வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



புனித வெள்ளி சிலுவைப் பாதை சிந்தனைகளை வழங்கும் திருத்தந்தை

இவ்வாண்டு, புனித வெள்ளியன்று, உரோமை கொலோசியத்தில் நிகழவிருக்கும் திருச்சிலுவைப் பாதை சிந்தனைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்க முடிவு செய்திருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 26, இச்செவ்வாயன்று, வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்தத் தகவலை தெரிவித்துள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், 'சிலுவைப் பாதையில் இயேசுவுடன் இறைவேண்டல்' என்ற கருப்பொருளில் இவ்வாண்டிற்கான சிலுவைப்பாதை, வரும் புனித வெள்ளியன்று இரவு 09.15 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என்றும் கூறியுள்ளது. சிலுவைப் பாதையை உருவாக்கி, அவருடன் இணைந்து நடக்க அனுமதிக்கும் கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தப்படும் வகையில் இந்நிகழ்வு அமையும் என்றும், அன்று கல்வாரியில் இயேசு அனுபவித்த துயரங்கள் இன்றைய சூழலுக்கு எவ்வாறு பொருந்தி நிற்கிறது என்று அதில் எடுத்துக்காட்டப்படும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை மேலும் உரைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளியன்று மாலையில் உரோம் நகரின் கொலோசியத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் திருச்சிலுவைப் பாதையில் பல்வேறு நபர்கள் சிந்தனைகளை எழுதிவந்த வேளை, இவ்வாண்டு திருத்தந்தை அவர்களே அனைத்துத் தலங்களுக்குமான சிந்தனைகளை வழங்குகிறார் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. [2024-03-27 23:48:21]


"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு

"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" என்ற திருத்தூது அறிவுரை மடலானது ஒன்றிணைந்துப் பயணிக்க விரும்பும் திருஅவையின் பலன் என்றும், உரையாடல், செவிசாய்த்தல், கடவுளின் திருவுளத்தைத் தெளிந்து தேர்தல் போன்றவற்றைப் பகுத்தறிய உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்" என்ற திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு மார்ச் 25 திங்கள்கிழமையன்று, இளையோர்க்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான இளையோர் உரோம் நகருக்கு வந்து தங்களது எதிர்பார்ப்புக்களையும் விருப்பங்களையும் தெரிவித்தனர் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், ஒருங்கிணைந்த பயணத்திற்கான ஓர் முன்னனுபவமாக இளைஞர்களின் பகிர்வு அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களே பயணிக்கும் திருஅவையின் வாழும் எதிர்காலம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உடலாகிய திருஅவை வாழ்விற்குத் தங்களதுப் பங்களிப்பினைத் தரும் இளையோர், நன்மையைச் செய்தல், தூய்மையான மற்றும் சுறுசுறுப்பான இயந்திரம் போன்ற அவர்களின் செயல்கள், உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை அறிவிக்கும் உண்மையான வாழ்க்கை முறை போன்றவற்றை ஒரு போதும் தவறவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
2018 அக்டோபர் மாதம் வத்திக்கானில் இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடலாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 2, செவ்வாயன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்டது.
எல்லையற்ற விதத்தில் அன்பு செய்யும் இயேசு
நமது மற்றும் அனைத்து மனிதகுல நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கும் அறிவிப்பான "கிறிஸ்து வாழ்கிறார்!" என்ற வார்த்தைகளை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து நம்மை எல்லையற்ற விதத்தில் அன்பு செய்கின்றார், அவரது அன்பு நமது தவறுகள் மற்றும் வீழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படாமல் நமக்காக தன் உயிரையே கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிலுவையில் அறையப்பட்ட அவரது கரங்களில் நம்மை எப்போதும் புதுப்பித்துக் கொள்ள அர்ப்பணிப்போம் என்றும், ஒரு நண்பரைப்போல அவருடன் நடந்து, வாழ்க்கையில் வரவேற்று, இளமைக்கால மகிழ்ச்சி, துன்பம், கவலைகள் மற்றும் நம்பிக்கைகளை அவருடன் பகிர்ந்து வாழவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதனால் நமது வாழ்க்கைப்பாதை ஒளிவீசக்கூடியதாகவும் மிகப்பெரிய சுமைகள் குறைவானதாக மாறுவதைக் காண முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், ஏனெனில் இயேசு நம்முடன் இருந்து நமது சுமைகளை சுமக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.
இயேசுவின் இதயத்தில் நம்மை நுழையச் செய்யும் ஆற்றல் பெற்ற தூய ஆவியை ஒவ்வொரு நாளும் அழைக்க மறக்க வேண்டாம் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நீங்கள் அவருடைய அன்பினாலும், அவருடைய ஒளியினாலும், அவருடைய பலத்தினாலும் அதிகமாக நிரப்பப்படுவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். [2024-03-26 23:23:35]


வடக்கு காசாவை நெருங்கும் பஞ்சத்தினால் பாதிக்கப்படும் சிறார்

வடக்கு காசாவில் பஞ்சம் நெருங்கி வந்துவிட்டது என்றும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக பல குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் தலைமை இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல்.
மார்ச் 25 திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல் அவர்கள் அடிப்படை உதவிப் பொருள்களுக்கானத் தேவையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிப்பொருள்கள் முழுமையாக வழங்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு காசாவில் வாழும் குழந்தைகளின் நலவாழ்வு மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் பஞ்சமானது நெருங்கி வந்துவிட்டது என்றும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக பல குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் கேத்தரின் ரூஸ்ஸல்.
காசாப்பகுதியில் உள்ள எல்லா இடங்களிலும் வாழ்கின்ற, தேவையிலிருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைச் சென்றடையும் மனிதாபிமான அமைப்புகளின் செயல்களுக்கு முழுமையான மற்றும் பாதுகாப்பான அணுகுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ரூஸ்ஸல் அவர்கள், குழந்தைகளின் நலவாழ்வும் வாழ்க்கையும் இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். [2024-03-26 23:21:34]


காலரா நோயினால் சோமாலியாவில் 54 சிறார் இறப்பு

சோமாலியாவில் 54 சிறார் காலராநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்றும், இந்த தொற்றுநோயின் தீவிரத்தைத் தடுக்க உள்ளூர் அரசு மற்றும் நலவாழ்வு நிறுவனங்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண அழைப்புவிடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது Save the Children அமைப்பு.
மார்ச் 23 சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சோமாலியாவில் கடந்த வாரத்தில் இறந்த ஒன்பது பேர் உட்பட, ஏறக்குறைய 54 பேர் இவ்வாண்டு இறந்துள்ளனர் என்றும், ஆபத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறார்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களின் எதிர்காலத்திற்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் Save the Children எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு.
சோமாலியாவின் நலவாழ்வு மற்றும் மனித சேவைகள் துறையின் அண்மைய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்ட 4,388 தொற்றுநோய்ப் பதிவுகளில் 59 விழுக்காட்டினர் அதாவது 2,605 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது.
சோமாலியாவின் தென் மாநிலங்களான பனாதிர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் காலரா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 23 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 586 புதிய நோயாளிகளில் 5 வயதுக்குட்பட்ட 331 குழந்தைகள் உள்ளனர் என்றும் உறுதி செய்துள்ளது.
சோமாலியாவில் உள்ள நலவாழ்வு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜனவரி 2024 இல் தொடங்கிய தற்போதைய நோய் அதிகரிப்பானது கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளத்தின் விளைவு என்றும், பனாதிர் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.
அசுத்தமான நீர், கழிவுநீர் சுத்திகரிப்பு இன்மை, வெள்ளம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் இல்லாத பகுதிகள் போன்றவற்றினால் காலரா நோய் வேகமாகப் பரவுகின்றது என்றும், இந்தத் தொற்றுநோயின் தீவிரத்தைத் தடுக்க உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது Save the Children அமைப்பு. [2024-03-26 23:20:52]


செவிசாய்த்தல், உரையாடல் பாதைகளில் நம்மை வளர்க்கும் தகவல்தொடர்பு

உண்மையான தகவல் தொடர்பு என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது, பல்வேறு ஆச்சர்யங்களுடன் நம் கதவுகளைத் தட்டுகின்றது என்றும், நட்புறவு, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைப் பகிர்தல், குடும்பத்தில், சமூகத்தில் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், மரியாதை மற்றும் தாழ்ச்சியுடன் செவிசாய்த்தல், உரையாடல், அறிவித்தல் போன்ற பாதைகளில் நம்மை வளர்க்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 23 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலிய தொலைக்காட்சியான ராய் (RAI) தகவல் தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா இல்லங்களிலும் எல்லா நாளும் பார்க்கப்படும் இத்தொலைக்காட்சி ஒவ்வொரு நாளும் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றது என்றும் கூறினார்.
சமூக ஊடகங்கள் நமது அடையாளங்களை நன்மை தீமை என்னும் இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், தகவல் தொடர்பு சமூகத்திற்கான கொடை, பொதுச்சேவை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பணி
பணியாற்றுதல் - பணிவிடை பெறுதல், அர்ப்பணிப்பு – பயன்படுத்துதல் என்னும் இரண்டிற்கும் இடையில் குழப்பம் உடையவர்களாய், பணி என்ற வார்த்தையின் பொருள் புரியாமல் நாம் இருக்கின்றோம் என்றும், இருப்பினும் குடிமக்களின் எல்லா தேவைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் உலகளாவிய திறந்த மனம், மனித மாண்பு மற்றும் உரிமையை மதித்து ஊக்குவித்தல் போன்றவற்றை ராய் தொலைக்காட்சி செய்து வருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
தகவல், பொழுதுபோக்கு, கலாச்சாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் துல்லியமான தாக்கங்களைக் கொண்ட உண்மை மற்றும் பொது நன்மைக்கான பங்களிப்பு முக்கியமானது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தகவல் தொடர்புத்துறையில், பணி செய்வது என்பது முழு உண்மையையும் தேடுதல் மற்றும் ஊக்குவித்தல் என்றும், போலிச் செய்திகளின் பரவல், கருத்தியல் வழியில் பொதுக் கருத்தை பாதிக்க முயற்சிப்பவர்களின் வஞ்சகமான திட்டம், பொய்யினால் சமூகத்தை சீர்குலைத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுதல் என்றும் கூறினார் திருத்தந்தை.
உண்மை ஒன்றே ஒன்றுதான், அது இணக்கமானது, தனிப்பட்ட நலன்களால் பிரிக்க முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சிம்பொனி எனப்படும் கூட்டிசை போல தனி ஒருவரின் கருத்தைவிட பல்வேறு குரல்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து இணைந்து செயல்படுவது என்றும் கூறினார்.
உண்மை என்பது முன்மொழியப்பட்ட ஒன்று, அது ஒருபோதும் திணிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், உரையாடலை வளர்த்தெடுக்கவேண்டும், செவிசாய்ப்பது என்பது பதிலளிப்பதற்காக என்று மட்டுமே இருந்தால், அது உண்மையான செவிசாய்த்தல் ஆகாது என்றும், மற்றவர்களின் நிலையைப்பற்றி சிந்திக்காமல் இருப்பதை இத்தகைய செவிசாய்த்தல் எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
பொதுப்பணி
ராய் ஊடகத்தின் பணி சிலருக்கானது அல்ல, மாறாக அனைவரின் பொது நலனுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடைநிலையில் இருப்பவர்கள், ஏழைகள், குரலற்றவற்றவர்கள், ஒதுக்கப்பட்டவர்களுக்கான குரலாகவும், அதற்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாகவும் அவர்களின் பணி இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
அறிவு வளர்ச்சிக்கான கருவி, மக்களை அந்நியப்படுத்தாமல் பிரதிபலித்தல், எதார்த்தத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டங்களைத் திறத்தல், பெரிய கனவுகளுக்காக இளையோர் மனங்கள் மற்றும் கண்களைத் திறத்தல், பெரிய கனவு காண கல்வி கற்பித்தல், போன்றவற்றை உள்ளடக்கியதாக சமூகத்தொடர்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
கனவு காணும் திறனை ஒருபோதும் இழக்காதீர்கள், பெரியதாக கனவு காணுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முழு ஊடக அமைப்பும், உலகளாவிய மட்டத்தில், தன்னை விட்டு வெளியே வந்து தன்னைத்தானே கேள்வி கேட்க, தன்னைவிட்டு அப்பால் பார்க்க தூண்டப்பட வேண்டும் என்றும், தகவல்தொடர்பு, அனைவரின் நலனுக்கான உரையாடலாக, குடியுரிமை, பங்கேற்பு போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புகளை மீண்டும் உருவாக்குவதில் ஓர் அடிப்படை பங்கை வகிப்பதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை. [2024-03-24 00:07:41]


சிலுவைகள் விண்ணக மகிமையின் கதவுகள் - திருத்தந்தை

கடவுளுடன் இருக்கையில் நமது துயரமான சிலுவைகள் அனைத்தும் வாழ்க்கையின் முடிவுகள் அல்ல, மாறாக அவை அனைத்தும் விண்ணக மகிமையை நோக்கிச் செல்லும் கதவுகள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மார்ச் 23 சனிக்கிழமை புனித வாரத்துக்கு முந்தைய நாளான இன்று சிலுவையின் மகிமை குறித்த தனதுக் கருத்துக்களை இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவோடு நமது சிலுவை உயிர்ப்பில் முடிவடைகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிலுவைகள் அனைத்தும் முடிவுகள் அல்ல மாறாக கடவுளுடன் இருக்கையில் அவை அனைத்தும் விண்ணக மகிமையை நோக்கிச்செல்லும் கதவுகள். ஏனெனில், இயேசுவோடு நமது ஒவ்வொரு சிலுவையும் உயிர்ப்பில் முடிவடைகின்றது. இருள் ஒளியிலும், கைவிடப்படுதல் ஒன்றிப்பிலும் முடிவடைகின்றது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும். [2024-03-24 00:06:17]


மினோவா பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் நான்கு சிறார் காயம்

பள்ளியிலிருந்து பல குழந்தைகள் வீடு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால் நான்கு அப்பாவி குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் புதிய வருகையின் காரணமாக மினோவா நகரம் பதற்றத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் காங்கோ ஜனநாயகக் குடியரசின் UNICEF துணைப் பிரதிநிதி காத்யா மரினோ. மார்ச் 23 சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள மரினோ அவர்கள், வடக்கு கீவில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்த 95,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும் இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் மினோவா பகுதிக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். மார்ச் 20 கடந்த புதன்கிழமை நடந்த இச்சம்பவமானது, தெற்கு கீவு பகுதியிலும் மோதல் பரவுவதை எடுத்துக்காட்டுகிறது என்றும், மினோவா பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் அளவிற்கு கடுமையாகக் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில், UNICEF உள்ளூர் மக்களின் உதவியுடன், புதிதாக இடம்பெயர்ந்த 8,300 குடும்பங்களுக்கு மினோவாவில் அடிப்படை வீட்டுப் பொருட்களை விநியோகித்துள்ளனர் என்றும், சாலை வழியாகவும் கடல் வழியாகவும் மனிதாபிமான உதவிப்பொருள்களோடு இப்பகுதியை அணுகுவது கடினமாகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் மரினோ. மினோவாவில், UNICEF 2023 ஆம் ஆண்டு முதல், மோதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீர் மற்றும் நலவாழ்வு உதவிகள் உட்பட பல அடிப்படைச் சேவைகளை வழங்கி வருகின்றது என்றும், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க சமூகம் சார்ந்த வலையமைப்புக்களுக்கு ஆதரவளித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமான வன்முறை மீண்டும் எழுகிறது என்றும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வடக்கு கீவுவில் குறைந்தது 4,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் இச்சூழல் குழந்தைகளை மேலும் வன்முறைக்கு ஆளாக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மரினோ. [2024-03-24 00:05:00]


கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கொண்டவர்களுக்கு வாக்களியுங்கள்!

எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு வாக்களிக்க ஐரோப்பிய மக்கள் தயாராகி வரும் வேளை, கிறிஸ்தவ விழுமியங்களையும் ஐரோப்பியத் திட்டங்களையும் நிலைநிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு குடிமக்களுக்கு அறிக்கையொன்றில் அழைப்பு விடுத்துள்ளனர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர்கள்.
இன்று, ஐரோப்பாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சவாலான மற்றும் நிச்சயமற்ற காலங்களை கடந்து செல்லும் வேளையில், இக்கண்டம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க, பொதுநலனை நேர்மையாகப் பின்பற்றும் வலிமைவாய்ந்த, திறமையான மற்றும் மதிப்புமிக்க கொள்கை வகுப்பாளர்கள் நமக்குத் தேவை என்று கூறியுள்ள ஆயர்கள், எதிர்வரும் தேர்தலில் அப்படிப்பட்டவர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் அவ்வறிக்கையில் அறிவுறுத்தியுள்ளனர். இந்த முக்கியமான தருணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நன்கு தெளிந்து தேர்வுசெய்ய வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என்பதையும் அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.
ஒவ்வொரு மனிதரின் மாண்பு, ஒற்றுமை, சமத்துவம், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் புனிதம், மக்களாட்சி, சுதந்திரம், துணை செயல்பாடு மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின்மீதான அக்கறை இவற்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வெவ்வேறு சூழ்நிலைகளை உணர்ந்தவர்களாய், ஐரோப்பிய திட்டத்தை தெளிவாக ஆதரிக்கும் நபர்கள் மற்றும் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை ஆயர்கள் அவ்வறிக்கையில் எடுத்துரைத்துள்ளனர். இச்சூழலில், இவ்வறிக்கை மற்றும் ஜூன் மாதம் நிகழவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பற்றியும், வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில், சிறப்பாக விளக்கியுள்ளார் COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருள்பணியாளர் Manuel Enrique Barrios Prieto. [2024-03-14 22:54:50]


கடந்த 5 ஆண்டுகளில் கிழக்கிற்கான ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளது

கடந்த ஐந்தாண்டுகளில் உலகில் இடம்பெற்றுவரும் ஆயுத பரிமாற்றங்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்வீடனின் SIPRI அமைப்பு, ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. ஆசியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கியதில் கடந்த 25 ஆண்டுகளிலேயே அமெரிக்க ஐக்கிய நாடு முதன் முறையாக முதலிடத்தில் வந்துள்ளதாகவும் கூறும் SIPRIயின் அறிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் கிழக்கு நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனமான SIPRI வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019க்கும் 2023க்கும் இடைப்பட்டக் காலத்தில் உலக ஆயுதங்களின் இறக்குமதியில் 37 விழுக்காட்டை ஆசியா மற்றும் ஒசியானியா நாடுகளும், 30 விழுக்காட்டை மத்திய கிழக்கு நாடுகளும், 21 விழுக்காட்டை ஐரோப்பாவும், 5.7 விழுக்காட்டை அமெரிக்கக் கண்டமும், 4.3 விழுக்காட்டை ஆப்ரிக்காவும் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதிச் செய்யும் முதல் 10 நாடுகளில் ஆறு ஆசியாவில் இருப்பதாகவும், அவை இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் சைனா எனவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சைனாவின் ஆயுதச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளபோதிலும், அதன் ஆயுத இறக்குமதி குறைந்துள்ளது, ஏனெனில் உள்நாட்டு ஆயுதத் தயாரிப்புகளில் அது கவனம் செலுத்தி வருகிறது எனவும் SIPRIயின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
சைனா மற்றும் பாகிஸ்தானுடன் ஆன பதட்ட நிலைகளால் 2014 முதல் 2018ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்திய ஆயுத இறக்குமதி 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக உரைக்கும் இவ்வமைப்பு, உலக மொத்த ஆயுத இறக்குமதியில் 9.8 விழுக்காட்டைக் கொண்டு இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. [2024-03-14 22:49:27]


மலேசியாவில் திருமுழுக்குப் பெறும் 1,700 புகுநிலைக் கிறிஸ்தவர்கள்

மலேசியாவின் தலத்திருஅவைச் சமூகம் 1,700-க்கும் மேற்பட்ட புகுநிலைக் கிறித்தவர்களுக்குத் திருமுழுக்கு வழங்கத் தயாராகி வருவதாக Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அண்மைய ஆண்டுகளில், மலேசியாவில் உள்ள கத்தோலிக்கச் சமூகத்தில் திருமுழுக்குக் கோரும் வயதுவந்தோரின் (Adults) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், பல்வேறு பங்குத்தளங்களிலிருந்து வரும் திருமுழுக்குப் பெற விரும்பும் வயதுவந்தோரின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் 'வயதுவந்தோரின் கிறித்தவ புகுமுகச் சடங்கு' என்ற புதியதொரு பாதையை பல்வேறு மறைமாவட்டங்கள் திறந்து வைத்துள்ளன என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிகழவிருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாத் திருவிழிப்புத் திருப்பலியின்போது, 1,700-க்கும் மேற்பட்ட மலேசிய புகுநிலை கிறித்தவர்கள் திருமுழுக்குப் பெறத் தயாராகி வருகின்றனர் என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, கோலாலம்பூர் உயர்மறைமாவட்டத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் பல்வேறு பங்குத்தளங்களைச் சேர்ந்த மொத்தம் 547 புகுநிலைக் கிறிஸ்தவர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், ஞானப்பெற்றோர் அனைவரும் அருள்பணியாளர்களுடன் கூடியிருந்தனர் என்றும் தெரிவிக்கிறது. இவர்களுக்கு அருளுரை வழங்கிய பேராயர் Julian Leow அவர்கள், கடவுள்மீது நம் முதுபெரும் தந்தை ஆபிரகாம் கொண்டிருந்த பிரமாணிக்கத்தையும், அவர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து தனது ஒரே மகன் ஈசாக்கை பலியிடத் தயாராக இருந்ததையும் சுட்டிக்காட்டியதுடன், அவரிடம் விளங்கிய அதே நம்பிக்கையையும் பிரமாணிக்கத்தையும் கொண்டிருக்குமாறும் புகுநிலைக் கிறிஸ்தவர்களிடம் கேட்டுக்கொண்டார். அனைவருக்கும் மீட்பைக் கொண்டுவருவதற்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருந்த இயேசுவின் பணிவாழ்வுக் குறித்தும் அவர்தம் கீழ்ப்படிதல் குறித்தும் வலியுறுத்தி பேசிய பேராயர் Leow அவர்கள், புகுநிலைக் கிறிஸ்தவர்கள் யாவரும் கடவுளுக்கு உண்மையாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும், தான் தெரிந்துகொண்ட மக்களுடன் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி அவர்கள் அனைவரையும் கடவுள் அழைத்துள்ளாகவும் எடுத்துரைத்தார். மேலும் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய பேராயர் ஜான் வோங் அவர்கள், இந்தப் புகுநிலைக் கிறிஸ்தவர்களை அன்புடன் வரவற்றதுடன், திருமுழுக்கு என்பது தொடக்க நிலைதான் என்றும், இறைவார்த்தைகளைக் வாசிப்பதிலும், சிந்திப்பதிலும், அவற்றை வாழ்வாக்குவதிலும் எப்போதும் இயேசுவுடன் இணைந்திருக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். (Fides) [2024-03-13 23:00:26]