் ‍தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்துவதற்காக வந்திருந்தவர்கள் மற்றும் அங்கு தொழில் புரிந்தவர்கள் என 272 பேர் பலியாகியதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலரும் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு பலியானவர்கள் தங்களது தாய், தந்தை, உடன் பிறப்புகள் மற்றும் உறவினர்களை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்படியும், காயமடைந்தவர்கள் விரைவாக சுகமடைய வேண்டும்படியும் நான் கடவுளிடம் மன்றாடுகின்றேன். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் அசம்பாவித சம்பவத்தின் ஊடாக இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை அடைந்துள்ளனர். எம்நாட்டு மக்கள் மத்தியில் தனித்துவமான சிறந்த சிந்தனையொன்று தோற்றம் பெற்றுள்ளது. இதன் பலனாக அரசியல் தேவைகளுக்காக நாட்டில் இன முறுகல்களையும், குரோதங்க‍ளையும் உருவாக்கி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கின்ற அரசியல்வாதிகள் எண்ணங்களும், செயல்பாடுகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குல்கள் நடத்தப்படப்போவதாக இந்திய புலனாய்வுத்துறையினரால் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு நான்கு சந்தர்ப்பங்களில் முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும், அதனை தடுக்காமல் இருப்பதற்கு எந்தவித முயற்சிகளும் எடுக்காதது ஏன்?
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் முழுமையான அறிக்கையை இதுவரையில் பொது மக்களின் பார்வைக்கு வழங்காது உள்ளனர். அவ்வாறு அதனை வெளியிடாமல் இருப்பது, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் ஆகும். குறைந்த பட்சம் அதிலுள்ள பரிந்துரைகளை கூட செயல்படுத்தாது உள்ளனர்.
கட்டுவப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டவரின் மனைவியும் சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவரான சாரா ஜெஸ்மின் எனும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரின் டி.என்.ஏ. பரிசோதனையை மூன்றாவது தடவையாக பரிசோதிக்குமாறு உத்தரவிட்டது யார்? அவர்தான் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தொடர்புபட்டவர் என தெரிய வருகிறது ” என்றார். [2023-04-22 11:16:18]


நீதிக்காகப் போராடுவதே உயிர்த்தெழுதலின் அடையாளம்

கிறிஸ்தவம் என்பது பிரச்சனைகளின் மத்தியிலும் சிரிக்கத் தெரிந்த மக்களின் நம்பிக்கை. இதுவே உயிர்த்தெழுதல். அதைத்தான் இயேசு சிலுவையில் காட்டினார் என்றும், வாழ்க்கையின் எதிர்மறையான அணுகுமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தினார் என்றும் கூறினார் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
ஏப்ரல் 9, இஞ்ஞாயிறன்று, தான் தலைமையேற்று நிகழ்த்திய உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் போராட்டமானது உயிர்த்தெழுந்த ஆண்டவர் கடந்து சென்ற புதிய வாழ்வுக்கான சாட்சியமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் சிலர் மாற்றத்தை விரும்பாத நிலையில், பாராளுமன்றத்தின் முன் நமது இளைஞர்கள் தங்களின் மனவலிமையை பறைசாற்றியுள்ளனர் என்றும், இதுதான் உண்மையான உயிர்த்தெழுதல் என்றும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாம் தீமையுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார்.
“தற்போதைய அரசும் பல்வேறு சட்டங்கள் வழியாக மக்கள் போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம், ஆனால் நாம் அவர்களுக்கு அஞ்சமாட்டோம் என்று உரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் எதுவாக இருந்தாலும், இந்த நாட்டில் நாம் விரும்பும் மாற்றத்தை அடைய இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்" என்றும் கூறினார்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள், மூன்று தங்கும் விடுதிகள் சேதமடைந்ததுடன் 250 பேர் உயிரிழந்தனர் என்பதும் 500 பேர் படுகாயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ASIAN) [2023-04-12 21:19:00]


ஐ.நா.வின் தலைமையில் அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்த நியாயம் கிட்டவேண்டும் என தலத்திருஅவை இன்னும் போராடி வருவதாக அறிவித்தார் அருள்பணி ஜூலியன் பேட்ரிக் பெரைரா.
வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எவ்வித உண்மையும் வெளிவராத நிலையில், ஐ.நா.வின் தலைமையில் அனைத்துலக விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்பதற்கு தலத்திருஅவை முயன்றுவருவதாக கூறினார் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் சட்டக்குழுவின் செயலர் அருள்பணி பேட்ரிக் பெரைரா.
இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக உண்மைகளை வெளிக்கொணர்வதும், நீதியை நிலைநாட்டுவதும் தேசத்திற்கு செய்யும் கடமையாகும் என்ற அருள்பணி, பெரைரா, இரண்டு கத்தோலிக்க கோவில்கள், ஒரு எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கோவில், மூன்று சொகுசு தங்கும் விடுதிகள் போன்றவை குண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு 261பேர் கொல்லப்பட்டது குறித்த உண்மைகள் இன்னும் மூடி மறைக்கப்பட்டு வருவதாகத் தோன்றுகின்றன என எடுத்துரைத்தார். கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும் இக்குண்டுவெடிப்புகள் குறித்த அரசின் விசாரணைகளை கேள்வியெழுப்பியதுடன், அனைத்துலக விசாரணைக்கும் அழைப்புவிடுத்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்புடையவைகளை மூடிமறைக்க முயல்வது, முக்கிய விசாரணை அதிகாரிகளை மாற்றியுள்ளது, பெருமெண்ணிகையில், அதாவது 23,000 குற்றச்சாட்டுகளை புகுத்தி அவைகளை விசாரிக்க என காலம் கடத்துவது போன்ற யுக்திகள் கையாளப்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டினார் அருள்பணி பெரைரா.
ஒரு பயங்கரவாதக் கும்பலின் 25 பேர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதும் ஒருவித கண்துடைப்பு முயற்சியே எனவும் அறிவித்தார் அருள்பணி பெரைரா. குற்றம் இழைத்தவர்களை மன்னிக்க கத்தோலிக்கர் தயாராக இருக்கின்றனர், ஆனால் யாரை மன்னிப்பது என்பதை அறிய விரும்புகிறார்கள் என மேலும் கூறிய அருள்பணி பெரைரா அவர்கள், அண்மையில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 52வது கூட்டத்தொடரில், அனைத்துலக விசாரணைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். [2023-04-10 22:13:42]