வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)




இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் இலங்கையில் ஏற்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இராஜபக்சேக்கள் குற்றவாளிகள் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
இரண்டு முன்னாள் அரசுத்தலைவர்கள் உட்பட வலிமை வாய்ந்த இராஜபக்சே சகோதரர்கள் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதன் மூலம் அந்நாட்டின் மோசமான நிதி நெருக்கடியைத் தூண்டியதற்காக, குற்றவாளிகள் என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 14 இச்செவ்வாய்யன்று, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முன்னாள் அரசுத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பொருளாதாரத்தை தவறாகக் கையாளுதல் அல்லது செயலற்ற தன்மை, மற்றும், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்" என்று TISL-ன் வழக்கறிஞர் Nadishani Perera அவர்கள், AFP செய்தியிடம் கூறியதாகவும் யூகான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மனுதாரர்கள் பொதுமக்களின் நலன் கருதி நீதிமன்றத்திற்கு வந்து தங்களுக்கு இழப்பீடு கோரவில்லை என்பதால், மனுதாரர்களுக்கு ஏற்படும் செலவுகளைத் தவிர வேறு இழப்பீடு வழங்க உத்தரவிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் TISL அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
Transparency International Sri Lanka (TISL) என்ற ஊழல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஏனைய நான்கு செயற்பாட்டாளர்களினால் முன்னாள் அரசுத் தலைவர்களான கோத்தபய இராஜபக்சே மற்றும் மகிந்த இராஜபக்சே உள்ளிட்ட உயர்மட்ட முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் அவர்களது இளைய சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் இராஜபக்சே, இரண்டு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் ஏனைய உயர் கருவூல அதிகாரிகளும் அடங்குவர் (UCAN) [2023-11-15 22:15:24]


ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டங்கள்

இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்றும் கூறியுள்ளார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
அண்மையில் நடைபெற்ற Ad Limina Apostolorum என்னும் திருத்தந்தையுடனான ஆயர்கள் சந்திப்பை முன்னிட்டு உரோமிற்கு வருகை தந்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் இலங்கயின் தற்போதைய நிலை குறித்து பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். அண்மைய ஆண்டுகளில் இலங்கையானது அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் சூழலில் நாட்டின் நிலைமையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மக்களிடையே அமைதியற்ற சூழலையும் அதிருப்தியையும் உருவாக்கும் நோக்கத்தில் கடுமையான சமூகக் கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித். நாட்டில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் சாதாரணமாக நடைமுறைப்படுத்தவும் கடுமையான இடையூறுகளை அனுபவித்து வருவதாக எடுத்துரைத்துள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், பாதிக்கப்படும் கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் வாழும் மக்களையும் நினைவுகூர்வதாக எடுத்துரைத்துள்ளார்.
சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் நாளொன்றிற்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் சூழலில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் இரஞ்சித். இலங்கையில் வாழும் பௌத்தர்கள், இந்துக்கள் என அனைத்து மதத்தலைவர்களுடனான உரையாடலில் ஒன்றிணைந்து நல்லுறவைப் பேணிக்காப்பதாக எடுத்துரைத்துள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இப்பாதை கடினமானதாகத் தோன்றினாலும் தொடர்ந்து தங்களது பங்கைச் செய்வோம், எப்போதும் மக்கள் பக்கம் இருப்போம் என்றும், நம்பிக்கையுடன் பொதுநலனுக்காக உழைத்து, நற்செய்தியின் உண்மைக்கு சாட்சியாக இருப்போம் என்றும் கூறியுள்ளார். இலங்கை அரசிற்கு எதிரான அணிவகுப்பு, சமூகப் போராட்டம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தை நிலைநிறுத்தும் அரசின் செயல்களை சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் தேர்தல்கள் மிக முக்கியமானதாகவும், மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் அமையும் என்றும் கூறியுள்ளார். ( fides) [2023-11-12 23:27:29]


வெடிகுண்டு தாக்குதல்குறித்த உண்மைக்கு இலங்கை திருஅவை விண்ணப்பம்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, உயிர்ப்பு ஞாயிறன்று கொழும்புவில் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகள் அக்டோபர் 18ஆம் தேதி இப்புதனன்று மீண்டும் துவங்கவுள்ள நிலையில், அனைத்துலக அளவிலான சுதந்திர விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என மீண்டும் தன் விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது இலங்கை தலத்திருஅவை.
2019ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல்களில் இராணுவ உளவுப் பிரிவின் பங்கு ஆராயப்பட வேண்டும், நீதியான, வெளிப்படையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளது தலத்திருஅவை. குண்டுவெடிப்புக்கள் குறித்த உண்மை கண்டறியப்பட்டு, உயிரிழந்த மற்றும் காயமுற்ற அப்பாவி மக்களுக்கு நீதி கிட்டவேண்டும் என அரசு உண்மையிலேயே விரும்பினால், இலங்கை கத்தோலிக்கத் திருஅவையின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் என அரசுக்கு அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.
இலங்கை அரசுத்தலைவருக்கு கர்தினால் மால்கம் இரஞ்சித் உட்பட கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பிரிந்த சபைகளின் 30 தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த கடிதம், குண்டுவெடிப்பாளர்களுடன் இராணுவ உளவுப்பிரிவு மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் தொடர்பு ஆராயப்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது. 2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 279பேர் கொல்லப்பட்டனர், 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக 24 பேர் தற்போது விசாரணைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். [2023-10-18 22:21:39]


இலங்கையில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு!

பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ள இலங்கை அரசின் ‘ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தின் சட்டப்பூர்வ தன்மையை’ ஊடக அமைப்புகள், அரசியல் கட்சிகள் தலத் திருஅவை மற்றும் உரிமைகள் குழுக்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், ஆன்லைன் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க அல்லது நீக்க தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பரந்த அளவிலான அதிகாரங்கள் இதன் வழியாக அந்நாட்டின் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
மேலும் இந்த விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் இம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார் கர்தினால் இரஞ்சித். அக்டோபர் 3-ஆம் தேதி முதல் வாசிப்புக்காக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளை, ஆபாசப் படங்கள் மற்றும் ஆன்லைன் மோசடி போன்ற எதிர்மறையான தாக்கங்களிலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாப்பதே இம்மசோதாவின் நோக்கம் என்று அந்நாட்டின் அரசு கூறியுள்ளது.
இம்மசோதாவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை அக்டோபர் 10-ஆம் தேதி அந்நாட்டின் உச்சநீதி மன்றம் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், இது அக்டோபர் 20-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்நாட்டின் அதிபர் விக்கிரமசிங்கே அவர்கள் கருத்து வேறுபாடுகளை ஒடுக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். (UCAN) [2023-10-18 22:19:57]


இலங்கை மலையகத் தமிழர்களின் உரிமைக்கானப் போராட்டம்!

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் அணுகுமுறை அவமானத்துக்குரிய ஒன்றாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி Deepa Fernando
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களின் ஒரு சிறிய குழுவால் முன்னெடுக்கப்பட்ட 15 நாள் நடைபயண ஆர்ப்பாட்ட அணிவகுப்பின்போது ASIAN செய்திக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்சகோதரியும் சமூகச் செயல்பாட்டாளருமான Fernando.
எந்தவொரு ஆட்சியாளரும் இம்மக்களின் கூக்குரலுக்குச் செவிசாய்க்காத நிலையில், கடந்த 200 ஆண்டுகளாகத் துயருற்று வரும் இத்தோட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக, மலையகத் தமிழர்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் நிலையில் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் அருள்சகோதரி Fernando.
மேலும் தேசியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தும் இந்தச் சமூகங்கள் ஏன் இலங்கையின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கவலையுடன் கூடிய கேள்வி ஒன்றையும்ய எழுப்பியுள்ளார் அருள்சகோதரி Fernando.
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற விருதுவாக்கின் கீழ் ஒன்றிணைந்த பங்கேற்பாளர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் முன்வைத்துள்ள இந்தப் 11 கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறும் அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அந்நாட்டிற்கான காரித்தாஸ் அமைப்பும் இணைந்துகொண்டது. மலையகத் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட 11 கோரிக்கைகளில், இலங்கையில் உள்ள மற்ற சமூகங்களுக்கு இணையாக அவர்களும் முழு குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று. (ASIAN ) [2023-08-20 00:24:40]


தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம்

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்துள்ளார்.
ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. [2023-07-18 00:20:04]


மன்னாரில் மணிப்பூரில் இடம் பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்.

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாகாணத்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக இடம் பெறும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகவும் உலக நாடுகள், இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது மன்னாரில் இன்றைய தினம் (17.07.2023) திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
மன்னார் நகர் சுற்றுவட்ட பகுதியில் மன்னார் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் சிறுபான்மை இன மக்களை துன்புறுத்தும் தீவிரவாத அமைப்புக்களை உடனே தடை செய், உடைக்கப்பட்ட எரிக்கப்பட்ட வீடுகள், ஆலயங்களை உடனே புனரமைப்பு செய்து கொடு, சர்வதேசமே இந்திய கிறிஸ்தவர்களை உடனே கவனி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி விசாரணை உடனே செய் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் பதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும்.
அதே நேரம் இந்திய மத்திய அரசு இந்த கலவரத்திற்கு காரணமான தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். [2023-07-18 00:08:20]


உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சியில் பாரிய வேலைத்திட்டம்

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 17 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதி உதவியுடன் கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள 17 குளங்கள் புனரமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டு 14 குளங்களின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய ஏனைய மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை நிலையங்களின் கீழுள்ள பல்லாய்க் குளம் சின்னக்குளம் வீரமோட்டைக் குளம் மின்னில் குளம் ஈநொச்சி மோட்டைக்குளம் இத்தாவில் குளம் சின்ன இத்தாவில் குளம் திக்குவில் குளம் குஞ்சுக்குளம் மன்னியா குளம் செம்மண்குன்றுக்குளம் தெக்கேரிக்குளம் ஓயாமாரிக்குளம் கோரமோட்டைக்குளம் ஆகிய குளங்கள் புனரமைப்பு பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏனைய மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 29 கிராம அலுவர் பிரிவுகளில் 4811 நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நீர் இணைப்பு குழாய்கள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 95 கிராம சேவையாளர் பிரிவுகளில் 29 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு முழுமையாகவும் பகுதியளவிலும் குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு விஸ்தரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 46ஆயிரத்து 741 குடும்பங்களுக்கான நீர் வழங்கல் செயற்திட்டத்தில் 14 வீதமான மக்களுக்கே இதுவரை குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டில் இது முழுமைப்படுத்தப்படும் என்றும் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. [2023-07-09 00:30:10]


இலண்டனில் இருந்து யாழ். வந்திருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழ். - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நேற்று (07.07.2023) பிற்பகல் கடலுக்குச் குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இலண்டனில் இருந்து உறவினரின் மரணச் சடங்குக்கு வந்திருந்த குருபரன் ஆரூஸ் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். [2023-07-09 00:24:05]


இலங்கையில் நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களுக்கு விண்ணப்பம்

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கும் விதமாக இலங்கையின் இடைக்கால அரசு நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித்.
18 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்று நாட்டின் வருங்காலத்தை முடிவுசெய்வதற்கு உதவும் வகையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கொழும்பு பேராயர் இரஞ்சித் அவர்கள், நீதி என்பது அநீதியாகவும், ஆட்சி என்பது சர்வாதிகாரமாகவும், சட்டம் என்பது கட்டுப்பாடற்ற நிலையை நோக்கியும் சென்றுகொண்டிருப்பதாகக் கவலையை வெளியிட்டார்.
நிதி நிலை சரியில்லை என்றக் காரணத்தைக் காட்டி தேர்தலைத் தள்ளிப்போட்ட அரசு தற்போது, IMF என்னும் அனைத்துலக நிதி நிறுவனத்திடமிருந்து பெரிய அளைவில் கடனுதவியைப் பெற்றும், மக்களின் 340 அவைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பது குறித்து கவலையை வெளியிட்டார் கர்தினால். விவசாயத்திற்கு, மீன்வளத்துறைக்கு, கல்விக்கு எவ்வளவு ஒதுக்கியுள்ளது அரசு என்ற கேள்வியை முன்வைத்த கர்தினால், வெளிநாட்டுப் பொருட்களை பெரிய அளவில் இறக்குமதிச் செய்வதில் கவனம் செலுத்தும் அரசு, வெளிநாட்டைச் சார்ந்தே இலங்கை வாழ வேண்டிய ஒரு நிலைக்கு நாட்டைத் தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாண்டு மார்ச் 9ஆம் தேதி இடம்பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நகராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல், ஏப்ரல் 25க்குத் தள்ளிப்போடப்பட்ட நிலையில், மீண்டுமொருமுறை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, காலவரையறையின்றி தேர்தலைத் தள்ளிப்போட்டுள்ளது தேசியத் தேர்தல் துறை. நிதிப்பற்றாக் குறையால் தவித்துவந்த இலங்கை நாட்டிற்கு உலக நிதி நிறுவனமான IMF மார்ச் மாதத்தில் 290 கோடி டாலர் கடனுதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. [2023-06-11 22:32:56]