2025-ஆம் ஆண்டு மியான்மாரில் அமைதி மலரும் ஆண்டாக இருக்கும்!உலகலாவியத் திருஅவை எதிர்நோக்கின் யூபிலியைத் தொடங்கியுள்ள இவ்வேளை, மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்லஸ் மவுங் போ அவர்கள், ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் அழிக்கப்பட்டுள்ள நாட்டில், பிறந்துள்ள புத்தாண்டு அமைதியைக் கொண்டுவரும் என்று தனது இதயப்பூர்வமான நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.யூக்கான் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செய்தி ஒன்றில், கடந்த ஆண்டுகளில் நல்லிணக்கத்திற்காக பலமுறை வேண்டுகோள் விடுத்த கர்தினால் போ அவர்கள், மியான்மாரின் மாண்பையும் நம்பிக்கையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு பார்வையையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும் வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர்கள் ‘அமைதியின் சிற்பிகள்’ என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், நாடு அவர்களுக்கு வாய்ப்புகளையும் கல்வியையும் வழங்குவதற்கான அவசரத் தேவையையும் வலியுறுத்தியுள்ள அதேவேளை, அவ்வாறு செய்வதன் வழியாக, அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நமது நாட்டின் ஆன்மாவையும் மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்றும் கூறியுள்ளார். அமைதிக்கான ஒரு வழியாக நல்லிணக்கத்தை பரிந்துரை செய்துள்ள அவர், நல்லிணக்கம் என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல; அது ஒரு தேர்வு-வலிக்கு அப்பால் அன்புகூர்வது, அழிவுக்கு அப்பால் கட்டமைப்பது என்றும் விளக்கமளித்துள்ளார். நீதி மற்றும் மனித மாண்பை நிலைநாட்டுவதும் அமைதிக்கு வழிவகுக்கும், என்றும், உண்மையான அமைதி என்பது போரற்றச் சூழல், இது அனைவருக்குமான நீதி, பாதுகாப்பு மற்றும் மாண்பின் இருப்பை உள்ளடக்கியது என்றும் எடுத்துரைத்துள்ள கர்தினால், இந்த அமைதி நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது, இரக்கத்தால் வளர்க்கப்படுகிறது மற்றும் நம்பிக்கையால் நிலைத்திருக்கிறது என்றும் விளக்கியுள்ளார். [2025-01-11 00:11:37] புத்தாண்டின் முதல் வாரத்தில் காசாவில் 74 குழந்தைகள் மரணம்!அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் காசா பகுதியில் நடந்து வரும் வன்முறையால் குறைந்தது 74 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம். ஜனவரி 8, இப்புதனன்று, இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், காசா நகரம், கான் யூனிஸ். தெற்கில் அல் மவாசி ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரவு நேரத் தாக்குதல்கள் உட்பட பல சம்பவங்களில் இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், மிக அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில், அதாவது, இச்செவ்வாயன்று, அல் மவாசியில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் கவலை தெரிவித்துள்ளது.கடுமையான குளிர்காலம் மற்றும் போதிய தங்குமிடங்கள் இல்லாததால், டிசம்பர் 26 முதல், எட்டு பிறந்த குழந்தைகள் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துள்ளன என்றும் குறிப்பிடும் அதன் அறிக்கை, 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இடம்பெயர்ந்து, போதிய மனிதாபிமான உதவியின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர் என்றும், அங்குக் குடிமுறைக்குரிய ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும், அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இத்துயரமான தருணத்தில், உடனடி போர்நிறுத்தம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுதல் மற்றும் துன்பத்தை போக்க மனிதாபிமான அணுகலை மேம்படுத்துதல் குறித்து வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ளும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உயிர்களைக் காப்பாற்ற உதவி விநியோகம் முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. [2025-01-11 00:06:27] தடைகளைத் தாண்டி இயேசுவைக் காண முயலவேண்டும்இறைவனைச் சந்திப்பதற்கு உதவும் ஒளியாக நாம் ஒருவருக்கொருவர் இருக்கவேண்டும் என்றும், இறைமகனைச் சந்திப்பதற்காக பல்வேறு தடைகளைத்தாண்டி வந்த ஞானிகள் போல நாமும் இயேசுவைக் காண முயலவேண்டும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.ஜனவரி 6 திங்கள்கிழமை திருக்காட்சிப்பெருவிழாவை முன்னிட்டு ஹேஸ்டாக் திருக்காட்சிப்பெருவிழா மற்றும் இன்றைய நற்செய்தி என்னும் தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாக தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். தங்களது கண்களை வானத்தை நோக்கித்திருப்பி விண்மீன்களைக் கண்ட ஞானிகளைப் பற்றி சிந்திக்கும் வேளையில், மற்றவர்கள் இறைவனைச் சந்திப்பதற்கு ஒளியாக நாம் வழிகாட்ட வேண்டும் அதற்கான அருளை இறைவனிடம் நாடுவோம் என்று தனது முதல் குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை . வாரம் ஓர் அலசல் – ஜனவரி 06. போரால் பாதிக்கப்படும் குழந்தைகள்போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி நினைவுகூர்கிறோம். 6ஆம் தேதியோடு அந்த நாள் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதன் பின்னர் ஒன்றுமேயில்லை. போர்களும் உள்நாட்டு மோதல்களும் அவைகளின் பாதிப்புகளும் இளஞ்சிறார்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளின் ஆபத்து ஒரு கொடிய அச்சுறுத்தலாக உள்ளது என்ற உண்மை, உலகம் முழுவதும் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களின் வழி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான், அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான்.உக்ரைனில் போர் துவங்கிய 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் பாதுகாப்பின்மை காரணமாக கல்வி நிலையங்களில் தங்கள் பெயர்களை பதிவுச் செய்த மாணவர்களுள் பாதி பேர் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை மருத்துவக் கட்டிடங்கள், கல்வி நிலையங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன, அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன என்பதற்கு துல்லியமான விவரங்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளான கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளான போரும் என 4 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி உக்ரைன் நாட்டில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவிக்கிறது. ஏமனை எடுத்துக் கொள்வோம். இது மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடு. ஏமனில் உள்ள எண்ணெய் வளத்தை அபகரிக்க அங்கே ஒரு உள்நாட்டு போரை உருவாக்கின இரு பணக்கார நாடுகள். அதற்கு ஆதரவாக சில நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்தன. ஏமன் போரில் ஏறக்குறைய 130,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போரின் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தாலும் உணவு தட்டுப்பாடாலும் 84,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, 1.6 கோடி மக்கள் ஏமனில் பஞ்சத்தின் விளிம்பில் சிக்கி தவித்து வருகின்றனர். 5 வயதிற்கு கீழ் உள்ள 23 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தங்கள் சுயநல இலாபத்திற்காக பணக்கார நாடுகள் இயற்கை வளங்கள் மிகுந்த ஏழை நாடுகளில் போர் சூழலை உருவாக்கி, போரிடும் இரு குழுக்களுக்கும் ஆயுதங்களை வழங்கி மக்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றன. மேலும், ஒரு செயற்கையான பஞ்சத்தை உருவாக்கி பல இலட்சக்கனக்கான மக்களை அழித்தொழிக்கின்றன. இங்கும் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான். காஸா போரில் அழிக்கப்பட்ட நீர் அமைப்பு; தண்ணீர் இன்றி தவிக்கும் குழந்தைகள் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது, ஆனால் அது மாசுபட்டதாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். "காஸா பகுதியில் தற்போது ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு மிகப்பெரிய காரணம், இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாசுப்பட்ட தண்ணீர் தான்," என்று மருத்துவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக கூற்றுபடி, காஸாவின் 67% நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. காஸாவின் நீர் உள்கட்டமைப்பு போரில் பெரிதும் சேதமடைந்துள்ளதால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது குழந்தைகள்தான். மேலும், உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும்போது அனுமதிக்கப்பட்ட நிவாரணத்தின் அளவு மிகவும் சிறியது என்று நலப்பணியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மாசுபட்ட நீர் ஆகியவற்றால் இந்தச் சூழல் கடுமையான விளைவை ஏற்படுத்தி வருகிறது. "பாட்டில் தண்ணீர் கிடைப்பதில்லை. குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள் - கிடைக்கும் தண்ணீரும் அசுத்தமாக எங்களை வந்தடைகிறது," என்றுதான் அனைவரும் கூறி வருகின்றனர். உணவு மற்றும் தண்ணீருக்கானத் தேவை காஸாவில் அதிகரித்துள்ளதால், அவை கொள்ளையடிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமக்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்களால் நிவாரண சரக்கு வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர், பஞ்சத்தை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளதையும் நாம் இங்கு மறுக்க முடியாது. அண்மையில் சிரியாவில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களை கொஞ்சம் உற்று நோக்குவோம். சிரியாவிலிருந்து வரும் தகவல்களின்படி, அந்நாட்டில் 1கோடியே 20 இலட்சம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், மற்றும், 1 கோடியே 60 இலட்சம் பேர் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்து உள்ளனர். சிரியாவிலிருந்து மக்கள் அகதிகளாக, இலெபனான், ஜோர்டன், துருக்கி, ஈராக், எகிப்து மற்றும் வட ஆப்ரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியாவில் ஏறக்குறைய 40 விழுக்காடு மருத்துவமனைகள் மற்றும் நல வசதிகள் பகுதியளவு அல்லது முழுமையாக செயல்படவில்லை என்றும், ஏறத்தாழ 1 கோடியே 36 இலட்சம் மக்களுக்கு தண்ணீர், உடல்நலம் மற்றும் நலப்பணிகளும், 37 இலட்சம் குழந்தைகள் உட்பட 57 இலட்சம் மக்களுக்கு ஊட்டச்சத்து உதவியும் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மோதல்களுக்கு மத்தியில் வளர்ந்துள்ளனர் என்றும், 75 இலட்சக் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றும், 64 இலட்சக் குழந்தைகளுக்கு அவசர பாதுகாப்பு சேவைகள் தேவைப்படுகின்றன என்றும் கூறுகிறது இவ்வறிக்கை. சிரியாவில் போர் முடிந்தாலும் அங்கே போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் மக்கள் மீது மற்றொரு போரை தொடுத்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளான போர் மற்றும் கலக வன்முறைகளால் உலகின் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ள வேண்டிய நிலையானது உண்மையில் வெட்கக்கேடான விடயம். அதிலும், தங்களுக்கென குரல் எழுப்பமுடியாத குழந்தைகளை பாதிக்கவிடுவது மனித குலத்திற்கு பெரும் இழுக்கு. இன்றய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பது நாடறிந்த கூற்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் என்பதே நம் விண்ணப்பம். ஆனால் மனிதனின் சுயநலக் கூற்றுக்குள் இந்த வேண்டுகோள் கருகிவிடுகிறது என்பதைத்தான் கண்டுவருகிறோம். குழந்தை பருவத்தில் குழந்தைகள் தமது சூழலில் இருந்து நிறைய கற்று கொள்வார்கள், நமக்கு நிறைய கற்றுத் தருவார்கள். ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறான் என்பது போல அந்த மழலைகளின் உலகம் மனிதர்களின் மனக் காயங்களுக்கு மருந்திடும். எனவே, நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதன் வழியாக நாட்டை சிறப்பானதாக கட்டியெழுப்ப முடியும். ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது. உலகத்தில் மிகச்சிறந்த நாடு எதுவென்றால், சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை எந்த ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அதுதான். ‘குழந்தைகளைப் பாதுகாப்பவர்கள், இறைவன் பக்கம் இருப்பதுடன், குழந்தைகளை ஒடுக்கி வைப்பவர்கள்மீது வெற்றி கொள்பவர்களாகவும் உள்ளனர். அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் அனைத்துக் குழந்தைகளையும் நாம் விடுவிப்போம்' என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மனதில் நிறுத்தி நடைபோடுவோம். [2025-01-07 07:36:25] கடவுளால் அன்பு செய்யப்படுவதே உண்மையான அழகுஉண்மையான அழகு என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவது என்றும், பாலன் இயேசுவைச் சந்திக்கச் சென்ற இடையர்களோடு நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டு செல்வோம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.டிசம்பர் 30 திங்கள் கிழமையன்று ஹேஸ்டாக் கிறிஸ்து பிறப்பு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் நுழைவோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார். ஒளி மற்றும் அமைதி, ஏழ்மை மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் கிறிஸ்து பிறப்புக் குடிலைப் பார்ப்போம், உண்மையான கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் இடையர்களோடு நுழைவோம். நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டுவருவோம். உண்மையான கிறிஸ்து பிறப்பின் ஆற்றலை சுவைப்போம். கடவுளால் அன்பு செய்யப்படுதலே உண்மையான அழகு என்பதை உணர்வோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். [2024-12-31 08:09:39] போர் என்பது சுயஅழிவை நோக்கிய உலகளாவிய போக்குஅமைதிக்கான வேண்டுகோள்கள் அனைத்தும் ஒரு காது வழியாகச் சென்று மற்றொறு காது வழியாக வெளியேறுவது கவலையடையச் செய்கிறது என்றும், போர் என்பது சுய அழிவை நோக்கிய உலகளாவிய போக்கு என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.அர்ஜென்டினா தொலைக்காட்சி நிறுவனமான Orbe 21 க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, போர், யூபிலி ஆண்டு, உரையாடல், உக்ரைன் சூழல், வெறுப்பு என்னும் தீமை, மன்னிப்பு கேட்கும் திறன், ஒருங்கிணைந்த பயணமும் செவிசாய்த்தலும், எல்லாருக்குமான திருஅவை என்பன பற்றிய தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். பன்னாட்டு அமைப்புகளின் அமைதிக்கான பல அழைப்புகள் எந்த விதமான பலன்களையும் தராமல் இருப்பது கவலை அளிக்கிறது, அடிப்படை பாசாங்குத்தனம் அதில் உள்ளது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், அமைதியைப் பற்றியும் பேசுகிறோம், போருக்கு ஆயுதமும் தருகிறோம் என்று சிலர் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் முதலீடு செய்வதில் மிகப்பெரிய வருமானம் ஆயுத தொழிற்சாலைகள் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், மாநாடுகள் மற்றும் அமைதிக் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அதே நேரத்தில் மக்களைக் கொலை செய்வதற்கான ஆயுதங்களும் தயாராகின்றன என்றும் , உக்ரைன் மற்றும் காசாவில் மக்கள் காரணமின்றி சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். "உரையாடல் இல்லை என்றால், அமைதி இருக்காது" என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், மனிதகுலம் மற்றும் திருஅவையின் பிரச்சினைகளை அரவணைத்து, உரையாடலின் வழியே அவற்றைத் தீர்க்க திருஅவை முயல்கிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். திருஅவைக்குள் இருக்கும் நாம் யாரும் புனிதர் அல்ல, நாம் அனைவரும் பாவிகளே, நமது குறைபாடுள்ள சூழ்நிலைகளைத் தீர்க்க திருச்சபை நமக்கு உதவுகிறது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நம் மோதல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும், மேலே இருந்து தளம் வெளியே வரவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். [2024-12-21 23:30:30] மியான்மாரில் போரால் துயருறும் கிறிஸ்தவம்!மியான்மாரின் காயா மாநிலத்தில் ஆயிரங்கணக்கானோர் புலம்பெயர்ந்தோராக உள்ளனர் என்றும், தற்போது உள்நாட்டில் அதிலும் குறிப்பாக, சின், மாக்வே மற்றும் ஸகைங் பகுதிகளில். 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் காடுகளிலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும், அருள்பணியாளர் Bernardino Ne Ne கூறியுள்ளதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காயா மாநிலத்தின் தலைநகர் லொய்காவில் இருந்து வந்த அருள்பணியாளர் Ne Ne அவர்கள், யங்கூனில் வாழ்க்கை சீராகவே செல்கின்றது, ஆனால் அரசியல் விவகாரங்களை விவாதிப்பதற்கோ அல்லது ஆட்சியை விமர்சிப்பதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றும், வழிபாட்டுத்தலங்களில் நிகழ்வுகள் நடைபெற சிக்கல் இல்லை என்றபோதிலும், படைவீரர்களின் கண்காணிப்புகளால் அவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் மொழிந்ததாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது. லொய்காவைப் போன்ற மோதல் இடம்பெறும் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள், பொருள்சேதங்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலையைப் பார்க்க முடிகிறது எனவும், பெரும்பாலான பங்குக் கோவில்கள் பங்குமக்களின் இடம்பெயர்தல் காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 39 பங்குத் தளங்களில் 9 மட்டுமே தற்போது செயல்படுகின்றன என அவர் கவலை தெரிவித்ததாகவும் கூறுகின்றது அச்செய்திக் குறிப்பு.அருள்பணியாளர் Ne Ne, உட்பட இன்னும் பல அருள்பணியாளர்கள் முகாம்களில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வாழ்வதன் மூலம் அவர்களுக்கு ஆன்மிக ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்குகின்றனர் மற்றும் அவர்களின் போராட்டங்களில் பங்கு கொள்கின்றனர் எனவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம். இந்தக் கடுமையான நிலைகளுக்கு மத்தியில், மியான்மாரின் கத்தோலிக்கத் தலைவர்கள் நிலையான அமைதியும் நீதியும் நிலவிட வேண்டுமென இறைவேண்டல் செய்கின்றனர் என்றும், சிறந்ததொரு எதிர்காலம் அமைந்து தாங்கள் மீண்டும் தங்களின் புனித இடங்களுக்குத் திரும்புவோம் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் என்றும், அருள்பணியாளர் Ne Ne கூறியதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்தித் தொகுப்பு. (Fides) [2024-12-21 23:28:20] பார்படோஸ் பிரதமரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்நவம்பர் 14, வியாழன், இன்று காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்படோஸ் பிரதமர் Mia Amor Mottley அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாகம் கூறியுள்ளது.இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் Mia Amor Mottley அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் துணைச் செயலர் பேரருள்திரு Mirosław Wachowski அவர்களையும் சந்தித்து உரையாடினார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது பார்படோஸ் மற்றும் திருப்பீடத்திற்கு இடையேயான நல்லுறவு குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது என்று கூறும் அவ்வறிக்கை, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமி மற்றும் விளைவுகள் போன்ற ஆர்வமுள்ள பல தலைப்புகள் குறித்தும், காலநிலை மாற்றம், நாடு மற்றும் மாநிலங்களின் தற்போதைய சமூக-அரசியல் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் உரைக்கிறது. பார்படோஸ் மக்களின் பொது நலனை மேம்படுத்துவதில் மீண்டும் உறுதியளிக்கப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு நிறைவடைந்தது என்றும் மேலும் கூறுகிறது அவ்வறிக்கை. பார்படோஸ் நாடு பற்றி பார்படோஸ் (Barbados) என்பது அமெரிக்கக் கண்டத்தில் கரிபியன் பிரதேசத்தில், மேற்கிந்தியத் தீவுகளின் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது கரிபியன் தீவுகளில் மிகவும் கிழக்கே அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த மக்கள் தொகை 287,010 ஆகும். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆப்பிரிக்க வம்சாவழியினர் ஆவர். 1966 நவம்பர் 30 இல், பார்படோஸ் ஐக்கிய அரசின் இரண்டாம் எலிசபெத்தை அரசியாக ஏற்றுக் கொண்டு, பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. 2021 அக்டோபரில், பார்படோசின் முதலாவது குடியரசுத் தலைவராக சான்டிரா மேசன் அறிவிக்கப்பட்டார். 2021 நவம்பர் 30 இல் பார்படோசு ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டு, நாட்டுத் தலைவர் பதவி எலிசபெத் மகாராணியிடம் இருந்து சாண்டிரா மேசனுக்கு வழங்கப்பட்டது. (நன்றி: தமிழ் விக்கிப் பீடியா) [2024-11-14 23:15:18] அகதிகளை கடினமான சூழலுக்குத் தள்ளும் காலநிலை மாற்றம்!உலகெங்கிலும் இடம்பெயர்ந்த 12 கோடி மக்களில் நான்கில் மூன்று பகுதிக்கு அதிகமானவர்கள் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை விளக்கி ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு COP29மாநாட்டில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் குறித்த இந்த அறிக்கை,13 நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அகதிகள் தலைமையிலான குழுக்கள் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காலநிலை மாற்றம் தொடர்புடைய கருப்பொருள்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான உடனடி முயற்சிகளுடன் அஜர்பைஜானின் பாகுவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான COP29 மாநாட்டில், தீவிர வறட்சி, வெள்ளம், சூறாவளி போன்ற காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் காலநிலை மாற்றத்தின் கடினமான விளைவுகளை எவ்வாறு தாங்குகிறார்கள் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, மோதல்கள் நடைபெறும் இடங்களில் உள்ள மக்களை காலநிலை மாற்றம் எவ்வாறு தாக்குகிறது என்றும், ஏற்கனவே ஆபத்தில் உள்ள மக்களை இன்னும் கடினமான சூழ்நிலைகளுக்கு தள்ளுகிறது என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை எத்தியோப்பியா, ஹெய்ட்டி, மியான்மர், சோமாலியா, சூடான் மற்றும் சிரியா நாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. தப்பிக்க இயலாத காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் இடம்பெயர்வில் முன்னிலையில் இருப்பவை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை தீவிர காலநிலை தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 3 இலிருந்து 65 ஆக உயரும் என்று தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் மோதல்கள் மற்றும் இடம்பெயர்வினால் மிகவும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு காலநிலை மாற்றம் என்பது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய ஒன்றாகும் என்று அகதிகளுக்கான ஐ .நா வின் உயர் ஆணையர் Filippo Grandi கூறியுள்ளார். போர்கள் மற்றும் வன்முறையின் பிடியில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகள் அதிகரிக்க வேண்டும் என்று காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க அதிக நிதி மற்றும் தளவாட ஆதரவு தேவைப்படும் என்று Grandi தெரிவித்துள்ளார். மேலும், போதிய வளங்களும் ஆதரவும் இல்லாவிட்டால் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்கள் மிகவும் துன்புறுவார்கள் என்றும் அவை நிகழாமல் தடுக்க தீர்வுகள் நம் கைகளிலேயே உள்ளன என்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளார் அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் Filippo Grandi. [2024-11-14 23:14:00] அன்னை ஓர் அதிசயம் - Sheshan அன்னைமரியா திருத்தலம்அன்பு நெஞ்சங்களே, விடைதேடும் வினாக்கள் என்ற தலைப்பில் கடந்த சில வாரங்களாக, இயேசுவின் சில கேள்விகள் குறித்து நோக்கினோம். இவ்வாரத்திலிருந்து அன்னை மரியாவின் விசுவாச வாழ்க்கையையும், அவர் மீது நாம் கொண்டுள்ள பக்தி முயற்சிகளையும் விளக்கும்விதமாக, உலக மரியா திருத்தலங்கள் குறித்த சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல் கொள்கிறோம்.பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றார். மெசபடோமியாவில் ஊர் என்ற இடத்திலிருந்து புண்ணிய பூமிக்கு இறைவன் அவரை அழைத்தபோது தனது முதிர்ந்த வயதிலும் கூட அனைத்தையும் துறந்துவிட்டு இறைவனின் வார்த்தையை நம்பி தனது விசுவாச பயணத்தை ஆரம்பித்தார் ஆபிரகாம். எனவேதான் கடவுள் அவருடைய தள்ளாடும் வயதிலும் ஒரு மகனை கொடையாக அளித்தார். தவமிருந்து பெற்ற அவருடைய ஒரே மகன் ஈசாக்கை பலியிட கேட்டபோது கூட தயங்காமல் இறைவனுக்கு அவனை பலியாக்க முன்வந்த ஆபிராகாமின் விசுவாசத்தைவிட வேறு எவரிடமும் அத்தகையை விசுவாசத்தை பழைய ஏற்பாட்டில் நம்மால் காண முடியாது. எனவேதான் அவரை விசுவாசத்தின் தந்தை என அழைக்கிறோம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் விசுவாசத்தின் முன்னோடியாக இருப்பதுபோல புதிய ஏற்பாட்டில் நமக்கு விசுவாசத்தின் எடுத்துக்காட்டாக இருப்பவர் அன்னை மரியா. கபிரேயல் தூதர் அன்னை மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது, ‘இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்’ என்று பதிலுரைத்தார். மரியாவின் இந்த சம்மதத்திற்கு அடிப்படை உந்து சக்தியாக இருந்தது அவருடைய விசுவாசமே என்பது உண்மையிலும் உண்மை. கி.பி. 2ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த புனித இரேனேயுஸ் கூறுவதுபோல, ஏவாள் தனது கீழ்படியாமையால் மனித குலத்திற்கு கொண்டுவந்த பாவகட்டுகளுக்கு அன்னை மரியா தனது கீழ்ப்படிதலால் தீர்வு கொண்டு வந்தார். ‘எனதான்மா இறைவனை ஏற்றி போற்றுகின்றது. தாழ்நிலை இருந்த அடிமையை இறைவன் கடைக்கண் நோக்கினார். இனி எல்லா தலைமுறையினரும் என்னை பேறுடையாள் என போற்றுமே’, என்ற விசுவாச கீதத்தை மகிழ்ச்சியோடு பாடிய நம் அன்னை மரியாவுக்கு இவ்வுலகில் இருக்கும் திருத்தலங்களில் சிலவற்றைக் குறித்து வரும் வாரங்களில் நோக்குவோம். முதலில் சீனாவிலிருந்து நம் பயணத்தைத் துவங்குவோம். Sheshan அன்னைமரியா திருத்தலம், சீனா கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்யும் சகாய அன்னைமரித் திருவிழாவை மே 24ஆம் தேதியன்று சிறப்பிக்கிறோம். சகாய அன்னைமரியா, சீனாவின் ஷங்காயில் Sheshan அன்னைமரியா என்று அழைக்கப்பட்டு மிகவும் போற்றப்பட்டு வருகிறார். இந்த Sheshan அன்னைமரியா பசிலிக்கா, Songjiang மாவட்டத்தின் Shanghai நகரில் 100 மீட்டர் உயரமுடைய Sheshan குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கியத் திருத்தலங்களில் ஒன்றாகவும், சீனாவின் தேசியத் திருத்தலமாகவும், மைனர் பசிலிக்காவாகவும் விளங்குகிறது. சீனாவில் கலாச்சார புரட்சி ஏற்பட்ட பின்னர், இந்தத் தேசியத் திருத்தலம் கிழக்கு ஆசியாவில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாக உள்ளது. Sheshan அன்னைமரியா, சகாய அன்னை என்ற பெயரில் மிகுந்த வணக்கத்துக்கு உரியவராய்ப் போற்றப்பட்டு வருகிறார். Sheshan அன்னைமரியாத் திருவிழா ஆண்டுதோறும் மே 24ஆம் தேதியன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சீனாவில் இந்தத் திருத்தலத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் புனித அன்னை ஆலயம் என்பதாகும். Songjiang மாவட்டத்தில் கத்தோலிக்க விசுவாசம் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக கத்தோலிக்க விசுவாசம் தடைசெய்யப்பட்டிருந்தபோது அப்பகுதி மக்கள் மறைவாக தங்களது விசுவாசத்தைக் கடைப்பிடித்து வந்தனர். 1844ஆம் ஆண்டில் Sheshan சென்ற இயேசு சபை அருள்பணியாளர் Claude Gotteland, அப்பகுதியின் அமைதியான சூழல் மற்றும் அழகினால் ஈர்க்கப்பட்டு ஓய்வுபெற்ற அருள்பணியாளர்களுக்கென ஓர் இல்லம் கட்டத் தீர்மானித்தார். எனினும் இவரது கனவு நனவாகும் முன்னர் 1856ஆம் ஆண்டில் இவர் இறந்தார். அவருக்குப் பின்னர் 1863ஆம் ஆண்டில் Sheshan வந்த இயேசு சபை அருள்பணியாளர் Joseph Gonnet, அந்த Sheshan முழுக் குன்றையும், அதன் தென் பகுதியையும் விலைக்கு வாங்கி, சரிவான பகுதியில் வயதான மற்றும் நோயுற்ற மறைபோதகர்களுக்கென இல்லங்களையும், ஓர் ஆலயத்தையும் கட்டினார். அடுத்த ஆண்டில் Desjacques Marin என்பவர், அந்தக் குன்றின் உச்சியில் அறுகோணமுடைய ஒரு கூடார மண்டபத்தைக் கட்டி அதில் அன்னைமரியா திருவுருவத்தை வைத்தார். இந்த அன்னைமரியாத் திருவுருவம், பாரிசிலுள்ள வெற்றியின் அன்னைமரியா திருவுருவம் போன்று வடிவமைக்கப்பட்டது. 1868ஆம் ஆண்டு மே முதல் தேதியன்று இயேசு சபை ஆயர் Adrien Languillat என்பவர் அந்த ஆலயத்தையும் Sheshan அன்னைமரியா திருவுருவத்தையும் அருள்பொழிவு செய்தார். அன்றுமுதல் சகாய அன்னை திருவிழாவன்று நூற்றுக்கணக்கானத் திருப்பயணிகள் அங்கு வந்து அந்த ஆலயத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட கூடாரத்தில் இடம்பெற்ற திருப்பலியில் பங்கெடுக்கத் துவங்கினர். Qing அரசு பரம்பரையை வழிநடத்திய Manchuவுக்கு எதிராக தென் சீனாவில் 1850ஆம் ஆண்டு முதல் 1864ஆம் ஆண்டுவரை Taiping கடும் உள்நாட்டுக் கலவரம் இடம்பெற்றது. இதில் குறைந்தது 2 கோடி அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இப்புரட்சியின்போது கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டது. ஷங்காயில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல முற்சார்புத் தாக்குதல்களும் பதட்டநிலைகளும் ஏற்பட்டன. அப்போதைய அப்பகுதியின் இயேசு சபை தலைவர், Sheshan குன்றின் உச்சிக்கு ஏறி அங்கிருந்த அன்னைமரியாவின் திருவுருவத்துக்கு முன்பாக உருக்கமாகச் செபித்தார். இந்தப் பகுதி, தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட்டால் அவ்விடத்தில் ஆலயம் கட்டுவதாக அன்னைமரியாவிடம் வாக்குறுதி அளித்தார். அவரின் செபம் கேட்கப்பட்டது. ஷங்காய் மறைமாவட்டமும் சேதமின்றி காப்பாற்றப்பட்டது. அதனால் அன்னைமரியா தங்களைப் பாதுகாத்ததற்கு நன்றியாக, அக்குன்றின் உச்சியில் ஆலயம் கட்டுவதற்கு அந்த இயேசு சபை அருள்பணியாளர் 1870ஆம் ஆண்டு செப்டம்பரில் மக்களிடம் உதவி கேட்டார். 1871ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆயர் Languillat புதிய ஆலயத்துக்கு அடிக்கல்லை ஆசீர்வதித்தார். 60 ஆயிரம் விசுவாசிகள் அன்றையத் திருப்பலியில் கலந்து கொண்டனர். இந்த ஆலயம் குன்றின் உச்சியில் இருந்ததால் கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. ஆயினும், தன்னார்வத் தொண்டர்கள் இதற்கு உதவி செய்தனர். புதிய ஆலயம் கோதிக் கலைவடிவில் 1873ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு அருள்பொழிவு செய்யப்பட்டது. அக்குன்றுக்கு ஏறும் பாதையில் 14 சிலுவைப்பாதை நிலைகளும் அமைக்கப்பட்டன. மே மாதம் முழுவதும் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்குத் திருப்பயணமாக வரத் தொடங்கினர். முதல் ஆண்டிலேயே ஏறக்குறைய 14 ஆயிரம் பக்தர்கள் அங்கு வந்தனர். ஆயர் Languillat அவர்களின் வேண்டுகோளின்பேரில் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர், மே மாதத்தில் ஆண்டுதோறும் இங்குத் திருப்பயணம் மேற்கொள்வோருக்குப் பரிபூரண பலன்களை 1874ஆம் ஆண்டில் அருளினார். 1875ஆம் ஆண்டில் இந்த Sheshan அன்னைமரியா திருத்தலத்தில் பல ஆலய மணிகள் வைக்கப்பட்டன. இவைகளை அடிக்கும்போது தூர இடங்களிலிருந்தும் அவைகளைக் கேட்க முடியும். 1894ஆம் ஆண்டில், அக்குன்றுக்குச் செல்லும் பாதித் தூரத்தில் சீனக் கலைவடிவில் மற்றோர் ஆலயமும் கட்டப்பட்டது. இதன் முகப்பில் சீன மொழியில், ‘குன்றின் உச்சியிலுள்ள அன்னைமரியா ஆலயத்துக்கு ஏறுவதற்கு முன்னர் இங்கு சற்று இளைப்பாறி செபித்துவிட்டுச் செல்லுங்கள்’ என எழுதப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாக 1925ஆம் ஆண்டில் பெரியதோர் ஆலயம் கட்டப்பட்டது. ஜப்பானியர்கள் சீனர்களை 1942ஆம் ஆண்டில் ஆக்ரமித்திருந்தபோது, இந்த sheshan அன்னைமரியாத் திருத்தலத்தை மைனர் பசிலிக்காவாக அறிவித்தார் திருத்தந்தை 12ஆம் பத்திநாதர். அதே ஆண்டு மே 12ஆம் தேதி அன்னைமரியாவின் திருவுருவம் முடிசூட்டப்பட்டது. 1946ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி திருப்பீடத்திடமிருந்து கிட்டிய சிறப்பு ஆசீருடன் sheshan அன்னைமரியா, சகாய அன்னைமரியா என முடிசூட்டப்பட்டார். எனவே இந்த Sheshan அன்னைமரியா, கிறிஸ்தவர்களுக்குச் சகாயம்புரியும் சகாய அன்னை என அழைக்கப்படலானார். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் அதில் கலந்து கொண்டனர். இத்திருத்தலம் மீண்டும் திருப்பயணத் தலமானது. சீனாவில் ஏற்பட்ட கலாச்சாரப் புரட்சியின்போது இந்த ஆலயம் கடுமையாய்ச் சேதமாக்கப்பட்டது. திருவுருவங்களும் சிலுவைப்பாதை நிலைகளும் அழிக்கப்பட்டன. 1981ஆம் ஆண்டில் ஷங்காய் அரசு இத்திருத்தலத்தை தேசிய கத்தோலிக்கத் திருஅவையிடம் ஒப்படைத்தது. ஷங்காய் உயர்மறைமாவட்டம் அதனை மீண்டும் பழுது பார்த்தது. 2008ஆம் ஆண்டில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் sheshan அன்னைமரியாவுக்கு தனது கைப்பட ஒரு செபம் எழுதினார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் கி.பி. 345ஆம் ஆண்டில் சகாய அன்னைமரியா பக்தியை முதன் முதலில் பரப்பினார். அதற்குப் பின்னர் புனித ஜான் போஸ்கோவும் இப்பக்தியைப் பரப்பினார். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் உக்ரேய்னில் 1030ஆம் ஆண்டிலிருந்து சகாய அன்னைமரியா பக்தியைக் கொண்டுள்ளனர். sheshan அன்னைமரியாவான சகாயத் தாயிடம் செபிப்போம். சீனாவில் வாழும் நம் சகோதர சகோதரிகளுக்காக, சீனாவின் நம்பிக்கையான அத்தாயின் பரிந்துரையை நாடுவோம். [2024-11-14 23:13:05] |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்