வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



அமைதியின் திருத்தந்தையாகத் திகழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்காக தனது விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் இடையறாது எடுத்துரைத்தவர். போர் மற்றும் வன்முறையால் துன்புறுபவர்கள், ஏழைகள், வலுகுறைந்தவர்கள், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்தவர். எடுத்துக்காட்டாக, தான் இறுதியாக வழங்கிய, ‘ஊருக்கும் உலகிற்கும்’ எனப் பொருள்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியிலும் கூட, உலக அமைதிக்காக மக்கள் அனைவரும் செபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர். போரில் ஈடுபடும் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் போரினை விடுத்து, உரையாடல் வழிகளில் அமைதிக்கான தீர்வுகளை நாடவேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்திவர்.
மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், இயல்பாக சுவாசிக்க முடியாமலும், பேச முடியாமலும் இருந்த நிலையிலும் கூட உலக அமைதிக்காக செபிக்க மறக்காதவர். தன்னால் திருப்பயணிகளுக்குக் கருத்துக்களை எடுத்துரைக்க இயலாத நிலையிலும், கர்தினால்கள் மற்றும் ஆயர்களை தனது கருத்துக்களை எடுத்துரைக்கும்படி கூறியவர். பன்னிரண்டு ஆண்டு காலம் திருத்தந்தையாகப் பணியாற்றி திருஅவையை சீரும் சிறப்புமாக வழிநடத்தி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகக் கத்தோலிக்க இயக்கங்களுக்கு அமைதிக்கான செயல்பாடுகளை தனது வார்த்தைகள், செயல்பாடுகள், முடிவுகள் போன்றவற்றின் வழியாக எடுத்துரைத்தவர். நல்லிணக்கத்தின் ஆற்றல், உரையாடலின் முக்கியத்துவம் வன்முறையை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான அவசர நிலை ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியவர். போர், வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர எப்போதும் நேரம் எடுத்துக் கொண்ட திருத்தந்தை, ஊடகங்களின் கவனத்தை அதிகம் பெறும் பகுதிகளில் அமைதிக்காக செபிக்கும் அதேவேளையில், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட, ஆனால் உலகத்தால் அதிகம் மறக்கப்பட்ட சில பகுதிகளுக்காக செபிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர்.
உலக அமைதிக்கான வேண்டுகோள்
உலக அமைதியை அதிகம் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்சூடான் நாட்டின் தலைவர்களின் கால்களை முத்தமிட்டு அமைதியின் பாதைகளைத் தொடர வலியுறுத்தியது. பயங்கரமான உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட தென்சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் மற்றும் அவரது போட்டியாளரான ரீக் மச்சாரை அவர்களை வத்திக்கானில் வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணிவுடன் அவர்களின் கால்களை முத்தமிட்டு, தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமைதிப் பாதைகளைத் தொடருமாறு வலியுறுத்தினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், தென்சூடானுக்குப் காண்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து தலத்திருஅவையின் தலைவருடன் இணைந்து திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, போரின் கொடூரமான விளைவுகளை அனுபவித்த மற்றும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்பும் ஆறுதலும் தரும் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், ஜூபாவில் உள்ள அரசு மாளிகையில் அந்நாட்டின் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் படையினரிடம் உரையாற்றிய போது, "நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதன் அடிப்படையில் தான் எதிர்கால தலைமுறையினர் உங்கள் பெயர்களை நினைவுகூர்வார்களா அல்லது உங்களின் நினைவை மறந்துவிடுவார்களா என்பது தெரியவரும்” என்று துணிவுடன் மொழிந்தவர்.
அமைதிக்கான கூக்குரல்
அமைதிக்கான அவரது கூக்குரல், கடந்த காலப் போர்களின் மரபு, நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையில் செய்யப்பட்ட வன்முறை நிகழ்வுகளால் ஏற்பட்ட வடுக்கள் மற்றும் சில தவறுகள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக் கொள்வதையும் அதிகமாக வெளிப்படுத்தியது. 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிராக வலிமை வாய்ந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அணுகுண்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அழிவை ஏற்படுத்திய அதே இடத்தில், நாகசாகியில் உள்ள பூங்காவில் நின்று, ஆயுதங்களாலும் அவற்றை வைத்திருப்பவர்களாலும் ஏற்பட்ட பேரழிவைக் கண்டித்தார். "போர் நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் ஒழுக்கக்கேடானது" என்று துணிவுடன் கூறினார். துன்புறுவோரிடம் நெருக்கத்தையும், உலகளாவிய வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலியுறுத்தல்களையும் எப்போதும் தனது உரைகளில் எடுத்துரைத்தவர். மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள மக்களுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி தனது உடனிருப்பை வெளிப்படுத்தியவர். அவர், போரில்லாத உலகிற்காக மட்டுமன்று, நீதி, உரையாடல், உடன் பிறந்த உணர்வு கொண்டிருத்தல் போன்றவற்றிற்காகவும் குரல் எழுப்பியவர். எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற தலைப்பில், இந்த 2025 யூபிலி ஆண்டினை அர்ப்பணித்த திருத்தந்தை அவர்களின் செய்திகள், கருத்துக்கள், உடனிருப்பு, அமைதிக்கான தேவை ஆகியவை திருஅவையிலும், மனிதகுலம் முழுவதிலும் இன்று மட்டுமல்லாது என்றென்றும் தொடர்ந்து எதிரொலிக்கும் என்பது திண்ணம். [2025-04-21 23:05:26]


கடவுளின் அரவணைப்பில் திருத்தந்தையின் ஆன்மாவை அர்ப்பணிப்போம்

“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திருஅவைக்கும் அளவில்லாத துயரத்தையும், பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது” என்று திருத்தந்தையின் மறைவு குறித்து இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயு சூப்பி அவர்கள் கூறினார். “இறைத்தந்தையின் கரங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை அர்ப்பணித்து செபிப்போம்” என்று கூறிய கர்தினால் சூப்பி அவர்கள், “’இறை இரக்கத்தில் எல்லாம் வெளிப்படுகின்றது, இரக்கமுள்ள தந்தையின் அன்பினால் எல்லாம் தீர்க்கப்படுகின்றது’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தியது போல, கடவுளின் அரவணைப்பில் அவர் ஆன்மாவை ஒப்படைப்போம்” என்றும் தெரிவித்தார்.
மேலும் “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததன் அடையாளமாக இத்தாலியில் உள்ள அனைத்துத் தலத்திருஅவைகளின் கோவில் மணிகளும் ஒலிக்கப்பட வேண்டும்” என்றும், “நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு செபத்தின் வழியாக ஒருவர் மற்றவருடனும், உலகளாவியத் திருஅவையுடனும் நமது ஒன்றிப்பை வெளிப்படுத்துவோம்” என்றும் உரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு ஏராளமான அரசுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். இத்தாலிய காரித்தாஸ் வலையமைப்பின் சார்பாக, அருள்தந்தை Marco Pagniello அவர்கள், "ஏழைகளை மறந்துவிடக் கூடாது" என்று அண்மைய ஆண்டுகளில் அடிக்கடி வலியுறுத்தி வந்த திருத்தந்தை அவர்கள் தனது செயல்கள் மற்றும் வார்த்தைகள் வழியாக உலகின் கடை நிலையில் இருக்கும் மக்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்” என்றும், “அமைதியை வலியுறுத்தும் திருத்தந்தையாகவும், சமூக அநீதிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உலகளாவிய அலட்சியத்தை கடுமையாகக் கண்டித்தும் குரல் எழுப்பியவர் திருத்தந்தை” என்றும் கூறினார்.
மேலும் “நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதரர் சகோதரிகளாக, ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அழைப்பு விடுத்த திருத்தந்தை அவர்கள் விதைத்த விதையானது, கிறிஸ்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களின் இதயங்களிலும் தொடர்ந்து முளைக்கும்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார் அருள்தந்தை மார்கோ. “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு, இத்தாலிய மக்களிடையேயும் உலகம் முழுவதும் வாழும் மக்களிடையேயும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என்றும், “மக்களிடையே நிலவேண்டிய ஒன்றிப்பு, வலுவற்றவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டியதன் கடமை, பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் மனித குலத்தில் அமைதி ஆகியவற்றை திருத்தந்தையின் கருத்துக்கள் நினைவுபடுத்துகின்றன” என்றும் இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள் திருத்தந்தையின் மறைவு குறித்துத் தெரிவித்துள்ளார். [2025-04-21 23:01:20]


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்தார்

ஏப்ரல் 21, திங்கள்கிழமை காலை உரோம் உள்ளூர் நேரம் 7.35 மணியளவில், அதாவது, இந்திய இலங்கை நேரம் காலை 11.05 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானிலுள்ள தனது சாந்தா மார்த்தா இல்லத்தில் இறைபதமடைந்தார்.
திருத்தந்தையின் மறைவு குறித்த செய்தியை கர்தினால் Kevin Joseph Farrell அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது வாழ்க்கை முழுவதையும் இறைப்பணிக்காகவும் திருஅவையின் பணிக்காகவும் அர்ப்பணித்தவர். நற்செய்தியின் விழுமியங்களைத் துணிவுடனும் நம்பிக்கையுடனும், உலகளாவிய அன்புடனும் எடுத்துரைத்தவர். குறிப்பாக, ஏழைகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களுடன் தனது உடனிருப்பை வெளிப்படுத்தியவர். கடவுளாகிய இயேசுவின் உண்மைச் சீடராக சிறந்த முன்மாதிரிகையாகத் திகழ்ந்தவர் என்றும், மூவொரு கடவுளின் எல்லையற்ற இறை இரக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை அர்ப்பணித்து செபிப்போம் என்றும் எடுத்துரைத்து, திருத்தந்தையின் மறைவுச் செய்தியை அறிவித்தார் கர்தினால் Kevin Joseph Farrell.
இறைபதமடைந்த திருத்தந்தை அவர்களுக்கு தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் யேர்மன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. [2025-04-21 22:53:57]


2025-ஆம் ஆண்டு மியான்மாரில் அமைதி மலரும் ஆண்டாக இருக்கும்!

உலகலாவியத் திருஅவை எதிர்நோக்கின் யூபிலியைத் தொடங்கியுள்ள இவ்வேளை, மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்லஸ் மவுங் போ அவர்கள், ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் அழிக்கப்பட்டுள்ள நாட்டில், பிறந்துள்ள புத்தாண்டு அமைதியைக் கொண்டுவரும் என்று தனது இதயப்பூர்வமான நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
யூக்கான் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செய்தி ஒன்றில், கடந்த ஆண்டுகளில் நல்லிணக்கத்திற்காக பலமுறை வேண்டுகோள் விடுத்த கர்தினால் போ அவர்கள், மியான்மாரின் மாண்பையும் நம்பிக்கையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு பார்வையையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும் வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளைஞர்கள் ‘அமைதியின் சிற்பிகள்’ என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், நாடு அவர்களுக்கு வாய்ப்புகளையும் கல்வியையும் வழங்குவதற்கான அவசரத் தேவையையும் வலியுறுத்தியுள்ள அதேவேளை, அவ்வாறு செய்வதன் வழியாக, அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நமது நாட்டின் ஆன்மாவையும் மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்றும் கூறியுள்ளார். அமைதிக்கான ஒரு வழியாக நல்லிணக்கத்தை பரிந்துரை செய்துள்ள அவர், நல்லிணக்கம் என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல; அது ஒரு தேர்வு-வலிக்கு அப்பால் அன்புகூர்வது, அழிவுக்கு அப்பால் கட்டமைப்பது என்றும் விளக்கமளித்துள்ளார்.
நீதி மற்றும் மனித மாண்பை நிலைநாட்டுவதும் அமைதிக்கு வழிவகுக்கும், என்றும், உண்மையான அமைதி என்பது போரற்றச் சூழல், இது அனைவருக்குமான நீதி, பாதுகாப்பு மற்றும் மாண்பின் இருப்பை உள்ளடக்கியது என்றும் எடுத்துரைத்துள்ள கர்தினால், இந்த அமைதி நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது, இரக்கத்தால் வளர்க்கப்படுகிறது மற்றும் நம்பிக்கையால் நிலைத்திருக்கிறது என்றும் விளக்கியுள்ளார். [2025-01-11 00:11:37]


புத்தாண்டின் முதல் வாரத்தில் காசாவில் 74 குழந்தைகள் மரணம்!

அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் காசா பகுதியில் நடந்து வரும் வன்முறையால் குறைந்தது 74 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம். ஜனவரி 8, இப்புதனன்று, இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், காசா நகரம், கான் யூனிஸ். தெற்கில் அல் மவாசி ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரவு நேரத் தாக்குதல்கள் உட்பட பல சம்பவங்களில் இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், மிக அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில், அதாவது, இச்செவ்வாயன்று, அல் மவாசியில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் கவலை தெரிவித்துள்ளது.
கடுமையான குளிர்காலம் மற்றும் போதிய தங்குமிடங்கள் இல்லாததால், டிசம்பர் 26 முதல், எட்டு பிறந்த குழந்தைகள் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துள்ளன என்றும் குறிப்பிடும் அதன் அறிக்கை, 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இடம்பெயர்ந்து, போதிய மனிதாபிமான உதவியின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர் என்றும், அங்குக் குடிமுறைக்குரிய ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும், அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
இத்துயரமான தருணத்தில், உடனடி போர்நிறுத்தம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுதல் மற்றும் துன்பத்தை போக்க மனிதாபிமான அணுகலை மேம்படுத்துதல் குறித்து வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ளும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உயிர்களைக் காப்பாற்ற உதவி விநியோகம் முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. [2025-01-11 00:06:27]


தடைகளைத் தாண்டி இயேசுவைக் காண முயலவேண்டும்

இறைவனைச் சந்திப்பதற்கு உதவும் ஒளியாக நாம் ஒருவருக்கொருவர் இருக்கவேண்டும் என்றும், இறைமகனைச் சந்திப்பதற்காக பல்வேறு தடைகளைத்தாண்டி வந்த ஞானிகள் போல நாமும் இயேசுவைக் காண முயலவேண்டும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 6 திங்கள்கிழமை திருக்காட்சிப்பெருவிழாவை முன்னிட்டு ஹேஸ்டாக் திருக்காட்சிப்பெருவிழா மற்றும் இன்றைய நற்செய்தி என்னும் தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாக தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தங்களது கண்களை வானத்தை நோக்கித்திருப்பி விண்மீன்களைக் கண்ட ஞானிகளைப் பற்றி சிந்திக்கும் வேளையில், மற்றவர்கள் இறைவனைச் சந்திப்பதற்கு ஒளியாக நாம் வழிகாட்ட வேண்டும் அதற்கான அருளை இறைவனிடம் நாடுவோம் என்று தனது முதல் குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை . விண்மீனால் ஈர்க்கப்பட்ட ஞானிகள் அதனால் வழிநடத்தப்பட்ட அரசராம் மெசியாவைப் பார்க்க அனைத்து சிரமங்கள் மற்றும் இடர்ப்பாடுகளைக் கடந்து வந்தார்கள் என்றும், வரலாற்றில் மிகத்தனித்துவமானது ஒன்று நடைபெற இருக்கின்றது அதனை நாம் தவறவிடக்கூடாது என்பதை நன்கு அறிந்து செயல்பட்டவர்கள் ஞானிகள் என்றும் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். [2025-01-07 07:37:25]


வாரம் ஓர் அலசல் – ஜனவரி 06. போரால் பாதிக்கப்படும் குழந்தைகள்

போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி நினைவுகூர்கிறோம். 6ஆம் தேதியோடு அந்த நாள் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதன் பின்னர் ஒன்றுமேயில்லை. போர்களும் உள்நாட்டு மோதல்களும் அவைகளின் பாதிப்புகளும் இளஞ்சிறார்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளின் ஆபத்து ஒரு கொடிய அச்சுறுத்தலாக உள்ளது என்ற உண்மை, உலகம் முழுவதும் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களின் வழி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான், அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான்.
உக்ரைனில் போர் துவங்கிய 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் பாதுகாப்பின்மை காரணமாக கல்வி நிலையங்களில் தங்கள் பெயர்களை பதிவுச் செய்த மாணவர்களுள் பாதி பேர் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை மருத்துவக் கட்டிடங்கள், கல்வி நிலையங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன, அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன என்பதற்கு துல்லியமான விவரங்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளான கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளான போரும் என 4 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி உக்ரைன் நாட்டில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவிக்கிறது.
ஏமனை எடுத்துக் கொள்வோம். இது மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடு. ஏமனில் உள்ள எண்ணெய் வளத்தை அபகரிக்க அங்கே ஒரு உள்நாட்டு போரை உருவாக்கின இரு பணக்கார நாடுகள். அதற்கு ஆதரவாக சில நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்தன. ஏமன் போரில் ஏறக்குறைய 130,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போரின் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தாலும் உணவு தட்டுப்பாடாலும் 84,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, 1.6 கோடி மக்கள் ஏமனில் பஞ்சத்தின் விளிம்பில் சிக்கி தவித்து வருகின்றனர். 5 வயதிற்கு கீழ் உள்ள 23 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தங்கள் சுயநல இலாபத்திற்காக பணக்கார நாடுகள் இயற்கை வளங்கள் மிகுந்த ஏழை நாடுகளில் போர் சூழலை உருவாக்கி, போரிடும் இரு குழுக்களுக்கும் ஆயுதங்களை வழங்கி மக்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றன. மேலும், ஒரு செயற்கையான பஞ்சத்தை உருவாக்கி பல இலட்சக்கனக்கான மக்களை அழித்தொழிக்கின்றன. இங்கும் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான்.
காஸா போரில் அழிக்கப்பட்ட நீர் அமைப்பு; தண்ணீர் இன்றி தவிக்கும் குழந்தைகள் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது, ஆனால் அது மாசுபட்டதாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். "காஸா பகுதியில் தற்போது ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு மிகப்பெரிய காரணம், இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாசுப்பட்ட தண்ணீர் தான்," என்று மருத்துவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக கூற்றுபடி, காஸாவின் 67% நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. காஸாவின் நீர் உள்கட்டமைப்பு போரில் பெரிதும் சேதமடைந்துள்ளதால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது குழந்தைகள்தான். மேலும், உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும்போது அனுமதிக்கப்பட்ட நிவாரணத்தின் அளவு மிகவும் சிறியது என்று நலப்பணியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மாசுபட்ட நீர் ஆகியவற்றால் இந்தச் சூழல் கடுமையான விளைவை ஏற்படுத்தி வருகிறது. "பாட்டில் தண்ணீர் கிடைப்பதில்லை. குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள் - கிடைக்கும் தண்ணீரும் அசுத்தமாக எங்களை வந்தடைகிறது," என்றுதான் அனைவரும் கூறி வருகின்றனர்.
உணவு மற்றும் தண்ணீருக்கானத் தேவை காஸாவில் அதிகரித்துள்ளதால், அவை கொள்ளையடிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமக்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்களால் நிவாரண சரக்கு வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர், பஞ்சத்தை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளதையும் நாம் இங்கு மறுக்க முடியாது. அண்மையில் சிரியாவில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களை கொஞ்சம் உற்று நோக்குவோம். சிரியாவிலிருந்து வரும் தகவல்களின்படி, அந்நாட்டில் 1கோடியே 20 இலட்சம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், மற்றும், 1 கோடியே 60 இலட்சம் பேர் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்து உள்ளனர்.
சிரியாவிலிருந்து மக்கள் அகதிகளாக, இலெபனான், ஜோர்டன், துருக்கி, ஈராக், எகிப்து மற்றும் வட ஆப்ரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியாவில் ஏறக்குறைய 40 விழுக்காடு மருத்துவமனைகள் மற்றும் நல வசதிகள் பகுதியளவு அல்லது முழுமையாக செயல்படவில்லை என்றும், ஏறத்தாழ 1 கோடியே 36 இலட்சம் மக்களுக்கு தண்ணீர், உடல்நலம் மற்றும் நலப்பணிகளும், 37 இலட்சம் குழந்தைகள் உட்பட 57 இலட்சம் மக்களுக்கு ஊட்டச்சத்து உதவியும் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மோதல்களுக்கு மத்தியில் வளர்ந்துள்ளனர் என்றும், 75 இலட்சக் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றும், 64 இலட்சக் குழந்தைகளுக்கு அவசர பாதுகாப்பு சேவைகள் தேவைப்படுகின்றன என்றும் கூறுகிறது இவ்வறிக்கை. சிரியாவில் போர் முடிந்தாலும் அங்கே போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் மக்கள் மீது மற்றொரு போரை தொடுத்துள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளான போர் மற்றும் கலக வன்முறைகளால் உலகின் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ள வேண்டிய நிலையானது உண்மையில் வெட்கக்கேடான விடயம். அதிலும், தங்களுக்கென குரல் எழுப்பமுடியாத குழந்தைகளை பாதிக்கவிடுவது மனித குலத்திற்கு பெரும் இழுக்கு. இன்றய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பது நாடறிந்த கூற்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் என்பதே நம் விண்ணப்பம். ஆனால் மனிதனின் சுயநலக் கூற்றுக்குள் இந்த வேண்டுகோள் கருகிவிடுகிறது என்பதைத்தான் கண்டுவருகிறோம்.
குழந்தை பருவத்தில் குழந்தைகள் தமது சூழலில் இருந்து நிறைய கற்று கொள்வார்கள், நமக்கு நிறைய கற்றுத் தருவார்கள். ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறான் என்பது போல அந்த மழலைகளின் உலகம் மனிதர்களின் மனக் காயங்களுக்கு மருந்திடும். எனவே, நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதன் வழியாக நாட்டை சிறப்பானதாக கட்டியெழுப்ப முடியும். ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது. உலகத்தில் மிகச்சிறந்த நாடு எதுவென்றால், சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை எந்த ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அதுதான். ‘குழந்தைகளைப் பாதுகாப்பவர்கள், இறைவன் பக்கம் இருப்பதுடன், குழந்தைகளை ஒடுக்கி வைப்பவர்கள்மீது வெற்றி கொள்பவர்களாகவும் உள்ளனர். அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் அனைத்துக் குழந்தைகளையும் நாம் விடுவிப்போம்' என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மனதில் நிறுத்தி நடைபோடுவோம். [2025-01-07 07:36:25]


கடவுளால் அன்பு செய்யப்படுவதே உண்மையான அழகு

உண்மையான அழகு என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவது என்றும், பாலன் இயேசுவைச் சந்திக்கச் சென்ற இடையர்களோடு நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டு செல்வோம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 30 திங்கள் கிழமையன்று ஹேஸ்டாக் கிறிஸ்து பிறப்பு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் நுழைவோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
ஒளி மற்றும் அமைதி, ஏழ்மை மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் கிறிஸ்து பிறப்புக் குடிலைப் பார்ப்போம், உண்மையான கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் இடையர்களோடு நுழைவோம். நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டுவருவோம். உண்மையான கிறிஸ்து பிறப்பின் ஆற்றலை சுவைப்போம். கடவுளால் அன்பு செய்யப்படுதலே உண்மையான அழகு என்பதை உணர்வோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். [2024-12-31 08:09:39]


போர் என்பது சுயஅழிவை நோக்கிய உலகளாவிய போக்கு

அமைதிக்கான வேண்டுகோள்கள் அனைத்தும் ஒரு காது வழியாகச் சென்று மற்றொறு காது வழியாக வெளியேறுவது கவலையடையச் செய்கிறது என்றும், போர் என்பது சுய அழிவை நோக்கிய உலகளாவிய போக்கு என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டினா தொலைக்காட்சி நிறுவனமான Orbe 21 க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, போர், யூபிலி ஆண்டு, உரையாடல், உக்ரைன் சூழல், வெறுப்பு என்னும் தீமை, மன்னிப்பு கேட்கும் திறன், ஒருங்கிணைந்த பயணமும் செவிசாய்த்தலும், எல்லாருக்குமான திருஅவை என்பன பற்றிய தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். பன்னாட்டு அமைப்புகளின் அமைதிக்கான பல அழைப்புகள் எந்த விதமான பலன்களையும் தராமல் இருப்பது கவலை அளிக்கிறது, அடிப்படை பாசாங்குத்தனம் அதில் உள்ளது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், அமைதியைப் பற்றியும் பேசுகிறோம், போருக்கு ஆயுதமும் தருகிறோம் என்று சிலர் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் முதலீடு செய்வதில் மிகப்பெரிய வருமானம் ஆயுத தொழிற்சாலைகள் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், மாநாடுகள் மற்றும் அமைதிக் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அதே நேரத்தில் மக்களைக் கொலை செய்வதற்கான ஆயுதங்களும் தயாராகின்றன என்றும் , உக்ரைன் மற்றும் காசாவில் மக்கள் காரணமின்றி சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். "உரையாடல் இல்லை என்றால், அமைதி இருக்காது" என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், மனிதகுலம் மற்றும் திருஅவையின் பிரச்சினைகளை அரவணைத்து, உரையாடலின் வழியே அவற்றைத் தீர்க்க திருஅவை முயல்கிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். திருஅவைக்குள் இருக்கும் நாம் யாரும் புனிதர் அல்ல, நாம் அனைவரும் பாவிகளே, நமது குறைபாடுள்ள சூழ்நிலைகளைத் தீர்க்க திருச்சபை நமக்கு உதவுகிறது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நம் மோதல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும், மேலே இருந்து தளம் வெளியே வரவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். [2024-12-21 23:30:30]


மியான்மாரில் போரால் துயருறும் கிறிஸ்தவம்!

மியான்மாரின் காயா மாநிலத்தில் ஆயிரங்கணக்கானோர் புலம்பெயர்ந்தோராக உள்ளனர் என்றும், தற்போது உள்நாட்டில் அதிலும் குறிப்பாக, சின், மாக்வே மற்றும் ஸகைங் பகுதிகளில். 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் காடுகளிலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும், அருள்பணியாளர் Bernardino Ne Ne கூறியுள்ளதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காயா மாநிலத்தின் தலைநகர் லொய்காவில் இருந்து வந்த அருள்பணியாளர் Ne Ne அவர்கள், யங்கூனில் வாழ்க்கை சீராகவே செல்கின்றது, ஆனால் அரசியல் விவகாரங்களை விவாதிப்பதற்கோ அல்லது ஆட்சியை விமர்சிப்பதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றும், வழிபாட்டுத்தலங்களில் நிகழ்வுகள் நடைபெற சிக்கல் இல்லை என்றபோதிலும், படைவீரர்களின் கண்காணிப்புகளால் அவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் மொழிந்ததாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது. லொய்காவைப் போன்ற மோதல் இடம்பெறும் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள், பொருள்சேதங்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலையைப் பார்க்க முடிகிறது எனவும், பெரும்பாலான பங்குக் கோவில்கள் பங்குமக்களின் இடம்பெயர்தல் காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 39 பங்குத் தளங்களில் 9 மட்டுமே தற்போது செயல்படுகின்றன என அவர் கவலை தெரிவித்ததாகவும் கூறுகின்றது அச்செய்திக் குறிப்பு.
அருள்பணியாளர் Ne Ne, உட்பட இன்னும் பல அருள்பணியாளர்கள் முகாம்களில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வாழ்வதன் மூலம் அவர்களுக்கு ஆன்மிக ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்குகின்றனர் மற்றும் அவர்களின் போராட்டங்களில் பங்கு கொள்கின்றனர் எனவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இந்தக் கடுமையான நிலைகளுக்கு மத்தியில், மியான்மாரின் கத்தோலிக்கத் தலைவர்கள் நிலையான அமைதியும் நீதியும் நிலவிட வேண்டுமென இறைவேண்டல் செய்கின்றனர் என்றும், சிறந்ததொரு எதிர்காலம் அமைந்து தாங்கள் மீண்டும் தங்களின் புனித இடங்களுக்குத் திரும்புவோம் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் என்றும், அருள்பணியாளர் Ne Ne கூறியதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்தித் தொகுப்பு. (Fides) [2024-12-21 23:28:20]