இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

  இறந்தோருக்காக செபம்

இறந்தோருக்காக வேண்டுதல்

இறந்தோரிடமிருந்து இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழத்ச் செய்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா, சாவுக்குரிய எங்கள் உடலுக்கும் நீர் உயிர் அளிப்பவர் என்பதால், இறந்த உம் அடியார்....... (பெயர்)க்காக நாங்கள் விசுவாசத்துடன் வேண்டுதல் புரிகிறோம். உம் திருமகனோடு மகிமையில் உயிர்ததெழும்படி இவர் அவரோடு திருமுழுக்கில் புதைக்கப்பட்டார். விசுவாசத்துடனும் விருப்புடனும் இவர் உண்ணும்படி வானக உயிருள்ள அப்பத்தை இவருக்கு அளித்தீர். நாங்கள் உருகும் உள்ளத்தோடு இவருக்காக செய்யும் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்தருளும். சாவுக்குரிய தளைகளிலிருந்து இவரை விடுவித்து, உயிர்த்தெழும் நாளில் இவர் உம் திருமுன் வந்து சேரவும், உம் புனிதரோடு பேரின்ப மகிமையில் பங்குபெறவும் அருள்வீராக.
உயிருள்ள இறைவனின் திருமகனாகிய கிறிஸ்துவே. உம் நண்பர் இலாசரைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்தீரே, உமது திருஇரத்தத்தால் நீர் மீட்டருளிய இந்த அடியாருக்குப் புதுவாழவும் மகிமையும் அளித்தருளும். உம்முடைய ஐந்து காயங்களை முன்னிட்டு வேண்டுகிறோம். உத்தரிக்கிற நிலையில் உள்ளவர்கள், யாரும் நினையாத நிலையில் செப உதவி பெற இயலாதாவர்கள், குறிப்பாக ......... (பெயர்) ஆகியோரின் வேதனையைக் குறைத்து இவர்களை விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறோம்.
நயீன் ஊர்க் கைபெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுத்து, உம் பரிவிரக்கத்தால் அவருடைய கண்ணீரைத் துடைத்தீரே, நாங்கள் அன்பு செய்தவரை இழந்து அழுது புலம்பும் இந்நேரம் எமக்கு ஆறுதல் அளித்தருளும். "இவருக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு. இவரது வாழ்வு மாறுபட்டுள்ளதேயன்றி, அழிக்கப்படவில்லை. இவருக்காக விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாயிருக்கிறது" என்ற திண்ணமான உண்மையை எண்ணி, நாங்கள் அமைதிபெற அருள்வீராக.
உமது பேரிரக்கத்தால் ஆண்டவரே, இவருக்கு முடிவில்லா இளைப்பாற்றியை அளித்தருளும். உம் அடியார் ........(பெயர்) தம்மைப் படைத்தவரும் மீட்பவருமாகிய உம்மை விரைவில் கண்டு என்றென்றும் மகிழச்செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் ஜெபம்

திவ்விய இயேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய இயேசுவே சிலுவை பாரத்தால் அதிகரித்த காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து இறந்துபோன உம் அடியார் .................. அவர்களை உமது பிரத்தியட்சணமான தரிதனத்தில் பார்த்து உமது மகிமையில் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.சர்வ வல்லப பரிசுத்தரே எங்கள் பேரிலும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும். -ஆமென்.

பாலோகத்தில்.....
அருள் நிறைந்த மரியே...
பிதாவுக்கும்...